Friday, November 13, 2009

மீண்டு (ம்) வருவாரா பொட்டு..??

(நன்றி - ஆனந்த விகடன்)

போர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கும் அந்த விழா 27-ம் தேதி மாலையுடன் முடிவடையும். 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!' என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார். புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அந்த நேரத்துக்காகத் தவம் இருப்பார்கள். அதற்கு முந்தைய 26-ம் தேதிதான் பிரபாகரனின் பிறந்த நாள். கடந்த ஆண்டு போர்க் கால நெருக்கடி சூழ்ந்த நேரத்திலும், பிரபாகரன் தோன்றினார். ''சமாதானத்துக்கான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறோம். ஆனாலும், எம் எதிரி போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவை நட்பு சக்தியாகத்தான் நினைத்தோம். நினைக்கிறோம். இந்தியா எங்களுக்கு தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும். இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களுக்குத்தான் நான் மிகுந்த நன்றியைச் சொல்ல வேண்டும். அவர்கள் ஆதரவுதான் அனைத் துக்கும் மேலாக முக்கியமானது!'' என்றார் பிரபாகரன்.

ஆனால், புலிகள் இயக்கம் மீண்டு எழ முடியாமல் முடக்கப்பட்டது. பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் இதை நம்பவில்லை என்றாலும், நவம்பர் 27 அன்று பிரபாகரன் திரையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் கலந்துகட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. 'பிரபாகரன் வர மாட்டார். ஆனால், பொட்டு அம்மான்தான் இந்த வருட மாவீரர் தின உரையை நிகழ்த்தவிருக்கிறார்!' என்ற தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களுள் ஒன்றாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கும் புதிய படம் ஒன்றைப் புலிகள் ஆதரவு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன. இதுவரை வெளிவராத அந்தப் படத்துக்கு மேலே, 'இந்தப் படம் சொல்லும் தகவல் என்ன?' என்ற புதிரான கேள்வியும் தொக்கி நிற்கிறது.

இதுபற்றி விசாரித்தபோது, ''மே 18-ம் தேதி சிங்கள ராணுவத்துக்கும் புலிகள் அமைப்புக்கும் நடந்த இறுதி யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. புலிகள் அமைப்பின் முக்கியத் தளபதிகள் அழிக்கப்பட்டதாகவும் நந்திக் கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்க முயற்சித்த போது சுட்டுக் கொன்றதாகவும் அறிவித்தார்கள். இவை எல்லாம் நிகழ் வதற்கு ஒரு வாரத்துக்கு முன், புலிகள் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்களை மட்டும் அழைத்தாராம் பிரபாகரன். 'இன்று முதல் மூன்று பிரிவுகளாக நாம் பிரிந்து செயல்பட வேண்டும். ஒரு அணியினர் இங்கிருந்து சிங்கள ராணுவத்துடன் போராடட்டும். இன்னொரு பிரிவினர் அரசிடம் சரணடைந்து தங்களது அரசியல் கோரிக்கையை உலகத்துக்குச் சொல்லட்டும். மூன்றாவது பிரிவினர் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும். இதில் யார் யார் எந்தப் பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நான் எனது நிலையைத் தீர்மானித்துக்கொள்கிறேன். இனி, உங்களை வழிநடத்தும் பொறுப்பை பொட்டு அம்மானிடம் ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த இயக்கத்தின் துணைத் தலைவராக அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்!' என்று அறிவித்தாராம் அப்போது. இயக்கத்தின் தளபதிகளும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட னராம். அப்போது எடுக்கப்பட்ட படத்தில்தான் பிரபாகரனுக்குச் சரிசமமாக பொட்டு உட்காரவைக்கப்பட்டார். இதில் பல ஆச்சர்ய மான விஷயங்கள் உண்டு!'' என்ற பீடிகை கொடுத்து நிறுத்தியவர்கள் மேலும் தொடர்ந்தார்கள்...

''பொதுவாக பொட்டு அம்மான், புலிகளின் சீருடையைத்தான் எப்போதும் அணிவார். சாதாரண உடைகள் அணிந்து அவரைப் பார்க்கவே முடியாது. அரிதாக டி-ஷர்ட் அணிவார். இந்தப் படத்தில் பிரபாகரன் அணிந்துள்ள அதே நிறத்தில் சட்டை அணிந்துள்ளார். மேலும், பொட்டு அம்மான் எப்போதும் கறுப்பு நிற வார் வைத்த சாதாரண வாட்ச்தான் அணிவார். சில்வர் செயின் வாட்ச் அணிந்தால் தனிப்பட்ட அடையாளமாகிவிடும் என்பதால், அதை அணியவே மாட்டார். ஆனால், இப்படத்தில் அதிலும் மாற்றம். சிரித்த முகத்துடன் இருக்கும் அவர் சீரியஸான முகத்துடன் காணப்படுகிறார். இப்படி எத்தனையோ மாற்றங்களை அடுக்கலாம். மிக நெருக்கடியான தருணத்தில் எடுக்கப்பட்ட இப்படம், ஆறு மாதங்கள் கழித்து வெளியானதற்கான பின்னணி 'நவம்பர் 27'-ம் தேதியாக இருக்கலாம்!'' என்று முடித்தார்கள்.

