Sunday, November 29, 2009

பாவம்... அந்த சூரியகாந்தி...

- சி. பாலச்சந்திரன் (ஆசிரியர் "ஈழநாடு")

சூரிய தேவனின் வரவினால் சூரியகாந்திப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. சூரிய தேவனை வாழ்த்தித் துதித்தன. சூரிய தேவனே! தங்களது வாழ்தலுக்கான உயிர் சக்கி எனத் தொழுதன. நண்பகல் பொழுது நெருங்க நெருங்க சூரிய தேவனின் ஒளிக் கதிர்களின் வெப்பம் அதிகரித்துச் சென்ற போதும், அதனையும் சுகமாகவே மகிழ்ந்து அனுபவித்தன சூரியகாந்திப் பூக்கள்.

மாலைப் பொழுது நெருங்கி வந்து கொண்டிருந்த வேளையில், காட்டெருமைக் கூட்டம் ஒன்று இந்தத் தோட்டத்தினுள் நுழைந்து அத்தனை செடிகளையும் நாசம் பண்ணின. சூரிய காந்திகள் குய்யோ முறையோ என்று ஓலமிட்டன. ஆனாலும் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட முடியாததாகிவிட்டது.

அந்த மூத்த சூரியகாந்தி இந்த அழிவுகளிலிருந்து தான் மட்டுமாவது தப்பிவிடலாம் என்று முயற்சி செய்தது. எருமைக் கூட்டத்தின் தலைமை எருதுடன் சமரசம் பேசியது. 'என்னை விட்டுவிடு! என்னை மட்டும் விட்டுவிடு! உனக்கு என்ன வேண்டுமோ, அத்தனைக்கும் நான் உனக்கு உதவுகின்றேன்' என்று ஓலம் போட்டது.

'உங்கள் இனம் சூரிய தேவனைக் கடவுளாக வழிபடுகின்றது. நிலத்தில் வாழும் எங்களது சக்தியை உணரவில்லை. நாங்கள் நினைத்தால் எங்களால் உங்களை அழித்து விட முடியும்... எங்கள் சக்திக்கு மேற்பட்டவனா இந்த சூரிய தேவன்...? எங்களைத் தொழுது... உங்களை வாழவிடும் தெய்வங்களாக எங்களை ஏற்றுக்கொண்டால் உன்னையும் உனது குடும்பத்தினரையும் விட்டு விடுகிறேன். உன்னை எங்கள் பட்டித் தொழுவத்தில் இராஜ மரியாதையுடன் வாழ வைக்கிறேன்' என்றது.

அந்த சூரியகாந்திக்கு வேறு தெரிவு கிடைக்கவில்லை. எருமை கூறிய அத்தனைக்கும் ஒப்புக்கொண்டு, அந்த எருமையுடன் புறப்பட்டது.

போகும் பாதையில் அந்த எருமை கேட்டது... 'உண்மையாகவே... உங்கள் இனம் எங்களைக் கடவுளாக ஏற்றுக்கொள்வார்களா...?' சந்தேகத்துடன் கேட்டது.

சூரிய காந்தி எதிர்பார்த்திராத கேள்வி அது. எருமையின் வாயில் அதன் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. வேறு வழியின்றித் தவித்த அந்த சூரியகாந்தி 'அது உடனடியாகச் சாத்தியப்படாது. சாத்தியப்படாது. நான் முதலில் என்னை சூரிய தேவனாக ஏற்றுக்கொள்ளச் செய்கின்றேன். அதன் பின்னர் எங்கள் இனத்தை உங்கள் விருப்பப்படியே எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளச் செய்ய என்னால் முடியும். தயவு செய்து எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறிவிடாதே' என்று கெஞ்சியது.

'நீ என்ன செய்வாயோ... ஏது செய்வாயோ... எங்களைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளச் செய்யாவிட்டால் உன் எதிர்காலத்தையே சிதைத்து விடுவோம்' என்று மிரட்டியது.

அதற்குச் சம்மதித்த அந்தச் சூரியகாந்தியை அதன் கூட்டத்திடம் தொடர்பு கொள்ள அனுமதித்தது. மாலை சூரிய தேவன் மறைந்த தருணத்தில் சூரியகாந்தி தன் கூட்டத்துடன் பேசியது.

'அன்பான சூரியகாந்திச் செடிகளே! சூரிய தேவன் மறைந்துவிட்டான். இனி அவன் மீண்டும் வருவதற்குச் சாத்தியமே இல்லை. அவன் மறையும் முன்னதாக எனக்கு ஒரு ஆணை இட்டுள்ளான்.

சூரிய தேவன் இல்லாத உங்கள் குறையை என்மூலம் தீர்க்கும் தனது முடிவை எனக்குத் தெரிவித்துவிட்டே மறைந்தான். எனவே நான்தான் இனி உங்கள் சூரிய தேவன். என்னையே நீங்கள் கூரிய தேவனாக ஏற்றுக்கொண்டு தொழ வேண்டும். என்றது.

சூரியகாந்திகள் மனதுக்குள் சிரித்துக்கொண்டன. எருமையின் வாயில் அகப்பட்டுக்கொண்ட தனது நண்பனுக்காக அவை வருந்தின. எருமையின் திட்டத்தை அந்த சூரியகாந்தி நிறைவேற்றத் துடிக்கும் அதன் அவலத்தைப் புரிந்து கொண்டன.

இந்த உருவக நாடகத்தில் பாவப்பட்ட கூரியகாந்தியாக தளபதி ராம் அவர்களும், தலைமை எருமையாக கோத்தபாய ராஜபக்ஷவும் திறமையாக நடித்து எருமைக் கூட்டத்தின் பல விருதுகளைத் தட்டிக்கொண்டாலும் சூரியகாந்திகள் அதற்காக அலட்டிக்கொள்ளவில்லை.

'பாவம்... அந்த சூரியகாந்தி...' என்ற வருத்தத்துடன்... விடியும் பொழுதில் சூரிய தேவன் மீண்டும் வருவான்' என்ற நம்பிக்கையுடன் அடுத்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தன.

Saturday, November 28, 2009

என் இரு கைகளையும் பின்னால் கட்டி விலங்கிட்டபோது உணர்ந்தேன்

-செந்தமிழன் சீமான்

என் இரு கைகளையும் பின்னால் கட்டி விலங்கிட்டபோது உணர்ந்தேன் உலக அரங்கில் தமிழரின் அடிமை வாழ்வை. உலக நாடுகளிலேயே அதிகம் காதலித்த நாடு கனடா. காரணம் தனிநபர் உரிமை, பேச்சுச் சுதந்திரம் நீதியான முறையில் கடைப்பிடிக்கப்படும் நாடு கனடா. என் பேச்சு வன்முறையை தூண்டுகிறதாம். 2007லும் வந்து பேசியிருக்கிறேன் அதன் பின் என்ன வன்முறை நிகழ்ந்தது எனக் கேட்டேன். பதில் தெரியாது முழித்தார் கனேடிய குடிவரவு குடியகல்வு துறை அதிகாரி. 2007 ல் களத்தில் தலைவரும் போராளிகளும் நின்றபோது கனடாவின் அமைதியை சீர்குலைக்காத என் பேச்சு, அனைத்தையும் அழித்துவிட்டோம் என்று உலகமே ஒப்புக்கொண்ட பின்னரான இப்போதா சீர்குலைத்துவிடும்..? பலமுறை கெஞ்சினேன்.. ஒருமுறை பேசிவிட்டு போகிறேன் என்று, முதலில் "ஓம்" என்றார்கள்; பிறகு தொலைபேசியில் யாருடனோ பேசிவிட்டு "மாட்டேன்" என்றார். "ஏன்?" என்றேன் "இதுதான் அரசியல்" என்றார் கனேடிய குடிவரவு குடியகல்வு துறை அதிகாரி.

Thursday, November 26, 2009

சீமான் கைதுசெய்யப்படவில்லை

சீமான் கைதுசெய்யப்படவில்லை குடிவரவு குடியகல்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கனடா அவரை நாடுகடத்த வேடிக்கை பார்த்து நின்றால் நாம் தமிழரா..??
கனேடிய அரசு இந்த தவறை இழைக்குமானால் கொடுங்கோல் சிங்கள அரசுக்கும் கனடாவுக்கும் எந்த வித்தியாசம் இல்லாமல் போய்விடும். பேச்சு சுதந்திரம் அற்ற நாடாய் மாறி பாழாய்ப் போகும்.

Wednesday, November 25, 2009

அது நடந்து 37 வருடங்களாகியும் மாறவேயில்லை உலகம்..!

இந்தச் சிறுமி... இப்போது!

நன்றி அ.முத்துலிங்கம்

சில முக்கியமான சம்பவங்கள் நடக்கும்போது அந்தத் தருணம் படம் போல மனதிலே பதிந்துவிடும். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது நேருவின் உரை ரேடியோவில் ஒலிபரப்பானது. நான் அப்போது சிறுவன். எங்கள் கிராமத்தில் இருந்த ஒரே ஒரு ரேடியோ பெட்டியைச் சுற்றி 10, 15 பேர் நின்றார்கள். ஒன்றும் புரியாவிட்டாலும் அந்த இருட்டறையில் நானும் நின்றபடி கேட்டேன். அந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி கென்னடியைச் சுட்டுக் கொன்றபோது, நான் ஒரு நூலகத்தில் அமர்ந்து சோதனைக்குத் தயாரித்துக்கொண்டு இருந்தேன். நான் மேசையில் எந்தப் பக்கத்தில், எந்தத் திசையை நோக்கி, என்ன புத்தகம் படித்தேன் என்பது இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது.

1972-ம் ஆண்டு ஒரு ஜூன் மாதம். எங்கள் வீட்டின் வெளித் திண்ணையில் ஒரு பிரம்புக் கதிரையில் அமர்ந்து நான் சாவதானமாக 'டைம்' வார இதழைப் புரட்டிக்கொண்டு இருந்தேன். அதிலே பார்த்த ஒரு புகைப்படம் என்னைத் திகைக்கவைத்தது. ஒரு சிறுமி நிர்வாணமாக கேமராவை நோக்கிக் கைகளை விரித்து, வாயை ஆவென்று திறந்துவைத்துக்கொண்டு, ஓடி வருகிறாள். அவளைச் சுற்றி இன்னும் பல குழந்தைகள். மனதை உலுக்கிய அந்தக் காட்சி இன்று வரை என் நினைவில் இருந்து அழியவில்லை.

வியட்கொங் படைகள் தராங்பாங் கிராமத்துக்குள் ஊடுருவிய தகவல் தென் கொரியப் படைகளுக்குக் கிடைக்கிறது. கிராம மக்களுக்கு முன்கூட்டியே ஆபத்து வரப்போவது தெரியும். அன்று மத்தியானம் சோற்றுக்கஞ்சி குடித்துவிட்டு, ஏதோ நடக்கப்போகிறது என்று மக்கள் காத்திருந்த சமயம், சிவப்புச் சிவப்பாக விமானத்தில் இருந்து திரவப் பொட்டுகள் விழுகின்றன. அவை குண்டுகள் அல்ல, எங்கே குண்டுகள் போட வேண்டும் என்பதை விமானம் அடையாளமிட்டுத் தீர்மானிக்கிறது. யாரோ கத்தினார்கள்... 'ஓடுங்கள் ஓடுங்கள்' என்று. எல்லாச் சிறுவர் - சிறுமியரும் ஓடத் தொடங்கினார்கள். 'டுப் டுப்' என்று நாலு சத்தம் மாத்திரம் கேட்கிறது. பெரிய குண்டு விழுந்து வெடிக்கும் சத்தமோ, நிலம் பிளக்கும் ஓசையோ இல்லை. நாப்பாம் குண்டுகள் அப்படித்தான், பெரிய சத்தம் எழுப்புவது இல்லை. ஓசை இல்லாமல் விழுந்து, விழுகிற இடத்தைத் தீப்பிழம்பாக மாற்றிவிடும்.

