Monday, November 9, 2009

"தமிங்கிலம்"

அப்ப எழுதினது இப்ப பிடிச்சா படியுங்கோ.. ..
இன்றைய இந்த புதிய பொழுதுதனில் உங்களோடு அலசப்போவது “தமிங்கிலம்”; ஆம். தமிழைப் பற்றி ஒரு சில பார்வை என் அறிவுக்கெட்டிய வரை உணர்ச்சிக் கவிஞர் துணைகொண்டு உங்கள் மனச்சாட்சியை சற்று தொட்டுப் பார்க்க விழைகின்றேன்.
தமிழ்! ஆம். என்ன ஓர் அழகிய மொழியின் பெயர். ஓர் மொழி அழிந்தாலும் கூட, அந்த மொழியின் பெயராவது இனிமையாய் அந்த மொழி கொண்டு இருக்கும். ஆனால் தமிழ் -டமில் ஆகியிருப்பது கவலைக்குரியதே. விருந்தோம்பலில் முதன்மையானவர்கள் தமிழர்கள். வந்தோரை வாழ வைப்பவர்கள் தமிழர்கள். தங்கள் பண்பாட்டின் சிறப்பு போன்றே மொழி விடயத்திலும் விருந்தோம்பல் செய்திருக்கின்றார்கள்.
சமகால கவலையாக என் மனதையும், உங்கள் மனதையும் நெருக்கொண்டிருப்பது “தமிங்கிலம்”. தமிங்கிலம் என்றதும் உடனே ஞாபகத்தில் நிற்பவர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். அவரது தமிழாய்வின் சிறந்த வெளிப்பாடாக உங்கள் கைகளில் தவழ்வதுதான் “தமிழனா? தமிங்கிலனா? என்கின்ற அவரது அண்மைய நூல். தமிழன் தன் தாய் மொழியைப் புகழ்ந்தான், போற்றினான், தலையில் வைத்துக் குதித்தான். ஆனால் காப்பாற்றவில்லை. சொந்த மொழி அழியப் போகின்றதே என்னும்; கவலை கொஞ்சமும் இல்லாமல் வந்த மொழிக்கெல்லாம் வாசல் திறந்தான். தமிழ் மொழி தனித்ததியங்கும் ஆற்றல் கொண்டது எனத் தெரிந்தும் தமிழன் பிறமொழிகளை ஏற்றுத் தமிழை அழித்தான். இப்போது மேலும் அழித்துக் கொண்டிருக்கின்றான்... என்கின்றார் கவிஞர்.
மூத்த மொழி, பல தேசங்களில் பரந்து சிறந்த பண்டைய மொழி, தமிழ் மொழியிலிருந்து பலமொழிகள் தோன்றியிருக்கிறது என்று இன்றும் மொழிப்பெருமை பேசிக்கொண்டிருப்பவர்களி;டம், ஒரேயொரு கேள்வி கேட்டுப் பாருங்கள். தமிழ்மொழி எங்கே இருக்கிறது? என்று. திக்கித் திணறிக் கூறுவார்கள் தமிழகத்தில் கொஞசமும், தமிழீழத்தில் கொஞ்சமும் என்று. தமிழ் வாழ்ந்த, தமிழ் ஆட்சி நிலவுகின்ற தமிழகத்தை விட தமிழீழத்தில் பல மடங்குகள் அதிகமாய் தமிழ் வாழ்கிறது என்கின்ற உண்மையை அறிஞர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
தமிழனுக்கெனப் புலரவிருக்கும் தேசத்தில் நிச்சயம் தமிழ் வாழும் என்பதையும் அவர்கள் ஏற்கத்தவறவில்லை. ஆனாலும் காலப்போக்கில் தன் தாய் நாடு எனப் பசுமை நினைவுகளைத் தாங்கியபடி, மொழியைப் பெயர்ந்திருந்த இடத்தில் தொலைத்துவிட்டு தமிழீழம் செல்லப் போகின்றவர்களால் அந்நாட்டில் மொழிச்சிதைவு ஏற்படாமல் இருக்குமா? இன்றைய காலவோட்டத்தில் நான் நம்மவர்களை நான்கு வகைப்படுத்திப் பார்க்கின்றேன். அதாவது எம் முதியவர்கள், எம் பெற்றோர்கள், நாங்கள், எம் பின்னோர்கள்.