இலங்கையில் தேர்தல் நடந்து முடியும் வரை அரசியல் நிலவரங்களைக் கவனித்துவிட்டு அதன் பிறகு வெளிப்படையாகச் சில அறிவிப்புகளைச் செய்ய புலிகள் அமைப்பினர் முடிவெடுத்திருந்தனராம். ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. குமரன் பத்மநாபன் எனப்படும் கே.பி.அணியினர், காஸ்ட்ரோ அணி யினர் என இரண்டு தரப்பாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் யாராவது ஒருவர் வெளிப்படையாக வந்து அறிவித்தால்தான் குழப்பங்களைத் தவிர்க்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பொட்டு வெளியில் வர இருப்பதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

அதே சமயம், 'பொட்டு அம்மான் இறந்தது உண்மை. ஆனால், அவரது உடலைத்தான் எங்களால் அடையாளம் காண முடியவில்லை!' என்று இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபய ராஜபக்ஷே சொல்லி வருகிறார். தமிழக எம்.பி-க்கள் குழு அங்கு சென்றபோதும், 'பிரபாகரனது உடலை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். ஆனால், பொட்டு பற்றித்தான் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை!' என்று அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ஷே சொல்லியிருக்கிறார். எனவே, பொட்டு அம்மான் குறித்த சந்தேகங்கள் இன்னமும் முழுக்க களையப்படவில்லை என்பது உண்மை.

புலிகள் அமைப்பின் ஆரம்பக் கட்டத்தில் பிரபாகரன் தலைமையிலான மத்தியக் கமிட்டியில் 32 உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில் சண்முகலிங்கம் சிவசங்கரன் என்ற இளைஞன்தான் பின்னாட்களில் பொட்டு அம்மானாக உருவெடுத்தார். புலிகள் அமைப்பு மீது சிங்கள ராணுவத்தின் கவனத்தை அதிர்ச்சியுடன் திருப்பிய திருநெல்வேலி தாக்குதலில் இவர் இருந்தார். பிரபாகரனிடம் ஆயுதப் பயிற்சி பெற்று, பின்னர் அவருக்கே மெய்க்காப்பாளராக இருந்தவர். வேதாரண்யம் பகுதியைக் கவனித்து வந்தவர். பின்னர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மாவட்டத் தளபதியாக ஆனார். வேவு பார்ப்பதில் தேர்ந்தவராக இருந்ததால், புலிகளின் புலனாய்வுப் பிரிவை பொட்டுவிடம் ஒப்படைத்தார் பிரபாகரன். 1988-ம் ஆண்டு இப் பொறுப்புக்கு வந்த பொட்டு 16 பிரிவுகளை உருவாக்கி, புலிகளின் திரைமறைவு வெற்றிகளுக்குப் பெரிதும் உதவி னார். இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் சண்டை தொடங் கியபோது, முதல் தாக்குதலில் பலத்த காயம்பட்டு முடக்கப் பட்டார் பொட்டு. வயிறு, கால், கை ஆகியவற்றில் பலத்த காயம் பட்டது. மரணத்தறுவாயை நெருங்கியவரை மிகுந்த சிரமத்துக்குப் பிறகு மீட்டெடுத்து வந்தார்கள். அந்தச் சமயத்தில், அவரை அருகில்இருந்து கவனித்துக்கொண்டவர் பாலசிங்கத்தின் மனைவிஅடேல்.

ராஜீவ் காந்தி கொலையில் பொட்டு அம்மானைத் தொடர்புபடுத்தி சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு செய்தபோதுதான், இப்படியரு ஆள் இருப்பதே வெளியில் தெரிந்தது. மூன்று ஆண் பிள்ளைகள் பொட்டு அம்மானுக்கு. அதில் இருவர் அமைப்பில் இணைந்து போராடி இறந்துவிட்டார் களாம். ஒரு மகன் மட்டும் இருக்கிறார். 'குடும்பத்துக்கு ஒருவரை இயக்கத்துக்குத் தந்தால் போதுமே. இன்னொரு மகனை எங்காவது படிக்கவைக்கலாமே!' என்று பொட்டு அம்மானிடம் சொன்னதற்கு, 'அதெல்லாம் மற்றவர்களின் குடும்பத்துக்கு. எனது குடும்பத்தினர் அனைவருமே இயக்கத்துக்குத்தான்!' என்றாராம் பொட்டு. 10 ஆண்டுகளுக்கு முன் பொட்டு அம்மானைப்பற்றி தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார் அடேல் பாலசிங்கம், 'சுற்றி வளைப்புகளில் இருந்து எதிரிகளைத் திணறடித்து வெளியேறுவதில் அவருக்குப் பல ஆண்டு அனுபவம் உண்டு!'

