Monday, November 9, 2009

இடம் மாறும் இதயங்கள்..!

ஓர் ஆணும் பெண்ணும் எவ்வாறு காதலர்களாகிறார்கள்?, அதாவது தங்களுக்கேற்ற துணையை எவ்வாறு தெரிவு செய்கின்றார்கள் என்று ஆராயவிருக்கிறோம். அண்ட வெளியை அடக்கி சிறுபொருளாய் ஆக்கி என் சட்டைப்பைக்குள் வைத்து விடுவது போன்றதோர் விபரீத முயற்சி இதுவல்லவா? வானம் எங்கே ஆரம்பிக்கின்றது?, எங்கே முடிகின்றது? என்பதனை முயன்றால் அறிந்து விடலாம். ஆனால்... காதல் எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது உங்களால் கூற முடியுமா?. முடியாதொன்றே.
ஆகாய சூரியனை என் சுட்டுவிரலால் சுட்டு விடுவது போன்ற பிரமை எனக்குள் எழுகின்றது. இவையெல்லாம் நடக்கக்கூடியதா? என்றெண்ணுவீர்கள். இளைஞர்களால் இயலாதென்பது ஏதுமுண்டா? ஆனாலும் இத்தலைப்பில் நான் நிறைவை எட்ட முடியாதென்ற உணர்வைப் பெறுகின்றேன். காதலினை வர்ணிக்க, வகைப்படுத்த ஒரு அத்தியாயம் போதாது. ஆகவே இது இத்தோடு முகவரியற்றுப் போய்விடாது. தொடரும்...
“மழை வானத்திலிருந்து பொழிய வேண்டும், மின்னல் வானத்தைப் பிளந்து தோன்ற வேண்டும், கடலலை கடலில் இருந்து எழ வேண்டும் இது போலத் தான் ஆண்-பெண் காதலும். மழை இந்த இடத்தில் தான் பொழிய வேண்டும், மின்னல் இந்த இடத்தில் தான் தோன்ற வேண்டும், கடலலை கடலில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் எழ வேண்டும் என்று நீங்கள் இயற்கைக்கு எப்படி கட்டளை போடமுடியாதோ அது போலத்தான் காதலும். காதலைக் கட்டுப்படுத்த முடியாது.
குயில் ஏன் கூவுகிறது? கோடையில் ஏன் வெப்பம்? பனிக்காலத்தில் ஏன் குளிர்?
மரங்களில் ஏன் இலைகள் உதிர்கின்றன? மீண்டும் ஏன் துளிர்கின்றன? என்கின்ற கேள்விகளுக்கு எப்படி விரைவில் விடை காண முடியாதோ அது போல் தான் காதலும். காதல் ஏன் வருகிறது? எதற்காக வருகிறது? எப்படி வருகிறது? விடை தெரியா வினாக்கள் இவை.
காதல் என்பது இளமையின் கிளர்ச்சி, பருவத்தின் எழுச்சி என்பார்கள். அதாவது கதிரவன் வரவைக்கண்டு தாமரை மலர்வது போல் தன் காதலன் உருவம்; கண்டதும் மங்கையுள்ளம் மலர்கிறது. அவ்வாறே காதலியை காண்கையில் அவனது உள்;ளமும் மகிழ்ச்சியால் நிறைகிறது. ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் காதலன், காதலியை எவ்வாறு இனம் கண்டு கொள்கிறார்கள்? எப்படி அவர்களுள் முன் பின் முகவரியின்றி புதிய சொந்தம்; உருவாகிறது? எனக்குரியவள் இவள் தான், எனக்குரியவன் இவன் தான் என்று இவர்களால் எப்படி இனம் பிரிக்க முடிகிறது?. குழப்பமான கேள்விகள் தான்... இதை சங்கப்புலவன் “செம்புலப்பெயனீரார் அழகான செய்யுளாக வடிக்கிறார் இவ்வாறு,
“யாயும் ஞாயும் யாராகி யாரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர்; போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
அதாவது என்னைப் பெற்ற தாயும், உன்னைப் பெற்ற தாயும் எந்;த முறையில் உறவினர்களோ அறியோம். அதைப் போன்றே எனது தந்தையும், உனது தந்தையும் எப்படி உறவினர்களோ நாம் சிறிதும் அறியோம். இப்போதிருந்து உடலோடு உயிராக, உணர்வோடு கூடிய அறிவாக, மலரில் மணமாக நீங்காது இணைந்து வாழப்போகும் நாமும் ஒருவரையொருவர் எவ்வாறு, எப்படி இதற்கு முன்பு அறிந்தோம்? தாயின் உறவும், தந்தையின் உறவும், நாம் இருவரும் சந்தித்துக் கொண்ட விதமும் எப்படி நிகழ்ந்ததோ தெரியவில்லை. எதுவாகிலும் ஒன்று மட்டும் உண்மை.
சிவந்த மண்ணில் பெய்கின்ற மழைநீர் அந்த மணணில்; கலந்துள்ள சுவை, நிறத்திற்கு ஒப்ப மாறிவிடும் தன்மை போன்று எனக்குள் கலந்துவிட்ட நீயும், உனக்குள் கலந்துவிட்ட நானும் உணர்வாலும் உயிராலும் ஒன்றுபட்டு விட்டோம் என்கிறது அச் செய்யுள். மழை பெய்கின்ற மண்ணின் தன்மைக்கேற்ப மழைநீரின் தன்மை வேறுபடும் என்பதனை அழகாக “செம்புலப் பெய்நீர்; போல என்று உவமை கூறிய நயத்தால் இப்புலவரின் இயற்பெயர் மறைந்து “செம்புலப்பெயனீரார் என்று பெயர் கொண்டார் என்பது வரலாறு.
ஆக்கம்-“ சிவபுரத்தூர் சிநேகன்” கனடா. 2002

No comments:

Post a Comment

நிறையவே திட்டவேணும்போல இருக்கும்... இருப்பினும் அவையடக்கமாய் ஒரு சில வார்த்தைகள் கிறுக்குங்கள்.