அந்தச் சிறுமி அணிந்திருந்த மெல்லிய பருத்தி ஆடை அப்படியே கணத்தில் எரிந்து பொசுங்கிவிட்டது. 'எரிகிறது... எரிகிறது' என்று கதறியபடி ஓடி வந்த சிறுமியைப் படம்பிடித்தவர் நிக் உட் என்ற புகைப்படக்காரர். அவர் சிறுமியை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார். அந்தச் சிறுமியின் பெயர் கிம் ஃபுக். போரின் கொடூரத்தை உணர்த்தும் அந்தப் படம் 12 ஜூன் 1972 டைம் இதழில் வெளியாகிறது. உடனே மற்ற பத்திரிகைகளும் படங்களை வெளியிட, உலகில் கோடிக்கணக்கானவர்கள் பார்க்கிறார்கள். 'படத்தில் இருக்கும் சிறுமி' என்று கிம் அறியப்பட்டார். படத்தை எடுத்த நிக் உட்டுக்கு புலிட்சர் பரிசு கிடைக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் அந்தப் படத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார். அது நிஜமானதுதானா என்று தன் உதவியாளரிடம் பலதடவை கேட்டுத் தெளிவுபெறுகிறார். அந்தப் படம் பிரசுரமான சில மாதங்களிலேயே பாரிஸில் வியட்நாம் போர் நிறுத்தப் பிரகடனம் கையப்பம் ஆகிறது.

மாரியம் பீச் என்ற பெண் மணி Uncle Tom's Cabin என்ற நாவலை எழுதினார். அமெரிக்காவில் அடிமைகளின் விடுதலைக்கு அந்த நூல் காரணமாக அமைந்து, ஒரு பெரிய போரே நடந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் ஒருமுறை மாரியமைச் சந்தித்தபோது 'இந்தச் சிறிய பெண்ணா அந்தப் பெரிய போரை ஆரம்பித்தவர்' என்று சொன்னாராம். அதுபோலவே வியட்நாம் போர் நிறுத்தத்துக்கு அந்தச் சிறுமியின் படம் முக்கியக் காரணம். என்றென்றைக்கும் உலகப் புகழ்பெற்ற புகைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இன்றைக்குச் சிறுமியின் பெயர் மறந்துவிட்டாலும் முகத்தைப் பலரும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். 'படத்தில் இருக்கும் சிறுமி' என்று சொன்னால் எல்லோருமே புரிந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் வாஸந்தியிடம் இந்தப் பெண்ணைச் சந்தித்ததைச் சொன்னபோது, அந்தப் பெண்ணுக்கு அந்த நாள் ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார். உடம்பு முழுக்க நெருப்புத் தழும்பைக் காவித் திரிபவர் எப்படி மறக்க முடியும்? கிம் இப்போது கனடாவில் குடிபெயர்ந்து வாழ்கிறார். 46 வயதான அவர் அரசு சாரா தொண்டு நிறுவனத்தை நடத்தி, உலகிலே போரில் பாதிக்கப்பட்ட சிறுவர் - சிறுமியருடைய நல்வாழ்வுக்காகப் பாடுபடுகிறார். இவருடைய தன்னலம் அற்ற சேவையைப் பாராட்டி, கனடிய அரசின் 'Order of Ontario' விருது இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. யோர்க் பல்கலைக்கழகம் Doctor of Law பட்டம் கொடுத்திருக்கிறது. அத்துடன் யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராகவும் பணி ஆற்றுகிறார்.

ஒருநாள் அவரைச் சந்திக்க முடிந்தது. 37 வருடங்களுக்கு முன்னர் டைம் பத்திரிகையில் பார்த்த சிறுமியா இவர் என்ற வியப்பு ஏற்பட்டது. சதுரமான சிவப்பு முகத்தில் சிநேகமான கண்கள். செங்கல் நிற ஆடையும் சாம்பல் நிற மேலாடையும் அணிந்திருந்தார். சின்னப் பாதங்களில் ஒரு சீனப் பெண்போலத் தள்ளாட்டமாக நடந்துவந்தது அவருக்கு ஒரு வசீகரத்தைக் கொடுத்தது. கைப்பையை நாற்காலியில் மாட்டிவிட்டு, கால்களை நீட்டி சாவதானமாகச் சாய்ந்து உட்கார்ந்து சிரித்தபடியே பேசினார். இவரா அந்தச் சிறுமி என்ற திகைப்பு அடங்கச் சில நிமிடங்கள் எடுத்தன. எங்கே தொடங்குவது என்று தெரியவில்லை. இதற்கு முன்னர் அவரிடம் நூறு பேர் கேட்டிருக்கக்கூடிய ஒரு கேள்வியைக் கேட்டேன். ''நீங்கள் எரிந்துகொண்டு ஓடியபோது எப்படி உணர்ந்தீர்கள்?''

''அந்தச் சிறு வயதிலும் உயிரின் மேல் இருக்கும் ஆசை தெரிந்தது. அது தவிர, உடம்பு பற்றி எரியும் வேதனை. அப்படியே ஓடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று தோன்றியது. வெகுதூரத்தைக் கடந்துவிட்டால் வலி போய்விடும் என்று நினைத்தேன்.''

''சிகிச்சையில் உங்களுக்குப் பூரண குணம் கிடைக்கவில்லையா?''

''நான் நீண்ட காலத்தை மருத்துவமனைக் கட்டில்களில் கழித்தேன். 14 மாதங்களில் என் உடம்பில் 17 அறுவை சிகிச்சைகள் செய்தார்கள். அது ஒரு அமெரிக்கர் நடத்திவந்த மருத்துவமனை. அங்கே வேலை செய்த மருத்துவர்களும் தாதிகளும் கனிவுடனும் சேவை மனப்பான்மையுடனும் சுறுசுறுப்பாக வேலை செய்வதைக் கண்டேன். அவர்களிடம் எனக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது. நான் வளர்ந்து பெரியவளாகும்போது எப்படியும் படித்து மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால், விதி என்னைத் துரத்தியது. என் பதின்ம வயதில் மருத்துவப் படிப்பைத் தொடங்கினேன். ஆனால், நான்தான் 'படத்தில் இருக்கும் சிறுமி' என்பதை வியட்நாமிய கம்யூனிஸ்ட் அரசு கண்டுபிடித்தது. என்னுடைய படிப்பை நிறுத்தி, என்னைப் பரப்புரை செய்யும் அரசு ஊழியராக நியமித்தது. என் விருப்பத்தைக் கேட்காமலே நான் காட்சிப் பொருள் ஆக்கப்பட்டேன்.''

''அதிலிருந்து எப்படி மீண்டீர்கள்?''

''எரிந்து தழும்பேறிய என் உடம்பைக் கண்ணாடியில் பார்க்க எனக்கே அருவருப்பாகவும், அவமானமாகவும் இருக்கும். படிக்க முடியாத கவலை வேறு எனக்கு. உடம்பில் 24 மணி நேரமும் ஓயாத வலி. ஒருநாள் திறந்தவெளியில் நின்று அண்ணாந்து வானத்தைப் பார்த்து உரத்துக் கத்தினேன். 'ஏன் நான்? ஏன் நான்? என்னை ஏன் தெரிவுசெய்தாய் ஆண்டவனே? நீ அங்கே இருப்பது உண்மையானால், என்னை வாழவிடு அல்லது சாகவிடு.' அதன் பின்னர் என்ன நடந்ததோ தெரியாது. படிப்படியாக என் வாழ்க்கை மாற்றமடைய ஆரம்பித்தது. என் அம்மா சொல்லும் வியட்நாமியப் பழமொழியை நினைத்துக்கொள்வேன். ஒரு முழு யானையைச் சாப்பிட நினைப்பவள், முதலில் ஒரு வாய் உணவில் ஆரம்பிக்க வேண்டும். வேதனையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க வேண்டும். ஓர் இரவில் அது மறைந்துபோகாது. எனக்குக் கிடைத்த ஒவ்வொரு நாளும் ஒரு கொடை என்பதை உணர்ந்தேன். நடந்து முடிந்த சரித்திரத்தை நான் மாற்ற முடியாது. ஆனால், இனி வரும் சரித்திரத்தை என்னால் மாற்ற முடியும்.'

''எப்படி கனடா வந்தீர்கள்?''

''கியூபாவில் மேற்படிப்பு படிக்க எனக்கு அனுமதி கிடைத்தது. அங்கே எனக்கும் இன்னொரு வியட்நாமிய மாணவனுக்கும் இடையில் காதல் முகிழ்த்தது. நான் படிப்பை இடை நிறுத்தி அவரை மணமுடித்தேன். எங்கள் தேனிலவைக் கொண்டாட ரஷ்யாவுக்குச் சென்றோம். திரும்பி வரும் வழியில் எங்கள் விமானம் கனடாவின் காண்டர் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இறங்கியது. அந்த நேரம் நானும் என் கணவரும் அரசியல் தஞ்சம் கோரினோம். அன்று விமானத்தில் எரிபொருள் போதிய அளவு இருந்திருந்தால் இன்று நான் கனடாவில் சுதந்திரமான காற்றைச் சுவாசிக்க மாட்டேன்.''

''நீங்கள் கனடா வந்த பின்னர், உங்கள் பழைய வாழ்க்கையை நினைவூட்டும் யாரையாவது மீண்டும் சந்தித்தீர்களா?''

''ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்தில் 1996-ம் ஆண்டு நடந்த Viet-nam War memorial விழாவில் என்னைப் பேச அழைத்திருந்தார்கள். நான் என் பழைய வலிகளையும், துயரங்களையும் சபையினருடன் பகிர்ந்துகொண்டேன். விழா முடிந்த பின்னர், முன்னை நாள் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் என்னை வந்து சந்தித்தார். அவருடைய பெயர் ஜான் ப்ளம்மர். அன்று நாலு நாப்பாம் குண்டுகளையும் வீசிய விமானத்தின் கட்டளை அதிகாரி. அவர் கண்களில் நீர் வழிந்துகொண்டு இருந்தது. என்னைக் கட்டி அணைத்து, 'நீ என்னை மன்னித்துவிட்டாயா?' என்று கேட்டார். 'உங்களையும் குண்டுபோட்ட விமானியையும் நான் மன்னித்துவிட்டேன்' என்றேன்.''

''நீங்கள் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறீர்கள். சமீபத்தில் நடந்து முடிந்த ஈழத்துப் போரில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர்; காணாமல் போயினர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் காயம்பட்டனர். கர்ப்பத்தில் இருந்த சிசுகூடக் காயம் அடைந்திருக்கிறது. போரின் நடுவில் விஸ்வமடுவில் பிறந்த ஒரு குழந்தையின் வலது தொடையில் துப்பாக்கிச் சன்னக் காயம் இருந்ததைப் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். நீங்கள் இலங்கைக்குப் போகத் திட்டமிடவில்லையா?''

மேசையில் கிடந்த கரண்டியை கிம் சுழலவிட்டு அது நிற்கும் வரை காத்திருந்தார். அவருடைய கண்கள் கலங்கின. ''நான் தனியாளாக வேலை செய்கிறேன். சமீபத்தில் நான் உகாண்டா, கானா, தாய்லாந்து, மெக்சிகோ, ஆர்ஜென்டினா, அயர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம் போன்ற பல நாடுகளுக்குப் போயிருக்கிறேன். நான் பயணம் செய்த நாடுகளைவிட, இனி பார்க்கப் போகத் திட்டமிட்டு இருக்கும் நாடுகள் அதிகம். ஆனால், என் உடல்நிலை ஒத்துழைக்க வேண்டும்.'' அவர் தன் ஆடையின் கைகளைச் சுருட்டிச் சுருட்டி மேலே தள்ளிவிட்டு, ''இதைப் பாருங்கள்'' என்றார். நான் திடுக்கிட்டுவிட்டேன். அது மனிதக் கை போலவே இல்லை. உருகிய சதை எல்லாம் ஒன்றாகத் திரண்டு உருவம் இல்லாமல் தட்டையாக மினுங்கிக்கொண்டு கிடந்தது. ''தொட்டுப் பாருங்கள்'' என்றார். தொட்டேன். ஒரு மரக் கட்டையைத் தீண்டியதுபோல கையை உடனே இழுத்துக்கொண்டேன். ஒரு பெண்ணின் உடலில் காணக்கூடிய சதைத்தன்மையோ, மிருதுத்தன்மையோ இல்லை. 'என் உடம்பில் 65 சதவிகிதம் இப்படித்தான். சருமம் உருகி ஒட்டிக்கொண்டதால் சருமத் துளைகள் இல்லை; வியர்வையும் வெளியேற முடியாது. உணர்ச்சி நரம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதால் உடம்பின் எந்தப் பாகம் வலித்தாலும் அந்த வலி உடம்பு முழுக்கப் பரவும். என் கால் பெருவிரலில் ஒரு காயம் ஏற்பட்டால், அந்தச் செய்தி மூளைக்கு நேராகப் போவதில்லை. உடம்பின் பல பாகங்களில் இருந்தும் போகிறது. அதனால் உடம்பு முழுவதும் வலிக்கும் உணர்வு ஏற்படுகிறது. மனித குலத்தின் பாவங்களை ஏற்று இயேசு சிலுவையில் மரித்ததுபோல உலகத்துக் குழந்தைகளின் வேதனையை நான் அனுபவிப்பதாகவே நினைத்துக்கொள்கிறேன்.''