அடேல் சொன்னது இப்போதும் நடந்திருக்குமா? நவம்பர் 27-ம் தேதி முடிவு தெரியும்!

வைரமுத்து 25

நன்றி - ஆனந்த விகடன்

40 ஆண்டுகளுக்கு முன்னால் கிராமத்தை விட்டுச் சென்னைக்கு வந்தாலும் இன்னும் மண் வாசனை மறக்காதவர். இப்போது ஊருக்குச் சென்றாலும் சாமைச் சோறு, வரகுச் சோறு காலையில் தயிரோடு உண்கிறார். வல்லாரையும் தூதுவளையும் கட்டாயம் இருந்தாக வேண்டிய கீரைகள்!

மற்ற மொழிக் கவிஞர்களுக்கு இவர் மீது மதிப்பு அதிகம். 'ஆளவந்தான்' படப் பாடல்கள் ஊட்டியில் தயாரானபோது, அதன் ஹிந்திப் பதிப்புக்குப் பாட்டெழுத வந்த ஜாவேத் அக்தர், 'முதலில் வைரமுத்து பாட்டு எழுதட்டும். அவர் கற்பனையைக் கடன் வாங்கிப் பாட்டு எழுதுவது எனக்கு வசதியாக இருக்கும்' என்று சொல்லி வைரமுத்து எழுதும் வரை சீட்டாடிக்கொண்டு இருந்தாராம்!

'காப்பியக் கவிஞர்' என்று அந்த நாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இவரை அழைத்தாலும், 'கவிசாம்ராட்' என்று அந்நாள் பிரதமர் வாஜ்பாய் இவரை விளித்தாலும், கலைஞர் வழங்கிய கவிப்பேரரசு பட்டம்தான் நிலைத்துவிட்டது!

கள்ளிக்காட்டு இதிகாசத்தின் 5 பிரதிகளை வாட்டர் ஃப்ரூப் செய்து வைகை அணை நீரில் வீசி எறிந்திருக்கிறார். நாளை அணையே தூர்ந்துபோனாலும், அந்த மண்ணின் ஆவணமாக அது இருக்குமாம்!

கவிஞருக்கு மருத்துவத் துறையில் ஏராளமான நண்பர்கள் உண்டு. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் யாருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும், அவரே டாக்டர்களுக்கு போன் செய்து, அப்பாயின்மென்ட் வாங்கி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார். உணவு, மருத்துவம், கல்வி இதற்குச் செய்வதுதான் உதவி; மற்றது எல்லாம் ஆடம்பரம் என்பது கவிஞரின் கருத்து!

'கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் விளம்பரப் படங்களில் தோன்றுவது இல்லை. குரல் கொடுப்பது இல்லை' என்று கொள்கை வைத்திருக்கிறார்!

பி.சுசீலா, சித்ரா இருவருக்கும் ரசிகர். பி.சுசீலாவின் சில பாடல்களை சித்ராவின் குரலில் பாடவைத்து, தனக்கென்று ஒரு தனி சி.டி. வைத்திருக்கிறார் இறுக்கமான மனசுக்கு இதமாக இருக்கிறதாம்!

பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்தபோது வெளியிட்ட 'வைகறை மேகங்கள்' என்ற முதல் கவிதைத் தொகுதி, இவர் மாணவராக இருந்தபோதே ஒரு மகளிர் கல்லூரியில் பாடமாக இருக்கும் பெருமை பெற்றதாம். இப்போது விற்பனையாகிக்கொண்டு இருப் பது வைகறை மேகங்களின் 29-ம் பதிப்பு!

எந்த ஊரில் இருந்தாலும் எந்த நாட்டில்இருந் தாலும் காலை 7 மணிக்குக் கலைஞரோடு பேசத் தவற மாட்டார். 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறதாம் இந்தத் தொலைபேசிக் காதல்!

8 மணி நேரம் எடுத்துக்கொண்டு இவர் எழுதிய பாடல்: 'சங்கீத ஜாதி முல்லை' (காதல் ஓவியம்) 8 நிமிடத்தில் எழுதி முடிக்கப்பட்ட பாடல்: 'எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ!' (பாட்ஷா).

