Wednesday, December 9, 2009

ரொரன்டொ இன்று பனிமழையில் குளித்தது

ரொரன்டொ மத்தியில் இருந்து விசேட நிருபர் கஜன் கணேசலிங்கம்


2009ம் ஆண்டுக்கான முதலாவது பனிப்பொழிவை இன்று ரொரன்டொ நகர்வாழ் மக்கள் மகிழ்வோடு வரவேற்றார்கள். "அட நீ உருப்படுவியா..?" என்று இன்று காலையில் வீதியில் வாகனத்தோடு இறங்கியவர்களும், பேருந்துக்காக காத்து நிற்றவர்களும், ரொரன்டொ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் (Toronto Pearson International Airport) பயண தாமதத்தால் பரிதவித்தவர்களும் திட்டித் தீர்ப்பது எனக்கு கேட்கிறது. இருந்தாலும், "இந்தமுறை வெள்ளைக் கிறிஸ்த்துமஸ் (White Christmas) இல்லாமல் போய்விடுமோ..?" என ஏங்கித் தவித்த உள்ளங்களுக்கு நல்ல மகிழ்ச்சி கிடைத்துள்ளது. ஒன்ராறியோ மாநிலத்தை மையம் கொண்டிருந்த இந்த பனிப் புயல் ரொரன்டொவிலும் கண் வைத்திருந்தது. சுமார் 5cm முதல் 15cm வரையுலுமான பனிப்பொழிவு சிறு நகரங்களுக்கு நகரம் மாறுபட்டு இருந்தது.

இந்த பதிவு இணையத்தில் ஏற்றும்போது ரொரன்டொ எதிர்கொண்ட பனிப்புயல் எச்சரிக்கை முடிவுக்கு வந்திருப்பதாகவும் தொடரும் நாட்களில் சுமார் 1cm வரையிலான பனிப் பொழிவை எதிர் பார்க்கலாம் என் செய்திச் சேவைகள் அறியத் தந்தாலும்..., இன்றைய பனிப்பொழிவால் இன்று காலையில் வழமைக்கு மாறாக பல மடங்கு நீண்ட பயண நேரத்தை செலவிட வேண்டி இருந்ததாக முகநூல் (facebook) பதிவாளர் இளவரசன் குமார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 200க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் இதுவரை தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாநிலப் பொலிசார் (O.P.P) அறிவித்துள்ள நிலையில் 90 வீதமான பாடசாலை பேருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது. ஆனாலும் பாடசாலைக்கான மாணவர் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டதாக செய்திகள் இல்லை. ரொரன்டொ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் (Toronto Pearson International Airport) சுமார் 160க்கும் மேலான விமான சேவைகளில் நேர தாமதம் ஏற்பட்டதாக அங்கு பேசவல்ல அதிகாரி எமக்கு தெரிவித்துள்ளார். விமான சேவைகளில் ஏற்பட்ட நேர தாமதத்தால் அங்கு பணிபுரிபவர்களின் வேலை நேரம் நீடிக்கப்பட்டிருந்ததாகவும் நிறைந்த வேலைப் பளு ஏற்பட்டதாகவும் அங்குள்ள நிறுவனமொன்றில் முகாமையாளராக பணியாற்றும் ஒருவர் எமது நிருபருக்கு பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.