''இத்தனை வருடங்களாகியும் வலி நிற்கவில்லையா?''

''என் உடம்பு எரிவதைத் தாங்க முடியாமல் நான் அலறிக்கொண்டு ஓடியபோது ஒரு ராணுவவீரர் என் மேல் தண்ணீரை ஊற்றினார். அவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது. தண்ணீர் கொதிப்பது 100 டிகிரி. நாப்பாம் குண்டு எரிவது 1,200 டிகிரி. நாப்பாம் குண்டில் பெட்ரோல், நாப்தலீன் அத் துடன் தோலிலே ஒட்டும் தன்மைகொண்ட ஒருவகைத் திரவம் கலந்திருக்கும். சருமத்தை ஒட்டிப் பிடித்து எரியும்போது அதை நிறுத்த முடியாது. தண்ணீர் ஊற்றியதும் சதை வெந்து காய்ச்சிய இறைச்சிபோல ஆகிவிட்டது.''- சட்டைக் கைகளை மறுபடியும் இறக்கிவிட்டு, கைப்பையை எடுத்துக்கொண்டு கிம் கனிவுடன் என்னைப் பார்த்தார்.

முதல் நாள் இரவு உதிர்ந்த மேப்பிள் இலைகளின் மேல் நடந்து சற்றுத் தூரம் சென்றவர், தன் சதுர மான முகத்தைத் திருப்பி கையை உயர்த்திக் காட்டி அசைத்தார். கேமராவை நோக்கி ஓடிவந்த சிறுமியும், இன்று என்னிடம் விடைபெற்று நாளைக்குள் நுழையும் பெண்ணும் ஒருவரேதான். மாற்றம் 37 வருடங்கள். மாற்றம் இல்லாதது இன்றைக்கும் உலகத்தில் போரில் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான குழந்தைகள்!

நாம் தோல்வியுற்ற இனம்..? நமக்கென யாரும் இல்லை...??

(நன்றி - ஆனந்தவிகடன்)

வீழ்ந்துகிடக்கும் பெருங்கனவாகக் கண் முன்னால் கிடக்கிறது வன்னிப் பெருநிலம். தமிழீழ நிலப்பரப்பு சூனியத்தால் சூழப்பட்டு இருக்கிறது. முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சூழலில் இலங்கை முகாம் ஒன்றில் இருந்து தமிழகம் வந்திருக்கும் சிலரைச் சந்திக்க முடிந்தது. அவர்கள் சொல்லும் உண்மையின் வார்த்தைகள் இவை...

''முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு இருந்த மூன்று லட்சம் வரையிலான மக்களில் சரிபாதியினரை அரசு வெளியேற்றி இருக்கிறது. மீதமிருக்கும் முகாம் மக்களையும் இலங்கை அரசு வெளியேவிட்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால், இலங்கைத் தீவானது பொருளாதார நிலைமைகளில் முற்றுமுதலாகச் சீர்குலைந்து கிடக்கிறது. சிங்கள மலைப் பாம்பு ஒரு பெரும் இரையை விழுங்கிவிட்டது. அதனால் எங்களைச் செரிக்க முடியவில்லை. வேறு வழியே இல்லாமல் துப்பித்தான் ஆக வேண்டும். ஆனால், தமிழர்களுக்கான பிரச்னைகள் வேறு.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக் குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் என ஒவ்வொரு இடமாகராணுவம் கைப்பற்றிக்கொண்டே வந்தபோது, நாங்கள் எங்க ளின் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இடம்பெயர்ந்தோம். வீட்டுக் கூரை, கதவு, ஜன்னல், நிலைப்படி, சாமான்கள் என சகலத்தையும் எடுத்துப் போனோம். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வீடு என்பது வெறுமனே கூரை மட்டும்தான். பொருளாதாரத் தடை மற்றும் கால் நூற்றாண்டு கால போர்ச்சூழலால் அவ்வகையான வீடுகளே எங்களுக்கு வாய்த்திருந்தது. இறுதியில் உயிரன்றி வேறெந்த உடைமைகளும் அற்றவர்களாக முகாம்களில் அடைக்கப்பட்டோம். இப் போது திடீரென பூர்வீகப் பிரதேசங்களில்கொண்டு போய்விட்டால், என்ன செய்வது?

தண்ணீர் குடிக்கும் குவளை முதல், சோறு காய்ச்சும் அடுப்பு வரை சகலமும் புத்தம் புதிதாக ஏற்படுத்த வேண்டும். ஓர் ஏனம்கூடக் கிடையாது. வீட்டைச் சரிசெய்ய வேண்டும் என்றால், அதற்குரிய உபகரணங்கள் வேண்டும். அந்த வேலைகளைச் செய்யும் தொழிலாளிகள் வேண்டும். உளி, சுத்தியல், ஆணிகூடக் கிடையாது. அவற்றை விற்கும் வியாபாரிகள் இல்லை. இந்த யதார்த்தத்தில் இருந்துதான் இதை அணுக வேண்டும்.

நாங்கள் விட்டுபோன வீடுகளில் சரிபாதிக்கு மேல் குண்டுவீச்சில் சிதிலம் அடைந்துவிட்டன. அந்தப் பகுதியே உடைந்து நொறுங்கிச் சுடுகாடாகக் கிடக்கிறது. மிச்சமிருக்கும் சில வீடுகள்கூட கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக மழை, வெயில் அனைத்திலும் சிக்கி புதர் மண்டி, மரம் முளைத்துக் கிடக்கின்றன. காட்டு விலங்குகள் ஊருக்குள் வந்து விட்டன. இந்த நிலையில், அடிப்படையான உள் கட்டுமானங்களைச் செய்யாமல் அங்கு மக்கள் வசிக்க முடியாது.

பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் இறந்துவிட்டனர். இருப்பவர்களும், கை கால்களை இழந்து நிற்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் வயசாளிகளும், பெண்களும், குழந்தைகளுமே நிறைந்திருக்கிறார்கள். உழைக்கத் தகுந்த உடலுடன் இருப்பவர்கள் வெகு குறைவு. இவர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்து இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்புதான்.

நாடு முழுவதும் செயல்பட்டு வந்த 33 தடுப்பு முகாம்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு இருக்கிறது. அழைத்துச் செல்வதற்கு உறவினர்கள் இருப்பவர்களைச் சிலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு வெளியே விடுகிறார்கள். முகாமில் இருந்து பூர்வீகப் பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லும்போது வசிக்க வீடு இல்லை என்றால், இடைத்தங்கல் முகாம்களில் விட்டுவிடுகிறார்கள். இதைத்தான் 'ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமில் அடைக்கிறார்கள்' என்று தமிழ்நாட்டில் பேசுகின்றனர்.

காடுகளை அழித்து வெறும் மண் தரையில் உருவாக்கிய முகாம்கள் இப்போது மழைநீரில் தத்தளிக்கின்றன. ஆழம் குறைவாகத் தோண்டப்பட்ட மலக் குழிகள் மழை நீரில் சிதைந்து கழிவுகள் மேலே மிதக்கின்றன. கொடுக்கப்படும் அரிசியைச் சமைத்து சாப்பிடவும் விறகு இல்லை. வெளியில் சென்றோ, பக்கத்து முகாமுக்குச் சென்றோ விறகுகளை எடுத்து வரவும் ராணுவம் அனுமதிப்பது இல்லை. உலக உணவுத் திட்டத்தின் கீழ்தான் இப்போது மக்களுக்கான உணவு விநியோகிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பிருந்து அவர்களும் 'நிதிப் பற்றாக்குறை' எனக் காரணம் சொல்லி, தங்களது உணவு விநியோகத்தை 50 சதவிகிதம் அளவுக்குக் குறைத்துவிட்டார்கள்.

தமிழர் வாழ்ந்த பகுதிகளில் தீவிரமான நிரந்தரக் கண்காணிப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, முள்ளிவாய்க்காலின் நந்திக்கடலைச் சுற்றி இலங்கைக் கடற்படை நிறுத்தப்பட்டு இருக்கிறது. பல்வேறு இடங்களில் ராணுவத் தளங்களும், காவல் நிலையங்களும் உருவாகிவிட்டன. ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடமராச்சி கிழக்கு, வளிகாமம் வடக்கு போன்ற பகுதிகள் உயர் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எந்த நிலத்துக்காகப் போராடினோமோ, எந்த நிலத்தைச் சமர் புரிந்து எங்கள் வசமாக்கி வைத்திருந்தோமோ அதே நிலத்தில் இப்போது அகதிகளாக வாழ்கிறோம். முகாமில் இருந்து வெளியே வந்தாலும் இதுதான் நிலைமை.

நாம் தோல்வியுற்ற இனம். நமக்கென யாரும் இல்லை. இன்று இலங்கை அரசாங்கத்துடன் சவால் செய்து உரிமைகளைப் பெறுவதற்கு ஓர் அரசியல் தலைமை அரங்கில் இல்லை. நாம்தான் கைகளைக் கோத்து எழுந்து வர வேண்டும். ஈழ மக்களின் உரிமைப் போராட்டம் நந்திக்கடலுடன் முற்றுப்பெற்றுவிடவில்லை. முற்றுமுதலாக அடக்கி ஒடுக்கப்பட்ட அல்ஜீரிய விடுதலைப் போர் 40 ஆண்டுகள் கழித்து வெல்லப்பட்ட வரலாற்றை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். இனியாவது ஆயுதங்களை நம்பிய காலத்தைக் கைவிட்டு, அரசியலை நம்புவோம்!'' என்கிறார்கள் மிகுந்த நம்பிக்கையுடன்!

நலமுடன் இருக்கிறீர்களா உலகத் தமிழர்களே?

படித்தேன் பிடித்தது... உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்.....

நன்றி: ஈழக் குழந்தை



ன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க் கவிதையாவது கிடைக்கும்..

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் 'ஷெல்' அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது..)

குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?

எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......

என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.

அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......

அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல்ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்.... அதனால் தான் எழுதவில்லை.......

ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப் பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது..... அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.

ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?

இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க் கவிதையாவது கிடைக்கும் அல்லவா?

இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவது குறையட்டும்.....

மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,

குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்தபோது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடைபடுமே என்றுதான் அப்போது எழுதவில்லை,

எங்கள் இனப் போராளிகளை கொன்றுகுவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் 'சார்க்' கூட்டாளியின் கொடிய முகம் கண்டபோதே எழுதி இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின் இடுப்பில் பம்பரம்விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது, தமிழர்களே? அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில் முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்துவிடுகிறேன் அகதி முகாமில்.

முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும், அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து, எப்போதும் கிடைக்கும் அன்பையும் என் பழைய வாழ்வையும் நினைவுபடுத்தும். ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில் நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்....

அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின், வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத் தோன்றவில்லை..... எனக்கு....

அமைதியாய் விடியும் பொழுதும்,
அழகாய்க் கூவும் குயிலும்,
தோகை விரிக்கும் மயிலும்,
காதல் பேசும்கண்களும்,
தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,
தாமரை மலரின்தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன்வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,
அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,
கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழையநினைவுகளும்,

இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத்தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம் அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள், உலகத்தமிழர்களே........

ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில்தான் ஒரு இருண்டுபோன இனத்தின் விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும் இருக்கிறது.

வலி கலந்த நம்பிக்கைகளுடன்

Monday, November 23, 2009

உணர்ச்சி மேலோங்கும் தேசிய நினைவெழுச்சி - கார்த்திகை 27

புலம்பெயர் தேசமெங்கும் முன்னரைவிட பல மடங்கு உணர்ச்சி மேலோங்க தேசிய நினைவெழுச்சி நாளுக்காய் ஈழத் தமிழ் மக்கள் தயாராகிறார்கள்.
தங்களுக்கு கிடைக்கப் போகும் புதிய செய்தி என்ன? அந்தச் செய்தியை யார் உரிமையுடன் வழங்கப் போகின்றார்கள்? அதனைத் தொடர்ந்து எமது கடமை எவ்வாறு அமையப் போகின்றது? என்பன போன்ற எண்ணிலடங்கா வினாக்களுடன் எதிர்வரும் வெள்ளிப் பொழுதிற்காய் அனைத்துலக ஈழத் தமிழ் உறவுகள் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள்.