எம் முதியவர்கள் தமிழைக் கொடுத்தார்கள். எம் பெற்றோர் தமிழில் ஆங்கிலக்கலப்புச் செய்தார்கள் என்பதை ஆதாரப்படுத்துகிறார்கள் தமிழ்பற்றாளர்கள். நாங்கள் கற்றது கொஞ்சம் பெற்;றது கொஞ்சமாய் வாழ்பவர்கள். எம் பெற்றோர்கள் அதிகளவில் ஆங்கிலக் கலப்புடன் கூடிய தமிழையே எமக்குத் தருகிறார்கள். தமிழை ஆய்ந்தறிந்த அறிஞர்கள் பலர் முற்றிலும் தமிழில் கதைப்பதில்லை. அதிகப்படியான ஆங்கிலத்தைக் கலந்தே கதைக்கின்றார்கள். உதாரணமாய் வானொலிக் கருத்தாடலில் நீங்கள் காணலாம். தங்கள் அழகிய தமிழ்ப்பெயர்களைக் கூட தமிங்கிலம்; ஆக்குகின்றார்கள். இந்நிலையில் நாங்கள் எங்கிருந்து தூய தமிழைப் பொறுவது? எங்கள் பின் வருவோருக்கு எப்படித் தமிழைக் கொடுப்பது? நாம் பேசுகின்ற மொழியானது ஏற்கனவே பல மொழிகளின் கலப்படமாய் உள்ளது. இலைமறை காயாக இன்னமும் தமிழோடு ஒழிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அவற்றையெல்லாம் விட கொடுங்கோல் ஆட்சி புரிய துணிந்திருப்பது ஆங்கிலம்.
தற்போது தமிழர்கள் உலகளாவும் பல்துறையிலும் தேர்ச்சி பெற்று வளர்கிறார்கள். பிற மொழியில் நாம் படித்து பட்டம் பெற வேண்டும். அதற்காக அம்மொழியைக் கொண்டு எம் தாய் மொழியை அழித்தல் எந்த வகையில் நியாயம்?. பள்ளியில் வேறு மொழியொன்றை நீங்கள் படிக்கும் போது ஏதேனும் ஓர் சொல்லின் பொருள்; விளங்;காவிடில்;, அதனை உங்கள் மொழியில் மொழிபெயர்த்து அச்சொல்லின் பொருளை அறிந்து கொள்ளுங்;கள் என்கிறார்கள் ஆசிரியர்கள். தமிழே தெரியாவிட்டால் மொழிபெயர்த்து என்ன பலன்?
தன் பிள்ளைக்கு தமிழ் கதைக்கத் தெரியாது, எழுதத் தெரியாது என்று பிறரிடம் கூறிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றான் தமிழன். பிள்ளைகள் திக்கி திக்கி தமக்குத் தெரிந்த, அறிந்த தமிழில் பேச முயல்கின்ற போதும் கூட பதிலளிக்கின்ற பெற்றோர் ஆங்கிலத்தில் விளக்கம் கூறுகிறார்கள். இந்நிலையை பார்க்கையில் தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் தாங்களல்ல, உனது அப்பாவும், அம்மாவும் ஆங்கிலேயர்கள் என்று கூறுவது போல் இருக்கிறது. ஆங்கிலம் கதைக்கச் சொல்லும் பெற்றோரை இப்படி வகைப்படுத்தினால், தமிங்கிலம் பேசுவோரை வகைப்படுத்த உங்களிடமே விடுகின்றேன்.
இந்நிலைமை ஒருசில ஊடகங்களுக்குக் கூட இருக்கின்ற நிலையை என்னால் காணக்கூடியதாக இருக்கின்றது. இளைஞர் ஒருவரிடம் பேட்டி எடுக்கின்ற போது, அவ்விளைஞர் முயற்சி செய்து தமிழில் பதிலளிக்க முயல்கின்றார். ஆனால் பேட்டி காண்பவர் முந்திக் கொண்டு அவரிடமிருந்து ஆங்கிலத்தில் பதிலைப் பெறுகின்றார். மற்றுமோர் தமிழ் ஊடகமொன்றில் ஓர் இளைஞர் தமிழ் கலை கலாச்சார பண்பாட்டைப் பற்றி ஆங்கிலத்தில் விளக்கம் தருகிறார். அவருடைய தோற்றமோ, பேசும் மொழியோ தமிழைப் போற்றக் கூடியதாய் இருக்கவில்லை. இவைகள் போன்று பல நிகழ்வுகள். மிகுந்த கவலையோடு சிந்திக் கொண்டிருக்கிறது என் பேனா மைத்துளிகள்.
தமிழோ, தமிங்கிலமோ எதுவாகிலும் இருந்து விட்டுப் போகட்டும் எமக்கென்ன வேலை என்றிருக்க முடியாது. அன்று, அவ்விளைஞன் எமக்கென்ன என்று இருந்திருப்பாரேயானால் இன்று எம்மினம் அடியோடு அழிந்திருக்கும். உலக வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் சீரழிவுக்கெதிராய்; குரல் கொடுத்ததில், கொடுப்பதில் அதிகமானோர் இளைஞர்களாகவே இருக்கின்றார்கள். நாளைய சமுதாயம் எம்மைப் பழிக்கும் நிலை வரவிடலாமோ?. ஆகவே தான் இன்றைய ஒவ்வோர் இளைஞனும் எமது கலை, கலாச்சாரம,; பண்பாடு, மொழிச் சீரழிவுக்கெதிராய் கிளர்ந்தெழ வேண்டும்.