கவிஞராக இருந்தாலும், இவர் ஒரு சிறுகதைப் பைத்தியம். ஓ ஹென்றி, மாப்பசான், ஆண்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி முதல் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, தஞ்சை பிரகாஷ் வரை உலக, உள்ளூர்ச் சிறுகதைகளைச் சேர்த்து வைத்திருக்கிறார்!

'7 ஆயிரம் பாடல்கள், 34 புத்தகங்கள், மூன்று முறை உலகை வலம் வந்த அனுபவங்கள்... என்று இயங்கிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இளமை தீர்வதில்லை' என்பார்!

தனக்குப் பரிசாகக் கிடைக்கும் தங்க நகைகளை ஒருபோதும் அணிந்துகொள்ள மாட்டார். உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, பணியாளர்களுக்கோ, திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்களுக்கோ கொடுத்துவிடுவார். ஆனால், அண்ணாமலை, 'பாட்ஷா, முத்து, அருணாசலம் படங்களுக்கு ரஜினி தந்த தங்கச் சங்கிலிகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்!

இரவு எவ்வளவு தாமதமாகத் தூங்கச் சென்றாலும், அதிகாலை 5 மணிக்கு எழுந்து நடைப் பயிற்சிக்குத் தயாராகிவிடுவார். இவரோடு யாரும் உடன் நடப்பதில்லை. நடந்தால் ஓட வேண்டி இருக்கும், அவ் வளவு வேகம்!

கவிஞரின் ஆடைகள் சென்னையில் வெளுக்கப்படுவதில்லை. எல்லாத் துணிகளும் ஊருக்கு அனுப்பப்பட்டு சலவை செய்யப்பட்டு வருகின்றன. 20 ஜோடி போகும்; 20 ஜோடி திரும்பும். 'தண்ணீருக்கும் சலவைக்கும் சம்பந்தம் இருக்கிறது' என்பார்!

கவிஞருக்கு மிகவும் பிடித்த உணவு: அம்மா அங்கம்மாள் வைக்கும் கோழிச் சாறும் குழைந்த சோறும்!

கவிஞர் பேசினால் இளைய மகன் கபிலன் கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால், மூத்த மகன் கார்க்கியைப் பேசவிட்டுக்கேட்டுக் கொண்டே இருப்பார்!

மருத்துவமனையில் இருந்தும், சிறை யில் இருந்தும் வரும் கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் பதில் போடும் பழக்கம்கொண்டவர்!

வாய்விட்டுச் சிரிப்பார்; சிரித்தால் பக்கத்து ஆளை அடிப்பார். அதனால் எல்லோரும் இரண்டு அடிகள் தள்ளியே உட்கார்வார்கள்!

இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 5 முறை பெற்றவர். அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் மாநில விருதோடு சேர்த்து இரண்டு விருதுகளும் தலா 5 என்று சமன் செய்துவிட்டார்!

'அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்' இவரது கவிதைகளை, இவரது குரலில் ஒலிப்பதிவு செய்து, உலக இலக்கிய ஆவணங்களில் ஒன்றாக வாஷிங்டன் டி.சி-யில் பாதுகாத்து வருகிறது!

கிராமத்து வரப்புகளில் நடக்கும்போது தொட்டாற்சிணுங்கிச் செடிகளைக் கண்டால் அப்படியே உட்கார்ந்துவிடுவார். தொட்டுத் தொட்டு அந்த இலைகள் அடங்கும் அழகை ரசிப்பார். சில நேரங்களில் மீண்டும் விரியுமா என்று காத்திருப்பதும் உண்டு!

தான் மற்றவருக்குச் செய்ததை மறந்துவிடுவார். மற்றவர்கள் தனக்குச் செய்ததை மறக்கா மாட்டார். தன் வீட்டு வரவேற்பறையில் உள்ள ''ஏ.சி... ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிக் கொடுத்தது'' என்று பலபேருக்குச் சொல்லி இருக்கிறார்!

கனடா நாட்டு அரசாங்கத்தோடு இணைந்து ஒரு தமிழ் அமைப்பு, இவர் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இவரது அஞ்சல் தலை ஒட்டப்பட்டு இவருக்கு வந்த தபாலை இவரே பிரித்தார்!

கவிஞரின் தோட்டத்துப் பண்ணை வீட்டில் இரண்டு உரல்கள் இருக்கின்றன. அவை தாய்வழி-தந்தைவழி தாத்தாக்களின் வீட்டில் இருந்தவையாம். வைகை அணைக்குள் மூழ்கிப்போன மெட்டூர், கரட்டுப்பட்டி இரண்டு ஊர்களில் இருந்தும் தோண்டி எடுத்து வரப்பட்டவை!