முன்னரைவிட பல தமிழர் வணிக நிறுவனங்கள் இம்முறை தாமே முன் வந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது கார்த்திகை தமது வணிக நிறுவனங்களை மூடி உணர்ச்சி மிக்க எழுச்சி நிகழ்வில் தங்களையும் இணைத்துக்கொள்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களின் வருகையை எதிர்பார்த்து இவ்வருட தேசிய நினைவெழுச்சி மண்டப ஏற்பாடுகள் கனடா ரொரன்டோ நகரில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

துரோக கும்பல்களினால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக நிகழ்வு மண்டப விபரங்கள் வியாழன் பிற்பகல் அல்லது வெள்ளி காலை தமிழ் வானொலிகள் ஊடாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, November 15, 2009

பெற்றோருக்கு உண்மையில் என்ன ( நடந்தது? ) நடக்கிறது??

(நன்றி - ஆனந்த விகடன்)

'மே, 1968...

'அர்ச்சகரின் மீதுதான் தவறு!' - அந்த இளைஞனின் உதடுகளில் இருந்து உஷ்ணமாக வெளிப்பட்டன வார்த்தைகள். கோபம் அனலாகத் தெறிக்கும் தன் மகனின் முகத்தை விநோதமாகப் பார்த்தார்கள் பெற்றோர் இருவரும்.

'என்ன நடந்தது எனத் தெரிந்துதான் பேசுகிறாயா? தமிழரான அந்த அர்ச்சகரை சிங்களவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?' - பதில் கோபத்துடன் திருப்பிக் கேட்டார் அந்த இளைஞனின் தந்தை.

'தெரியும், சிங்களவர்கள் கொளுத்திவிட்டார்கள். அவர்கள் கொளுத்தும் முன்பே அர்ச்சகர் அவர்களைக் கொன்றிருக்க வேண்டும்' கோபம் குறையாமல் அந்த இளைஞன் சொல்லவும் கூடுதலாக அதிர்ச்சி தந்தைக்கு!

'தேவாரத்தையும், திருவாசகத்தையும் சொல்லிக்கொடுத்து, திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் எனப் படித்த உன்னிடம் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகின்றன? தவறு, பகைவனிடம்கூட நாம் அன்பு பாராட்டத்தான் வேண்டும். அன்பே சிவம், அன்பே கடவுள், அன்பே உலகம்!' எனப் பதிலுக்கு அழுத்தி அழுத்தி அந்த இளைஞனுக்கு அன்பைப் போதிக்கிறார் அந்தத் தந்தை!

30 ஆண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்காக ராணுவம் கட்டிப் போராடிய பிரபாகரன்தான் அந்த இளைஞன். பிரபாகரனுக்கு அன்பை அழுத்தி அழுத்திச் சொன்னவர் தந்தை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை. சிங்களப் பகைவனுக்குக்கூட அன்பு பாராட்ட வேண்டும் எனப் போதித்த பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கிடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்ரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவவைத்திருக்கிறது.

இலங்கை வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட நடுத்தரவர்க்கக் குடும்பம் திருவேங்கிடம் வேலுப்பிள்ளையினுடையது. இலங்கை அரசாங்கத்தில் மாவட்டக் காணி அதிகாரியாகப் பணிபுரிந்தவருக்கு பிரபாகரன், ஜெகதீஸ்வரி, விநோதினி என மூன்று குழந்தைகள். மகன் பிரபாகரன் தேர்ந்தெடுத்த பாதையை மாற்ற ஆரம்பத்தில் எவ்வளவோ முயற்சித்தவர். பின்னாட்களில் மகனுக்குப் பின்னால் திரண்ட போராட்ட வீரர்களைப் பார்த்து, தவிப்புடன் ஆசி வழங்கி போராட்டத்துக்குத் தத்துக் கொடுத்தார் மகனை. அதன் பிறகு சிங்கள அரசுக்கும் பிரபாகரனின் படைக்கும் பல முறை போராட்டங்கள் நடந்தபோதெல்லாம் முதலில் பாதிக்கப்படுவது வேலுப்பிள்ளைதான். வேதனை யும் பயமும் உள்ளுக்குள் நொறுக்கினாலும், மகனின் வீரப் போராட்டத்துக்காக எதையும் வெளிக்காட்டாமல் வெள்ளந்தி மனிதராக வாழ்ந் தவர். ஒரு கட்டத்தில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துக் கொடுக்க... மூத்த மகள் ஜெகதீஸ்வரி கணவருடன் கனடா சென்றுவிட்டார். இளைய மகள் விநோதினி திருச்சியில் தங்கி விட்டார்.

மரபுவழி ராணுவப் போர் உக்கிரமாகத் தொடங்கிய காலத்தில் பிரபாகரன், தன் பெற்றோரை வற்புறுத்தி 83-ம் ஆண்டில் இந்தியா அனுப்பிவைத்தார். திருச்சி ராமலிங்க நகரில் இருந்த விநோதினியின் வீட்டில் தங்கியிருந்தபடி மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர் இருவரும். பின்னர், விநோதினியும் கனடா சென்றுவிட, தங்களுக்கு மருத்துவம் பார்த்த முசிறி டாக்டர் ராஜேந்திரனுடன் முசிறியிலேயே தங்கி இருந்தனர்.

அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் 2003-ம் ஆண்டில் தமிழீழம் கிளம்பிப் போனார்கள். அதன் பிறகு கடைசி வரை பிரபாகரனுடயே இருந்தவர்களை இறுதிக்கட்டப் போரின்போது தமிழகத்துக்குச் செல்லும்படி எவ்வளவோ கூறி இருந்திருக்கிறார் பிரபாகரன். 'வாழ்வோ, சாவோ... இனி உன்னோடுதான்' என்ற உறுதியோடு இருந்தவர்கள், சிங்கள ராணுவத்தின் கைகளில் சிக்கியது காலத்தின் கோலம்தான்.

''போர் பாதிப்பின் அடையாளமாக எஞ்சி இருந்த மிச்சசொச்சம் தமிழ்ச் சொந்தங்கள் சொந்த தேசத்துக்கு உள்ளேயே நாடு கடத்தப்பட்ட அகதிகளாக ராணுவத்திடம் சரண் அடைந்திருந்தனர். அந்த மக்களோடு மக்களாக மெனிக் ஃபார்ம் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்திருந்தனர் பிரபாகரனின் பெற்றோர். அவர்களைத் தேடி வந்த ராணுவத்தினர் ஏனைய மக்களைச் சித்ரவதைக்கு உள்ளாக்கியபோது, தாங்களாகவே முன்வந்து 2009, மே 20-ம் தேதி தங்களை ஒப்புக் கொடுத்தனர் பிரபாரனின் பெற்றோர். வவுனியா இடைத்தங்கல் முகாமுக்கு இருவரையும் அழைத்துச் சென்ற ராணுவம், அங்கு தனிமையில் வைத்திருந்தது. 76 வயதான வேலுப்பிள்ளையும், 71 வயதான பார்வதியம்மாளும் உடல்நிலை மோசமாகி மிகவும் சிரமப்பட்டபோதுகூட, அவர்களுக்கான மருத்துவ உரிமையைப் பறித்தது ராணுவம்'' என்று இப்போது சொல்லும் சில ஈழத் தமிழ் பிரமுகர்கள்,

''60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு உதவியாக உறவினர் ஒருவரை வைத்துக்கொள்ளலாம் என்ற பொது விதி யைக்கூட பிரபாகரனின் பெற்றோருக்கு அவர்கள் மறுத்துவிட்டனர். ஒரு மாத காலம் வவுனியா முகாமில் இருந்தவர்களை, பின்பு சிங்கள ராணுவம் எங்கோ கொண்டு சென்றது. இதுவரை விவரம் தெரியாமல் இருந்தது. இப்போது, அந்த அப்பாவி முதியவர்கள் இருவரும் 'ஃபோர்த் ஃப்ளோர்' எனப்படும் இலங்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் இருப்பதாக வரும் செய்திகள் கேட்டு நடுங்கிப் போயிருக்கிறோம்'' என்கிறார்கள் உள் ளார்ந்த பதைபதைப்புடன்!

'ஃபோர்த் ஃப்ளோர்' என்ற வார்த்தையைக் கேட்டு ஏன் பதைபதைக்க வேண்டும்?

அது அப்படித்தான்! ஜெ.ஆர்.ஜெயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் கொழும்பு கொல்பிட்டிப் பகுதியில் உள்ள கட்டடத்தின் நான்காவது மாடிக்கு மெல்ல மெல்ல அப்படியொரு 'புகழ்' சேரத் துவங்கியதாம்! இலங்கை மத்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அங்கே ஹிட்லரின் சித்ரவதைக் கூடத்தைவிட பயங்கரமான நிகழ்வுகளை அரங்கேற்றிக் காட்டுவது வழக்கமாம். அரசுக்கு எதிரான முக்கிய தமிழ்முகங்கள் சிக்கிவிட்டால்... அவர்களை சிறுகச் சிறுக நொறுங்கவைத்து ரகசியங்களைப் பிடுங்க முடிவெடுத்துவிட்டால்... இந்த 'ஃபோர்த் ஃப்ளோரு'க்குக் கொண்டுபோய்விடுவார்களாம்.

''இங்கே போய் உயிரோடு திரும்பியவர்கள் மிக அபூர்வம்தான்! அப்படி உயிரோடு திரும்பி வர்றவங்களும் வாழ்நாள் முழுக்க நிம்மதியாத் தூங்க முடியாது. கனவிலும் மிரட்டும் கொடுமைகள் அப்படி! சுவர் எங்கும் தெறித்து விழுந்த ரத்தக்கறைகளும், ஓயாத மரணவலி ஒலங்களும் அந்த நான்காம் மாடியில் ஒலித்துக்கொண்டே இருக்குமாம். அந்த இடத்தை 'சாத்தானின் மாளிகை' என்றும் 'பிசாசுக் கூடாரம்' என்றும் விவரம் தெரிந்த தமிழர்கள் சொல்வது வழக்கம்'' என்று விளக்கம் கிடைக்கிறது.

விசாரணைக்காக வரும் நபர்களை வகைப்படுத்தியே சித்ரவதை தொடங்குவார்களாம். ஆடைகளைக் கழற்றி, பனிக்கட்டிகள் நிரம்பி இருக்கும் ஓர் அறையில் நடுங்கும் குளிரில் உறையவைப்பது... கேட்கிற கேள்விக்கு 'திருப்தி'கரமான பதில் வராவிட்டால், குளிருக்கு நேரெதிரான பாஸ்பரஸ் ட்ரீட்மென்ட் நடக்குமாம். பாஸ்பரஸை உடலில் தடவி, கொதிக்கிற மின் தகட்டைக் கையிலெடுத்து...

மேற்கொண்டு கேட்டால், இளகிய மனங்கள் துடிதுடித்துப் போகும்.

தலைகீழாகத் தொங்கவிடுவது... பிறகு, பி.வி.சி. பைப்புகளில் மணலை நிரப்பி அடித்து நொறுக்குவது... தலைகீழாகத் தொங்குபவரின் தலையில் முழுக்க பெட்ரோல் நிரம்பிய ஒரு பாலிதீன் பையை மாட்டுவது... மூச்சுவிட முடியாமல் அவர்கள் பெட்ரோலை மெள்ள மெள்ளக் குடிப்பதையும்... அதன் நெடி மிகுந்த காற்றைச் சுவாசிப்பதையும் ரசிப்பது!

விதவிதமாக நீள்கின்றன இந்த சித்ரவதைப் படலங்கள். வாய் வழியே பெட்ரோல் சென்று அரை மயக்க நிலையில் ஆழ்ந்த பிறகும், கேட்ட கேள்விக்குப் பதில் வராவிட்டால் வாய்க்குள் தீக்குச்சியைக் கொளுத்திப்போடுவார்களாம் குரூர அதிகாரிகள்! இதில், உடலின் உள்ளுறுப்புகள் தீயினால் வெந்து பொசுங்கிவிடும்.

உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கும்போது, நான்கைந்து பேர் மட்டுமே கால்நீட்டி அமரக்கூடிய ஓர் அறைக்குள் 20-க்கும் மேற்பட்ட நபர்களை நின்ற நிலையில் அடைத்துவிடுவார்களாம். துளிகூட வெளிச்சம் புகாத அந்த இருட்டறைக்குள் முனகலும், மூச்சுவிடும் சத்தமும் மட்டும்தான் துணையிருக்கும். மற்றபடி எல்லாமே அந்தகாரம்தான்! மனநிலையை உருக்கி, உண்மைகளை வாங்குவதற்காக இப்படி உணவு, தண்ணீர் தராமல் பலநாட்கள் இருட்டுக்குள் வைத்திருப்பது உண்டு என்றும் இலங்கைத் தமிழ்ப் புள்ளிகள் மத்தியில் பரவிக்கிடக்கிறது சேதி.