அதிகம் எழுதித் தீர்க்கின்றாயே, உம் தமிழில் தமிங்கிலம் இல்லையா என நீங்கள் முணுமுணுப்பது என் செவிகளுக்கு எட்டுகின்றது. உங்களுக்கு விடையளிக்க கவிஞரின் வரிகளை உதவிக்கு இணைக்கின்றேன். “சொல்லில் இனிது தமிழ்ச்சொல்லே என்று கூறிய பாரதியின் பாடல்கள் எத்தனையோ வடமொழி கலந்து வாழ்ந்தது. இன்னமும் வாழ்கிறது. இது பழையது. புதியதை எடுத்துக் கொண்டால், தமிழை அறவே கற்றுத் தெளிந்த பாவலராக மட்டுமல்ல இன்றைய இளையோருக்கு மிகவும் பிடித்த கவிஞர் வைரமுத்து செய்து கொண்டிருப்பது என்னவென்று உங்களுக்குப் புரியும். “தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு” என்று பாடல் வார்த்த வைரமுத்துவிடமே தமிழுக்குப் பஞ்;சம். அப்படியிருக்க எங்களிடம் நிறையவே பஞ்சம் வரும். நான் பேசும் தமிழும், எழுதும் தமிழும் கற்றது கொஞ்சமாயும், பெற்றது கொஞ்சமாயும் இருக்க கேட்டு அறிந்து கொள்கின்ற சமகாலத்தமிழ் அதிகமாய் இருக்கின்றது.
இந்நிலையில் நான் உள்வாங்கிக் கொள்கின்ற தமிழ் ஆய்வாளர்கள், அறிஞர்களின் தமிழ் தமிங்கிலமாய் இருக்கும்;;;; நிலையில், என் தமிழிலும் பிறமொழிச்சேறு பூசப்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. எங்கள் எதிர்காலச் சந்ததியினருக்கு தனித்தமிழைப் பருக வழி செய்ய வேண்டும் என்பதே எனது நீண்ட ஆவலாக இருக்கின்றது.
தமிழனால் தமிழன் அழிந்தான் - என்பது நமது நேற்றாக இருந்தது.
தமிழனால் தமிழன் அழிந்து கொண்டிருக்கின்றான் - என்பது நமது இன்றாக இருக்கின்றது.
தமிழனால் தமிழன் மீட்கப்பட்டான் - என்பது நமது நாளையாக இருக்கட்டும்.
தமிங்கிலர்களுக்கெதிரான இந்த சீற்றம் தமிழர்களுக்கெதிரானதல்ல, அவர்கள் காவும் தமிங்கிலத்துக்கெதிரான சீற்றம் என்கிறார் உணர்ச்சிக் கவிஞர். இவர் தமிழுக்காய் உருகியது ஏராளம். 1957 இல் தமிழ் உணர்வின் வெளிப்பாட்டால் சிறை சென்று வதைபட்டார். 1959 - 1963 வரை தமிழகத்திலிருந்து பட்டப்படிப்பை முடித்து மீண்டும் தாயகம் திரும்ப 1972 இல் மீண்டும் தமிழுக்காய் சிறை சென்றவர். இவரது வாழ்க்கை வரலாறு தமிழ்மொழிக்கான தியாகம் நிறைந்தது. தமிழீழம் அவரை தமிழகம் தமிழ் பாலூட்டியது, இப்பொழுது தமிழ் உலகம் அவரைப் பயன்படுத்திக் கொள்கின்றது. இவரது பணியில் சிறுதுளியேனும் நாம் தமிழுக்காய் ஆற்றுவோமா?.
இளைஞர்களே சிந்தியுங்கள்!
நீங்கள்தான் வருங்காலத் தூண்கள். எங்கள் தாய் தமிழையும் தாய் நிலத்தையும் காக்க இன்றே சபதம் எடுங்கள். வாழ்க தமிழ் !! வளர்க தமிழீழம்!!!
ஆக்கம் -
சிநேகிதன் கஜன் . கனடா. 2002

No comments:

Post a Comment

நிறையவே திட்டவேணும்போல இருக்கும்... இருப்பினும் அவையடக்கமாய் ஒரு சில வார்த்தைகள் கிறுக்குங்கள்.