''பெண்களின் நிலைமையோ எழுத்தில் வடிக்க முடியாது'' என பயம் பரவ 'ஃபோர்த் ஃப்ளோர்'பற்றி விவரிக்கிறார்கள் இலங்கைத் தமிழ் நிருபர்கள் சிலர்.

''இத்தகைய ஓரிடத்தில் கடந்த நான்கு மாதங்களாக விசாரணை என்ற பெயரில் பிரபாகரனின் தாய் - தந்தை வைக்கப்பட்டு இருப்பதாக அறிகிறோம். வேலுப்பிள்ளைக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் உள்ளனவாம். தாய் பார்வதியம்மாளுக்கும் சர்க்கரை, உயர் ரத்த அழுத்த பாதிப்பு உண்டாம். அவர்களுக்கு அங்கே என்னவிதமான மருத்துவக் கண் காணிப்பு அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. அவர்களிடமிருந்து சிங்கள அதிகாரிகள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்றும் புரியவில்லை!

இருவரையும் தனித்தனியே பிரித்து தனிமைச் சிறையில் அடைத்துவைத்திருப்பதாக துளியளவு இரக்கமுள்ள சில அதிகாரிகள் மூலம் தகவல் வருகிறது. முதுமையில் தனிமையின் பயம் எத்தகைய மனக் குழப்பங்களை உண்டாக்கும் என்று சொல்லத் தேவையில்லை. உணவுக் கட்டுப்பாட்டுக்கும் வழியில்லை அந்த நோயாளித் தம்பதிக்கு!

இந்திய எம்.பி-க்கள் குழு இலங்கை சென்றபோது 'பிரபாகரனின் பெற்றோரைப் பார்க்க வேண்டும்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார் திருமாவளவன். இதற்கு மறுப்புத் தெரிவித்த அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரரான பசில், பிரபாகரனின் பெற்றோர் நலமுடன் இருப்பதாக மட்டுமே தெரிவித்திருக்கிறார். ''அவர்களை வெளியில் விடுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அவர்கள் இந்தியாவில் தங்குவதாக இருந்தால் மட்டும்தான் வெளியில் விடுவோம். மற்ற வெளிநாடுகளுக்குப் போனால், அவர்கள் எங்களுக்கு எதிராகப் பேட்டி கள் கொடுப்பார்கள். இப்படித்தான் டாக்டர் தமிழ்வாணியை நாங்கள் வெளியில்விடச் சம்மதித்தோம். ஆனால், லண்டன் போனவர் எங்களையே விமர்சித்தார். அந்த மாதிரி பிரபாகரனின் பெற்றோர் செயல்படக் கூடாது அல்லவா?'' என்று பசில் ராஜபக்ஷே, திருமாவளவனிடம் சொன்னதாக எங்களுக்கு ஒரு தகவல் இருக்கிறது'' என்கிறார் இலங்கை தமிழ் பத்திரிகையாளர் ஒருவர்.

இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் மற்றும் எம்.பி. சோனாதி ராஜா ஆகியோரின் உதவியுடன் பெற்றோரை மீட்டுத் தமிழகம் கொண்டுவரும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறாராம் பிரபாகரனின் சகோதரி விநோதினி. இதற்கு இலங்கை அரசாங்கம் எந்தளவு ஒத்துழைக்கும் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்த போர்க் குற்ற அறிக்கை தாக்கலாகி இருப்பதைத் தொடர்ந்து, இங்கிருந்து யாரையும் இனி வெளிநாடுகளுக்கு அனுப்ப இலங்கை சம்மதிக்காது என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்!

''பிரபாகரனின் பெற்றோருக்கு உண்மையில் என்ன நடந்தது, அவர்களது இப்போதைய நிலைமை என்ன என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்'' என்று தமிழீழ ஆதரவு அமைப்புகள் கோரிக்கை வைக்கத் தயாராகி வருகின்றன. இலங்கையின் சித்ரவதை அத்தியாயம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை!

Friday, November 13, 2009

மீண்டு (ம்) வருவாரா பொட்டு..??

(நன்றி - ஆனந்த விகடன்)

போர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கும் அந்த விழா 27-ம் தேதி மாலையுடன் முடிவடையும். 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!' என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார். புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அந்த நேரத்துக்காகத் தவம் இருப்பார்கள். அதற்கு முந்தைய 26-ம் தேதிதான் பிரபாகரனின் பிறந்த நாள். கடந்த ஆண்டு போர்க் கால நெருக்கடி சூழ்ந்த நேரத்திலும், பிரபாகரன் தோன்றினார். ''சமாதானத்துக்கான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறோம். ஆனாலும், எம் எதிரி போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவை நட்பு சக்தியாகத்தான் நினைத்தோம். நினைக்கிறோம். இந்தியா எங்களுக்கு தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும். இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களுக்குத்தான் நான் மிகுந்த நன்றியைச் சொல்ல வேண்டும். அவர்கள் ஆதரவுதான் அனைத் துக்கும் மேலாக முக்கியமானது!'' என்றார் பிரபாகரன்.

ஆனால், புலிகள் இயக்கம் மீண்டு எழ முடியாமல் முடக்கப்பட்டது. பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் இதை நம்பவில்லை என்றாலும், நவம்பர் 27 அன்று பிரபாகரன் திரையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் கலந்துகட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. 'பிரபாகரன் வர மாட்டார். ஆனால், பொட்டு அம்மான்தான் இந்த வருட மாவீரர் தின உரையை நிகழ்த்தவிருக்கிறார்!' என்ற தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களுள் ஒன்றாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கும் புதிய படம் ஒன்றைப் புலிகள் ஆதரவு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன. இதுவரை வெளிவராத அந்தப் படத்துக்கு மேலே, 'இந்தப் படம் சொல்லும் தகவல் என்ன?' என்ற புதிரான கேள்வியும் தொக்கி நிற்கிறது.

இதுபற்றி விசாரித்தபோது, ''மே 18-ம் தேதி சிங்கள ராணுவத்துக்கும் புலிகள் அமைப்புக்கும் நடந்த இறுதி யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. புலிகள் அமைப்பின் முக்கியத் தளபதிகள் அழிக்கப்பட்டதாகவும் நந்திக் கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்க முயற்சித்த போது சுட்டுக் கொன்றதாகவும் அறிவித்தார்கள். இவை எல்லாம் நிகழ் வதற்கு ஒரு வாரத்துக்கு முன், புலிகள் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்களை மட்டும் அழைத்தாராம் பிரபாகரன். 'இன்று முதல் மூன்று பிரிவுகளாக நாம் பிரிந்து செயல்பட வேண்டும். ஒரு அணியினர் இங்கிருந்து சிங்கள ராணுவத்துடன் போராடட்டும். இன்னொரு பிரிவினர் அரசிடம் சரணடைந்து தங்களது அரசியல் கோரிக்கையை உலகத்துக்குச் சொல்லட்டும். மூன்றாவது பிரிவினர் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும். இதில் யார் யார் எந்தப் பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நான் எனது நிலையைத் தீர்மானித்துக்கொள்கிறேன். இனி, உங்களை வழிநடத்தும் பொறுப்பை பொட்டு அம்மானிடம் ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த இயக்கத்தின் துணைத் தலைவராக அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்!' என்று அறிவித்தாராம் அப்போது. இயக்கத்தின் தளபதிகளும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட னராம். அப்போது எடுக்கப்பட்ட படத்தில்தான் பிரபாகரனுக்குச் சரிசமமாக பொட்டு உட்காரவைக்கப்பட்டார். இதில் பல ஆச்சர்ய மான விஷயங்கள் உண்டு!'' என்ற பீடிகை கொடுத்து நிறுத்தியவர்கள் மேலும் தொடர்ந்தார்கள்...

''பொதுவாக பொட்டு அம்மான், புலிகளின் சீருடையைத்தான் எப்போதும் அணிவார். சாதாரண உடைகள் அணிந்து அவரைப் பார்க்கவே முடியாது. அரிதாக டி-ஷர்ட் அணிவார். இந்தப் படத்தில் பிரபாகரன் அணிந்துள்ள அதே நிறத்தில் சட்டை அணிந்துள்ளார். மேலும், பொட்டு அம்மான் எப்போதும் கறுப்பு நிற வார் வைத்த சாதாரண வாட்ச்தான் அணிவார். சில்வர் செயின் வாட்ச் அணிந்தால் தனிப்பட்ட அடையாளமாகிவிடும் என்பதால், அதை அணியவே மாட்டார். ஆனால், இப்படத்தில் அதிலும் மாற்றம். சிரித்த முகத்துடன் இருக்கும் அவர் சீரியஸான முகத்துடன் காணப்படுகிறார். இப்படி எத்தனையோ மாற்றங்களை அடுக்கலாம். மிக நெருக்கடியான தருணத்தில் எடுக்கப்பட்ட இப்படம், ஆறு மாதங்கள் கழித்து வெளியானதற்கான பின்னணி 'நவம்பர் 27'-ம் தேதியாக இருக்கலாம்!'' என்று முடித்தார்கள்.

இலங்கையில் தேர்தல் நடந்து முடியும் வரை அரசியல் நிலவரங்களைக் கவனித்துவிட்டு அதன் பிறகு வெளிப்படையாகச் சில அறிவிப்புகளைச் செய்ய புலிகள் அமைப்பினர் முடிவெடுத்திருந்தனராம். ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. குமரன் பத்மநாபன் எனப்படும் கே.பி.அணியினர், காஸ்ட்ரோ அணி யினர் என இரண்டு தரப்பாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் யாராவது ஒருவர் வெளிப்படையாக வந்து அறிவித்தால்தான் குழப்பங்களைத் தவிர்க்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பொட்டு வெளியில் வர இருப்பதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

அதே சமயம், 'பொட்டு அம்மான் இறந்தது உண்மை. ஆனால், அவரது உடலைத்தான் எங்களால் அடையாளம் காண முடியவில்லை!' என்று இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபய ராஜபக்ஷே சொல்லி வருகிறார். தமிழக எம்.பி-க்கள் குழு அங்கு சென்றபோதும், 'பிரபாகரனது உடலை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். ஆனால், பொட்டு பற்றித்தான் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை!' என்று அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ஷே சொல்லியிருக்கிறார். எனவே, பொட்டு அம்மான் குறித்த சந்தேகங்கள் இன்னமும் முழுக்க களையப்படவில்லை என்பது உண்மை.

புலிகள் அமைப்பின் ஆரம்பக் கட்டத்தில் பிரபாகரன் தலைமையிலான மத்தியக் கமிட்டியில் 32 உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில் சண்முகலிங்கம் சிவசங்கரன் என்ற இளைஞன்தான் பின்னாட்களில் பொட்டு அம்மானாக உருவெடுத்தார். புலிகள் அமைப்பு மீது சிங்கள ராணுவத்தின் கவனத்தை அதிர்ச்சியுடன் திருப்பிய திருநெல்வேலி தாக்குதலில் இவர் இருந்தார். பிரபாகரனிடம் ஆயுதப் பயிற்சி பெற்று, பின்னர் அவருக்கே மெய்க்காப்பாளராக இருந்தவர். வேதாரண்யம் பகுதியைக் கவனித்து வந்தவர். பின்னர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மாவட்டத் தளபதியாக ஆனார். வேவு பார்ப்பதில் தேர்ந்தவராக இருந்ததால், புலிகளின் புலனாய்வுப் பிரிவை பொட்டுவிடம் ஒப்படைத்தார் பிரபாகரன். 1988-ம் ஆண்டு இப் பொறுப்புக்கு வந்த பொட்டு 16 பிரிவுகளை உருவாக்கி, புலிகளின் திரைமறைவு வெற்றிகளுக்குப் பெரிதும் உதவி னார். இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் சண்டை தொடங் கியபோது, முதல் தாக்குதலில் பலத்த காயம்பட்டு முடக்கப் பட்டார் பொட்டு. வயிறு, கால், கை ஆகியவற்றில் பலத்த காயம் பட்டது. மரணத்தறுவாயை நெருங்கியவரை மிகுந்த சிரமத்துக்குப் பிறகு மீட்டெடுத்து வந்தார்கள். அந்தச் சமயத்தில், அவரை அருகில்இருந்து கவனித்துக்கொண்டவர் பாலசிங்கத்தின் மனைவிஅடேல்.

ராஜீவ் காந்தி கொலையில் பொட்டு அம்மானைத் தொடர்புபடுத்தி சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு செய்தபோதுதான், இப்படியரு ஆள் இருப்பதே வெளியில் தெரிந்தது. மூன்று ஆண் பிள்ளைகள் பொட்டு அம்மானுக்கு. அதில் இருவர் அமைப்பில் இணைந்து போராடி இறந்துவிட்டார் களாம். ஒரு மகன் மட்டும் இருக்கிறார். 'குடும்பத்துக்கு ஒருவரை இயக்கத்துக்குத் தந்தால் போதுமே. இன்னொரு மகனை எங்காவது படிக்கவைக்கலாமே!' என்று பொட்டு அம்மானிடம் சொன்னதற்கு, 'அதெல்லாம் மற்றவர்களின் குடும்பத்துக்கு. எனது குடும்பத்தினர் அனைவருமே இயக்கத்துக்குத்தான்!' என்றாராம் பொட்டு. 10 ஆண்டுகளுக்கு முன் பொட்டு அம்மானைப்பற்றி தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார் அடேல் பாலசிங்கம், 'சுற்றி வளைப்புகளில் இருந்து எதிரிகளைத் திணறடித்து வெளியேறுவதில் அவருக்குப் பல ஆண்டு அனுபவம் உண்டு!'

அடேல் சொன்னது இப்போதும் நடந்திருக்குமா? நவம்பர் 27-ம் தேதி முடிவு தெரியும்!

வைரமுத்து 25

நன்றி - ஆனந்த விகடன்

40 ஆண்டுகளுக்கு முன்னால் கிராமத்தை விட்டுச் சென்னைக்கு வந்தாலும் இன்னும் மண் வாசனை மறக்காதவர். இப்போது ஊருக்குச் சென்றாலும் சாமைச் சோறு, வரகுச் சோறு காலையில் தயிரோடு உண்கிறார். வல்லாரையும் தூதுவளையும் கட்டாயம் இருந்தாக வேண்டிய கீரைகள்!

மற்ற மொழிக் கவிஞர்களுக்கு இவர் மீது மதிப்பு அதிகம். 'ஆளவந்தான்' படப் பாடல்கள் ஊட்டியில் தயாரானபோது, அதன் ஹிந்திப் பதிப்புக்குப் பாட்டெழுத வந்த ஜாவேத் அக்தர், 'முதலில் வைரமுத்து பாட்டு எழுதட்டும். அவர் கற்பனையைக் கடன் வாங்கிப் பாட்டு எழுதுவது எனக்கு வசதியாக இருக்கும்' என்று சொல்லி வைரமுத்து எழுதும் வரை சீட்டாடிக்கொண்டு இருந்தாராம்!

'காப்பியக் கவிஞர்' என்று அந்த நாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இவரை அழைத்தாலும், 'கவிசாம்ராட்' என்று அந்நாள் பிரதமர் வாஜ்பாய் இவரை விளித்தாலும், கலைஞர் வழங்கிய கவிப்பேரரசு பட்டம்தான் நிலைத்துவிட்டது!

கள்ளிக்காட்டு இதிகாசத்தின் 5 பிரதிகளை வாட்டர் ஃப்ரூப் செய்து வைகை அணை நீரில் வீசி எறிந்திருக்கிறார். நாளை அணையே தூர்ந்துபோனாலும், அந்த மண்ணின் ஆவணமாக அது இருக்குமாம்!

கவிஞருக்கு மருத்துவத் துறையில் ஏராளமான நண்பர்கள் உண்டு. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் யாருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும், அவரே டாக்டர்களுக்கு போன் செய்து, அப்பாயின்மென்ட் வாங்கி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார். உணவு, மருத்துவம், கல்வி இதற்குச் செய்வதுதான் உதவி; மற்றது எல்லாம் ஆடம்பரம் என்பது கவிஞரின் கருத்து!

'கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் விளம்பரப் படங்களில் தோன்றுவது இல்லை. குரல் கொடுப்பது இல்லை' என்று கொள்கை வைத்திருக்கிறார்!

பி.சுசீலா, சித்ரா இருவருக்கும் ரசிகர். பி.சுசீலாவின் சில பாடல்களை சித்ராவின் குரலில் பாடவைத்து, தனக்கென்று ஒரு தனி சி.டி. வைத்திருக்கிறார் இறுக்கமான மனசுக்கு இதமாக இருக்கிறதாம்!

பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்தபோது வெளியிட்ட 'வைகறை மேகங்கள்' என்ற முதல் கவிதைத் தொகுதி, இவர் மாணவராக இருந்தபோதே ஒரு மகளிர் கல்லூரியில் பாடமாக இருக்கும் பெருமை பெற்றதாம். இப்போது விற்பனையாகிக்கொண்டு இருப் பது வைகறை மேகங்களின் 29-ம் பதிப்பு!

எந்த ஊரில் இருந்தாலும் எந்த நாட்டில்இருந் தாலும் காலை 7 மணிக்குக் கலைஞரோடு பேசத் தவற மாட்டார். 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறதாம் இந்தத் தொலைபேசிக் காதல்!

8 மணி நேரம் எடுத்துக்கொண்டு இவர் எழுதிய பாடல்: 'சங்கீத ஜாதி முல்லை' (காதல் ஓவியம்) 8 நிமிடத்தில் எழுதி முடிக்கப்பட்ட பாடல்: 'எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ!' (பாட்ஷா).

கவிஞராக இருந்தாலும், இவர் ஒரு சிறுகதைப் பைத்தியம். ஓ ஹென்றி, மாப்பசான், ஆண்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி முதல் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, தஞ்சை பிரகாஷ் வரை உலக, உள்ளூர்ச் சிறுகதைகளைச் சேர்த்து வைத்திருக்கிறார்!

'7 ஆயிரம் பாடல்கள், 34 புத்தகங்கள், மூன்று முறை உலகை வலம் வந்த அனுபவங்கள்... என்று இயங்கிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இளமை தீர்வதில்லை' என்பார்!

தனக்குப் பரிசாகக் கிடைக்கும் தங்க நகைகளை ஒருபோதும் அணிந்துகொள்ள மாட்டார். உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, பணியாளர்களுக்கோ, திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்களுக்கோ கொடுத்துவிடுவார். ஆனால், அண்ணாமலை, 'பாட்ஷா, முத்து, அருணாசலம் படங்களுக்கு ரஜினி தந்த தங்கச் சங்கிலிகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்!

இரவு எவ்வளவு தாமதமாகத் தூங்கச் சென்றாலும், அதிகாலை 5 மணிக்கு எழுந்து நடைப் பயிற்சிக்குத் தயாராகிவிடுவார். இவரோடு யாரும் உடன் நடப்பதில்லை. நடந்தால் ஓட வேண்டி இருக்கும், அவ் வளவு வேகம்!

கவிஞரின் ஆடைகள் சென்னையில் வெளுக்கப்படுவதில்லை. எல்லாத் துணிகளும் ஊருக்கு அனுப்பப்பட்டு சலவை செய்யப்பட்டு வருகின்றன. 20 ஜோடி போகும்; 20 ஜோடி திரும்பும். 'தண்ணீருக்கும் சலவைக்கும் சம்பந்தம் இருக்கிறது' என்பார்!

கவிஞருக்கு மிகவும் பிடித்த உணவு: அம்மா அங்கம்மாள் வைக்கும் கோழிச் சாறும் குழைந்த சோறும்!

கவிஞர் பேசினால் இளைய மகன் கபிலன் கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால், மூத்த மகன் கார்க்கியைப் பேசவிட்டுக்கேட்டுக் கொண்டே இருப்பார்!

மருத்துவமனையில் இருந்தும், சிறை யில் இருந்தும் வரும் கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் பதில் போடும் பழக்கம்கொண்டவர்!

வாய்விட்டுச் சிரிப்பார்; சிரித்தால் பக்கத்து ஆளை அடிப்பார். அதனால் எல்லோரும் இரண்டு அடிகள் தள்ளியே உட்கார்வார்கள்!

இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 5 முறை பெற்றவர். அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் மாநில விருதோடு சேர்த்து இரண்டு விருதுகளும் தலா 5 என்று சமன் செய்துவிட்டார்!

'அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்' இவரது கவிதைகளை, இவரது குரலில் ஒலிப்பதிவு செய்து, உலக இலக்கிய ஆவணங்களில் ஒன்றாக வாஷிங்டன் டி.சி-யில் பாதுகாத்து வருகிறது!

கிராமத்து வரப்புகளில் நடக்கும்போது தொட்டாற்சிணுங்கிச் செடிகளைக் கண்டால் அப்படியே உட்கார்ந்துவிடுவார். தொட்டுத் தொட்டு அந்த இலைகள் அடங்கும் அழகை ரசிப்பார். சில நேரங்களில் மீண்டும் விரியுமா என்று காத்திருப்பதும் உண்டு!

தான் மற்றவருக்குச் செய்ததை மறந்துவிடுவார். மற்றவர்கள் தனக்குச் செய்ததை மறக்கா மாட்டார். தன் வீட்டு வரவேற்பறையில் உள்ள ''ஏ.சி... ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிக் கொடுத்தது'' என்று பலபேருக்குச் சொல்லி இருக்கிறார்!

கனடா நாட்டு அரசாங்கத்தோடு இணைந்து ஒரு தமிழ் அமைப்பு, இவர் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இவரது அஞ்சல் தலை ஒட்டப்பட்டு இவருக்கு வந்த தபாலை இவரே பிரித்தார்!

கவிஞரின் தோட்டத்துப் பண்ணை வீட்டில் இரண்டு உரல்கள் இருக்கின்றன. அவை தாய்வழி-தந்தைவழி தாத்தாக்களின் வீட்டில் இருந்தவையாம். வைகை அணைக்குள் மூழ்கிப்போன மெட்டூர், கரட்டுப்பட்டி இரண்டு ஊர்களில் இருந்தும் தோண்டி எடுத்து வரப்பட்டவை!

Wednesday, November 11, 2009

இன்றைய நாள் கனடாவில் அரச-வங்கி விடுமுறை

இன்றைய நாள் கனடாவில் அரச மற்றும் வங்கி விடுமுறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்நாள் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தமையை நினைவு கூர்ந்தும் அந்தப் போரிலே மரணித்த மனிதர்களை நினைவுகூர்ந்தும் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளை கனடா மட்டுமல்ல முதலாம் உலகப் போரில் ஈடுபட்ட ஏனைய பல நாடுகளும் நினைவு கூருகின்றன. முதலாம் உலகப் போரரனது 1918ம் ஆண்டு 11ம் மாதம் 11ம் திகதி காலை 11 மணிக்கு முடிவுக்கு வந்தமை இங்கு சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.
இதன் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்தது. பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன. 60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வளிமம், வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின.
போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும், போராளிகளுமாகச் சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட, முற்றுகைகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின. இப் போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது.
இப் போரினால் 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, ஓட்டோமான் போரரசு என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின. செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின. மீண்டும் இவ்வாறான போர் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன், உலக வரலாற்றில் முதல் முறையாகப் பன்னாட்டு அமைப்பான நாடுகளின் சங்கம் (League of Nations) ஒன்று உருவானது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.
1871 ஆம் ஆண்டில் ஜேர்மனி ஒருங்கிணைக்கப்பட்டதும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் வல்லரசுகளிடையே இக்காட்டான அதிகாரச் சமநிலை நிலவியதும் இப் போர் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களுள் அடங்கும். இவற்றுடன், 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை இழந்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு; ஜேர்மனிக்கும், பிரித்தானியாவுக்கும் இடையே பொருளியல், படைத்துறை, குடியேற்றங்கள் தொடர்பான போட்டிகள்; பால்கன் பகுதிகளில் ஆஸ்திரோ-ஹங்கேரிய ஆட்சி தொடர்ச்சியான உறுதியற்ற நிலையில் இருந்தமை என்பனவும் இப் போருக்கான மேலதிக காரணங்களாகும்.

ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28) சுட்டுக் கொல்லப்பட்டது போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணம் ஆயிற்று. சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பிய இராச்சியத்தின் மீது ஆஸ்திரியா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து பல கூட்டணிகள் உருவாயின. பல ஐரோப்பிய நாடுகள் பேரரசு எல்லைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்ததால் விரைவிலேயே போர் உலகம் முழுவதற்கும் விரிவடைந்தது. சில கிழமைகளுக்கு உள்ளாகவே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் போரில் இறங்கிவிட்டன. போர் முக்கியமாக நேச நாடுகள், மைய நாடுகள் எனப்பட்ட இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நடை பெற்றது. நேச நாடுகளின் பக்கத்தில் தொடக்கத்தில் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா என்பனவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. பின்னர் பல நாடுகள் இக் கூட்டணியில் இணைந்தன. குறிப்பாக, ஆகஸ்ட் 1914ல் ஜப்பானும், ஏப்ரல் 1915 இல் இத்தாலியும், ஏப்ரல் 1917ல் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தன. ஐரோப்பாவின் மையப் பகுதியில் இருந்ததால் மைய நாடுகள் என அழைக்கப்பட்ட கூட்டணியில், ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. ஓட்டோமான் பேரரசு 1914 அக்டோபரில் இக் கூட்டணியில் இணைந்தது. ஓராண்டு கழித்து பல்கேரியாவும் இதில் இணைந்தது. போர் விமானங்களும், போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்தபோது, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஸ்கண்டினேவிய நாடுகள் மொனாக்கோ என்பன மட்டுமே ஐரோப்பாவில் நடுநிலையில் இருந்தன. எனினும் இவற்றுட் சில நாடுகள் போர்புரிந்த நாடுகளுக்குப் பொருளுதவிகள் செய்திருக்கக்கூடும். போர் பெரும்பாலும் ஐரோப்பாக் கண்டத்தைச் சுற்றியுள்ள பல முனைகளில் இடம்பெற்றது. மேற்கு முனை எவருக்கும் சொந்தமில்லாத பகுதிகளால் பிரிக்கப்பட்ட, பதுங்கு குழிகளும் அரண்களும் நிறைந்த பகுதியாக இருந்தது. இவ்வரண்கள் 475 மைல்கள் தூரத்துக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) அமைந்திருந்தன. இது பதுங்கு குழிப் போர் என அழைக்கப்படலாயிற்று. கிழக்குப் போர் முனை பரந்த வெளிகளைக் கொண்டிருந்ததாலும், தொடர்வண்டிப் பாதை வலையமைப்பு அதிகம் இல்லாதிருந்ததாலும் மேற்கு முனையைப்போல் யாருக்கும் வெற்றியில்லாத நிலை காணப்படவில்லை. எனினும் போர் தீவிரமாகவே நடைபெற்றது.
பால்கன் முனை, மையக் கிழக்கு முனை, இத்தாலிய முனை ஆகிய முனைகளிலும் கடும் சண்டை நடைபெற்றது. அத்துடன், கடலிலும், வானிலும் சண்டைகள் இடம்பெற்றன.

உங்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்.

வலைப்பதிவென்றால் அது பயனுள்ள பல பக்க விடயங்களை உள்ளடக்கி இருந்தால் வரவேற்கதக்கது என்பது எனக்கு நன்கு தெரிந்தாலும் நிறைந்த வேலைப் பளுக்களுக்கு மத்தியில் அது சில வேளைகளில் சாத்தியப்படுவதில்லை. இருப்பினும், சந்தர்ப்பங்கள் கிடைக்கும் வேளைகளில் சிறந்த தகவல்களை எடுத்துவருவதற்கு தவறமாட்டேன் என்பதை உங்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்.

Monday, November 9, 2009

பேர்லின் சுவர்




பேர்லின் சுவர் என்பது கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனியைப் பிரிக்கும் சுவர் ஆகும்.
பனிப்போரின் சின்னமாகக் கருதப்படும் இச்சுவர் இரண்டு பகுதிகளையும் 28 ஆண்டுகளாகப் பிரித்து வைத்திருந்தது. இதன் கட்டுமானப்பணி ஆகஸ்ட் 13 1961 அன்று ஆரம்பித்தது. இச்சுவ பனிப்போரின் இறுதியில் 1989 இல் முற்றாக இடிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் இச்சுவரைத் தாண்டி ஜெர்மனிக்குள் தப்ப முயன்ற 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பனிப்போரின் இறுதியில் உள்நாட்டுக் குழப்பங்களின் உச்சக்கட்டத்தில் கிழக்கு ஜேர்மனி அரசு நவம்பர் 9, 1989 இல் மேற்கிற்குள் செல்வதற்கு மக்களை அனுமதிப்பதாக அறிவித்தைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கானோர் சுவரில் ஏறி மேற்கிற்குள் நுழைந்தனர். பல்லாயிரக்கணக்கான மேற்கு ஜேர்மனியினர் இவர்களை மற்றையா பக்கத்தில் இருந்து வரவேற்றனர். அடுத்த சில கிழமைகளில் சுவர் இடிக்கப்பட்டது.
பேர்லின் சுவரின் வீழ்ச்சி ஜேர்மனி இரண்டும் இணைவதற்கு அத்திவாரமாக அமைந்தது. இவை அக்டோபர் 3, 1990 இல் இணைந்தன.




இடம் மாறும் இதயங்கள்..!

ஓர் ஆணும் பெண்ணும் எவ்வாறு காதலர்களாகிறார்கள்?, அதாவது தங்களுக்கேற்ற துணையை எவ்வாறு தெரிவு செய்கின்றார்கள் என்று ஆராயவிருக்கிறோம். அண்ட வெளியை அடக்கி சிறுபொருளாய் ஆக்கி என் சட்டைப்பைக்குள் வைத்து விடுவது போன்றதோர் விபரீத முயற்சி இதுவல்லவா? வானம் எங்கே ஆரம்பிக்கின்றது?, எங்கே முடிகின்றது? என்பதனை முயன்றால் அறிந்து விடலாம். ஆனால்... காதல் எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது உங்களால் கூற முடியுமா?. முடியாதொன்றே.
ஆகாய சூரியனை என் சுட்டுவிரலால் சுட்டு விடுவது போன்ற பிரமை எனக்குள் எழுகின்றது. இவையெல்லாம் நடக்கக்கூடியதா? என்றெண்ணுவீர்கள். இளைஞர்களால் இயலாதென்பது ஏதுமுண்டா? ஆனாலும் இத்தலைப்பில் நான் நிறைவை எட்ட முடியாதென்ற உணர்வைப் பெறுகின்றேன். காதலினை வர்ணிக்க, வகைப்படுத்த ஒரு அத்தியாயம் போதாது. ஆகவே இது இத்தோடு முகவரியற்றுப் போய்விடாது. தொடரும்...
“மழை வானத்திலிருந்து பொழிய வேண்டும், மின்னல் வானத்தைப் பிளந்து தோன்ற வேண்டும், கடலலை கடலில் இருந்து எழ வேண்டும் இது போலத் தான் ஆண்-பெண் காதலும். மழை இந்த இடத்தில் தான் பொழிய வேண்டும், மின்னல் இந்த இடத்தில் தான் தோன்ற வேண்டும், கடலலை கடலில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் எழ வேண்டும் என்று நீங்கள் இயற்கைக்கு எப்படி கட்டளை போடமுடியாதோ அது போலத்தான் காதலும். காதலைக் கட்டுப்படுத்த முடியாது.
குயில் ஏன் கூவுகிறது? கோடையில் ஏன் வெப்பம்? பனிக்காலத்தில் ஏன் குளிர்?
மரங்களில் ஏன் இலைகள் உதிர்கின்றன? மீண்டும் ஏன் துளிர்கின்றன? என்கின்ற கேள்விகளுக்கு எப்படி விரைவில் விடை காண முடியாதோ அது போல் தான் காதலும். காதல் ஏன் வருகிறது? எதற்காக வருகிறது? எப்படி வருகிறது? விடை தெரியா வினாக்கள் இவை.
காதல் என்பது இளமையின் கிளர்ச்சி, பருவத்தின் எழுச்சி என்பார்கள். அதாவது கதிரவன் வரவைக்கண்டு தாமரை மலர்வது போல் தன் காதலன் உருவம்; கண்டதும் மங்கையுள்ளம் மலர்கிறது. அவ்வாறே காதலியை காண்கையில் அவனது உள்;ளமும் மகிழ்ச்சியால் நிறைகிறது. ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் காதலன், காதலியை எவ்வாறு இனம் கண்டு கொள்கிறார்கள்? எப்படி அவர்களுள் முன் பின் முகவரியின்றி புதிய சொந்தம்; உருவாகிறது? எனக்குரியவள் இவள் தான், எனக்குரியவன் இவன் தான் என்று இவர்களால் எப்படி இனம் பிரிக்க முடிகிறது?. குழப்பமான கேள்விகள் தான்... இதை சங்கப்புலவன் “செம்புலப்பெயனீரார் அழகான செய்யுளாக வடிக்கிறார் இவ்வாறு,
“யாயும் ஞாயும் யாராகி யாரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர்; போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
அதாவது என்னைப் பெற்ற தாயும், உன்னைப் பெற்ற தாயும் எந்;த முறையில் உறவினர்களோ அறியோம். அதைப் போன்றே எனது தந்தையும், உனது தந்தையும் எப்படி உறவினர்களோ நாம் சிறிதும் அறியோம். இப்போதிருந்து உடலோடு உயிராக, உணர்வோடு கூடிய அறிவாக, மலரில் மணமாக நீங்காது இணைந்து வாழப்போகும் நாமும் ஒருவரையொருவர் எவ்வாறு, எப்படி இதற்கு முன்பு அறிந்தோம்? தாயின் உறவும், தந்தையின் உறவும், நாம் இருவரும் சந்தித்துக் கொண்ட விதமும் எப்படி நிகழ்ந்ததோ தெரியவில்லை. எதுவாகிலும் ஒன்று மட்டும் உண்மை.
சிவந்த மண்ணில் பெய்கின்ற மழைநீர் அந்த மணணில்; கலந்துள்ள சுவை, நிறத்திற்கு ஒப்ப மாறிவிடும் தன்மை போன்று எனக்குள் கலந்துவிட்ட நீயும், உனக்குள் கலந்துவிட்ட நானும் உணர்வாலும் உயிராலும் ஒன்றுபட்டு விட்டோம் என்கிறது அச் செய்யுள். மழை பெய்கின்ற மண்ணின் தன்மைக்கேற்ப மழைநீரின் தன்மை வேறுபடும் என்பதனை அழகாக “செம்புலப் பெய்நீர்; போல என்று உவமை கூறிய நயத்தால் இப்புலவரின் இயற்பெயர் மறைந்து “செம்புலப்பெயனீரார் என்று பெயர் கொண்டார் என்பது வரலாறு.
ஆக்கம்-“ சிவபுரத்தூர் சிநேகன்” கனடா. 2002

"தமிங்கிலம்"

அப்ப எழுதினது இப்ப பிடிச்சா படியுங்கோ.. ..
இன்றைய இந்த புதிய பொழுதுதனில் உங்களோடு அலசப்போவது “தமிங்கிலம்”; ஆம். தமிழைப் பற்றி ஒரு சில பார்வை என் அறிவுக்கெட்டிய வரை உணர்ச்சிக் கவிஞர் துணைகொண்டு உங்கள் மனச்சாட்சியை சற்று தொட்டுப் பார்க்க விழைகின்றேன்.
தமிழ்! ஆம். என்ன ஓர் அழகிய மொழியின் பெயர். ஓர் மொழி அழிந்தாலும் கூட, அந்த மொழியின் பெயராவது இனிமையாய் அந்த மொழி கொண்டு இருக்கும். ஆனால் தமிழ் -டமில் ஆகியிருப்பது கவலைக்குரியதே. விருந்தோம்பலில் முதன்மையானவர்கள் தமிழர்கள். வந்தோரை வாழ வைப்பவர்கள் தமிழர்கள். தங்கள் பண்பாட்டின் சிறப்பு போன்றே மொழி விடயத்திலும் விருந்தோம்பல் செய்திருக்கின்றார்கள்.
சமகால கவலையாக என் மனதையும், உங்கள் மனதையும் நெருக்கொண்டிருப்பது “தமிங்கிலம்”. தமிங்கிலம் என்றதும் உடனே ஞாபகத்தில் நிற்பவர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். அவரது தமிழாய்வின் சிறந்த வெளிப்பாடாக உங்கள் கைகளில் தவழ்வதுதான் “தமிழனா? தமிங்கிலனா? என்கின்ற அவரது அண்மைய நூல். தமிழன் தன் தாய் மொழியைப் புகழ்ந்தான், போற்றினான், தலையில் வைத்துக் குதித்தான். ஆனால் காப்பாற்றவில்லை. சொந்த மொழி அழியப் போகின்றதே என்னும்; கவலை கொஞ்சமும் இல்லாமல் வந்த மொழிக்கெல்லாம் வாசல் திறந்தான். தமிழ் மொழி தனித்ததியங்கும் ஆற்றல் கொண்டது எனத் தெரிந்தும் தமிழன் பிறமொழிகளை ஏற்றுத் தமிழை அழித்தான். இப்போது மேலும் அழித்துக் கொண்டிருக்கின்றான்... என்கின்றார் கவிஞர்.
மூத்த மொழி, பல தேசங்களில் பரந்து சிறந்த பண்டைய மொழி, தமிழ் மொழியிலிருந்து பலமொழிகள் தோன்றியிருக்கிறது என்று இன்றும் மொழிப்பெருமை பேசிக்கொண்டிருப்பவர்களி;டம், ஒரேயொரு கேள்வி கேட்டுப் பாருங்கள். தமிழ்மொழி எங்கே இருக்கிறது? என்று. திக்கித் திணறிக் கூறுவார்கள் தமிழகத்தில் கொஞசமும், தமிழீழத்தில் கொஞ்சமும் என்று. தமிழ் வாழ்ந்த, தமிழ் ஆட்சி நிலவுகின்ற தமிழகத்தை விட தமிழீழத்தில் பல மடங்குகள் அதிகமாய் தமிழ் வாழ்கிறது என்கின்ற உண்மையை அறிஞர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
தமிழனுக்கெனப் புலரவிருக்கும் தேசத்தில் நிச்சயம் தமிழ் வாழும் என்பதையும் அவர்கள் ஏற்கத்தவறவில்லை. ஆனாலும் காலப்போக்கில் தன் தாய் நாடு எனப் பசுமை நினைவுகளைத் தாங்கியபடி, மொழியைப் பெயர்ந்திருந்த இடத்தில் தொலைத்துவிட்டு தமிழீழம் செல்லப் போகின்றவர்களால் அந்நாட்டில் மொழிச்சிதைவு ஏற்படாமல் இருக்குமா? இன்றைய காலவோட்டத்தில் நான் நம்மவர்களை நான்கு வகைப்படுத்திப் பார்க்கின்றேன். அதாவது எம் முதியவர்கள், எம் பெற்றோர்கள், நாங்கள், எம் பின்னோர்கள்.
எம் முதியவர்கள் தமிழைக் கொடுத்தார்கள். எம் பெற்றோர் தமிழில் ஆங்கிலக்கலப்புச் செய்தார்கள் என்பதை ஆதாரப்படுத்துகிறார்கள் தமிழ்பற்றாளர்கள். நாங்கள் கற்றது கொஞ்சம் பெற்;றது கொஞ்சமாய் வாழ்பவர்கள். எம் பெற்றோர்கள் அதிகளவில் ஆங்கிலக் கலப்புடன் கூடிய தமிழையே எமக்குத் தருகிறார்கள். தமிழை ஆய்ந்தறிந்த அறிஞர்கள் பலர் முற்றிலும் தமிழில் கதைப்பதில்லை. அதிகப்படியான ஆங்கிலத்தைக் கலந்தே கதைக்கின்றார்கள். உதாரணமாய் வானொலிக் கருத்தாடலில் நீங்கள் காணலாம். தங்கள் அழகிய தமிழ்ப்பெயர்களைக் கூட தமிங்கிலம்; ஆக்குகின்றார்கள். இந்நிலையில் நாங்கள் எங்கிருந்து தூய தமிழைப் பொறுவது? எங்கள் பின் வருவோருக்கு எப்படித் தமிழைக் கொடுப்பது? நாம் பேசுகின்ற மொழியானது ஏற்கனவே பல மொழிகளின் கலப்படமாய் உள்ளது. இலைமறை காயாக இன்னமும் தமிழோடு ஒழிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அவற்றையெல்லாம் விட கொடுங்கோல் ஆட்சி புரிய துணிந்திருப்பது ஆங்கிலம்.
தற்போது தமிழர்கள் உலகளாவும் பல்துறையிலும் தேர்ச்சி பெற்று வளர்கிறார்கள். பிற மொழியில் நாம் படித்து பட்டம் பெற வேண்டும். அதற்காக அம்மொழியைக் கொண்டு எம் தாய் மொழியை அழித்தல் எந்த வகையில் நியாயம்?. பள்ளியில் வேறு மொழியொன்றை நீங்கள் படிக்கும் போது ஏதேனும் ஓர் சொல்லின் பொருள்; விளங்;காவிடில்;, அதனை உங்கள் மொழியில் மொழிபெயர்த்து அச்சொல்லின் பொருளை அறிந்து கொள்ளுங்;கள் என்கிறார்கள் ஆசிரியர்கள். தமிழே தெரியாவிட்டால் மொழிபெயர்த்து என்ன பலன்?
தன் பிள்ளைக்கு தமிழ் கதைக்கத் தெரியாது, எழுதத் தெரியாது என்று பிறரிடம் கூறிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றான் தமிழன். பிள்ளைகள் திக்கி திக்கி தமக்குத் தெரிந்த, அறிந்த தமிழில் பேச முயல்கின்ற போதும் கூட பதிலளிக்கின்ற பெற்றோர் ஆங்கிலத்தில் விளக்கம் கூறுகிறார்கள். இந்நிலையை பார்க்கையில் தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் தாங்களல்ல, உனது அப்பாவும், அம்மாவும் ஆங்கிலேயர்கள் என்று கூறுவது போல் இருக்கிறது. ஆங்கிலம் கதைக்கச் சொல்லும் பெற்றோரை இப்படி வகைப்படுத்தினால், தமிங்கிலம் பேசுவோரை வகைப்படுத்த உங்களிடமே விடுகின்றேன்.
இந்நிலைமை ஒருசில ஊடகங்களுக்குக் கூட இருக்கின்ற நிலையை என்னால் காணக்கூடியதாக இருக்கின்றது. இளைஞர் ஒருவரிடம் பேட்டி எடுக்கின்ற போது, அவ்விளைஞர் முயற்சி செய்து தமிழில் பதிலளிக்க முயல்கின்றார். ஆனால் பேட்டி காண்பவர் முந்திக் கொண்டு அவரிடமிருந்து ஆங்கிலத்தில் பதிலைப் பெறுகின்றார். மற்றுமோர் தமிழ் ஊடகமொன்றில் ஓர் இளைஞர் தமிழ் கலை கலாச்சார பண்பாட்டைப் பற்றி ஆங்கிலத்தில் விளக்கம் தருகிறார். அவருடைய தோற்றமோ, பேசும் மொழியோ தமிழைப் போற்றக் கூடியதாய் இருக்கவில்லை. இவைகள் போன்று பல நிகழ்வுகள். மிகுந்த கவலையோடு சிந்திக் கொண்டிருக்கிறது என் பேனா மைத்துளிகள்.
தமிழோ, தமிங்கிலமோ எதுவாகிலும் இருந்து விட்டுப் போகட்டும் எமக்கென்ன வேலை என்றிருக்க முடியாது. அன்று, அவ்விளைஞன் எமக்கென்ன என்று இருந்திருப்பாரேயானால் இன்று எம்மினம் அடியோடு அழிந்திருக்கும். உலக வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் சீரழிவுக்கெதிராய்; குரல் கொடுத்ததில், கொடுப்பதில் அதிகமானோர் இளைஞர்களாகவே இருக்கின்றார்கள். நாளைய சமுதாயம் எம்மைப் பழிக்கும் நிலை வரவிடலாமோ?. ஆகவே தான் இன்றைய ஒவ்வோர் இளைஞனும் எமது கலை, கலாச்சாரம,; பண்பாடு, மொழிச் சீரழிவுக்கெதிராய் கிளர்ந்தெழ வேண்டும்.
அதிகம் எழுதித் தீர்க்கின்றாயே, உம் தமிழில் தமிங்கிலம் இல்லையா என நீங்கள் முணுமுணுப்பது என் செவிகளுக்கு எட்டுகின்றது. உங்களுக்கு விடையளிக்க கவிஞரின் வரிகளை உதவிக்கு இணைக்கின்றேன். “சொல்லில் இனிது தமிழ்ச்சொல்லே என்று கூறிய பாரதியின் பாடல்கள் எத்தனையோ வடமொழி கலந்து வாழ்ந்தது. இன்னமும் வாழ்கிறது. இது பழையது. புதியதை எடுத்துக் கொண்டால், தமிழை அறவே கற்றுத் தெளிந்த பாவலராக மட்டுமல்ல இன்றைய இளையோருக்கு மிகவும் பிடித்த கவிஞர் வைரமுத்து செய்து கொண்டிருப்பது என்னவென்று உங்களுக்குப் புரியும். “தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு” என்று பாடல் வார்த்த வைரமுத்துவிடமே தமிழுக்குப் பஞ்;சம். அப்படியிருக்க எங்களிடம் நிறையவே பஞ்சம் வரும். நான் பேசும் தமிழும், எழுதும் தமிழும் கற்றது கொஞ்சமாயும், பெற்றது கொஞ்சமாயும் இருக்க கேட்டு அறிந்து கொள்கின்ற சமகாலத்தமிழ் அதிகமாய் இருக்கின்றது.
இந்நிலையில் நான் உள்வாங்கிக் கொள்கின்ற தமிழ் ஆய்வாளர்கள், அறிஞர்களின் தமிழ் தமிங்கிலமாய் இருக்கும்;;;; நிலையில், என் தமிழிலும் பிறமொழிச்சேறு பூசப்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. எங்கள் எதிர்காலச் சந்ததியினருக்கு தனித்தமிழைப் பருக வழி செய்ய வேண்டும் என்பதே எனது நீண்ட ஆவலாக இருக்கின்றது.
தமிழனால் தமிழன் அழிந்தான் - என்பது நமது நேற்றாக இருந்தது.
தமிழனால் தமிழன் அழிந்து கொண்டிருக்கின்றான் - என்பது நமது இன்றாக இருக்கின்றது.
தமிழனால் தமிழன் மீட்கப்பட்டான் - என்பது நமது நாளையாக இருக்கட்டும்.
தமிங்கிலர்களுக்கெதிரான இந்த சீற்றம் தமிழர்களுக்கெதிரானதல்ல, அவர்கள் காவும் தமிங்கிலத்துக்கெதிரான சீற்றம் என்கிறார் உணர்ச்சிக் கவிஞர். இவர் தமிழுக்காய் உருகியது ஏராளம். 1957 இல் தமிழ் உணர்வின் வெளிப்பாட்டால் சிறை சென்று வதைபட்டார். 1959 - 1963 வரை தமிழகத்திலிருந்து பட்டப்படிப்பை முடித்து மீண்டும் தாயகம் திரும்ப 1972 இல் மீண்டும் தமிழுக்காய் சிறை சென்றவர். இவரது வாழ்க்கை வரலாறு தமிழ்மொழிக்கான தியாகம் நிறைந்தது. தமிழீழம் அவரை தமிழகம் தமிழ் பாலூட்டியது, இப்பொழுது தமிழ் உலகம் அவரைப் பயன்படுத்திக் கொள்கின்றது. இவரது பணியில் சிறுதுளியேனும் நாம் தமிழுக்காய் ஆற்றுவோமா?.
இளைஞர்களே சிந்தியுங்கள்!
நீங்கள்தான் வருங்காலத் தூண்கள். எங்கள் தாய் தமிழையும் தாய் நிலத்தையும் காக்க இன்றே சபதம் எடுங்கள். வாழ்க தமிழ் !! வளர்க தமிழீழம்!!!
ஆக்கம் -
சிநேகிதன் கஜன் . கனடா. 2002

Saturday, November 7, 2009

வளரிக்கு எனது வாழ்த்துக்கள்

வளரியை வளர்க்க வளமாக்க அரிய பங்காற்றும் என் நண்பன் சுதனுடன் ஒருமுறை பேசிவிட ஆவல் கொண்டு தேடுகிறேன். பலமுறை பலரிடம் கேட்டு களைத்துவிட்டேன். இனி இயக்குனர் சேரனிடம்தான் செல்ல வேண்டும் “சுதன் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று கதை சொல்லி ஓர் படம் எடுத்தாவது அது உன் விமர்சனத்துக்குள் சிக்கியாவது என்னைத் தொடர்பு கொள்ள. என்ன..? இந்த கருத்தையாவது வாசிப்பாயா? யாராவது நெருங்கியவர்கள் வாசித்தாலாவது சொல்லி விடுங்கள் “கனடாவிலிருந்து இரசிகன் ஓருவன் சுகம் கேட்டுள்ளான்” என்றாவது. தொடரட்டும் உன் பணி..!