ரொரன்டொ தமிழின உணர்வாளர்கள் அமைப்பினால் எமக்கு அனுப்பபட்டுள்ள பிரசுரம் .......
அன்புத்தமிழ் உறவுகளே வணக்கம்!
எமது இனத்துக்கு துயர் நிறைந்த 2009ம் ஆண்டை இன்னமும் சில நாட்களில் மறந்துவிட்டு, புதிய பல எதிர்பார்ப்புக்களை நெஞ்சில் தாங்கியபடி 2010ம் ஆண்டை வரவேற்கும் வாசலில் நின்றுகொண்டு சில செய்திகளைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.
தமிழர்கள் நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து உலக அரங்கில் எமது உரிமைகளை, நலன்களை, இருப்பினை ஆழமாக நிலைநிறுத்தி எங்கள் இனத்தின் தனித்துவமான மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை காத்து நிற்கவேண்டிய முக்கிய காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
முன்பெல்லாம் 'தமிழர்களின் தலைமை யார்? எங்குள்ளார்கள்?" எனக் கேட்டால் விரும்பியோ, விரும்பாமலோ அனைவரது சுட்டுவிரலும் ஒரு திசையை நோக்கியே காட்டும். உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டு அரசை சுட்டிக் காட்டுவது அரிது என்பது உலகறிந்த உண்மை. உலக அரங்கில் தமிழ், தமிழனுக்கென முகவரியை தேடித்தந்தவன் இலங்கைத் தமிழன் என்பது அறிஞர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என்பதும் நீங்கள் அறிந்ததே.
ஆனால் இன்று, தனக்கொரு வலிமைமிக்க தலைமை இல்லாமையினால் ஆண்ட இனம் அன்றாடம் மாண்டொழிகிறது. இதற்கு முக்கிய காரணம் எமது இனத்துக்கேயுரிய சாபக்கேடான ஒற்றுமையின்மை. உலகிலேயே தன் இனத்தையே காட்டிக்கொடுத்து அழிக்கும் தரவரிசையில் தமிழர்களுக்குதான் முதலிடம். எதிரிகளிடம் இருந்து கிடைக்கும் சொற்ப சலுகைகளுக்காக தன் இனம் எப்பாடுபட்டாலும் பரவாயில்லை என நினைக்கிறான் தமிழன். இந்நிலை மாறவேண்டும். யார் மடிந்தால் நமக்கென்ன எனது குடும்பம் சுகமாய், சொகுசாய் மேலைநாட்டில் வாழ்கிறது என நினைப்பது தவறு. செத்துமடிந்த ஆயிரம் ஆயிரம் உறவுகளைச்சாட்டித்தான் நாம் சொத்து சுகமாய் இருக்கிறோம் என்னும் உண்மையை மறக்கக்கூடாது.
இவ்வேளை ஒருவர் குறுக்கிடுகிறார்.., தன் மகன் மாணவர் விசாவில் வந்ததாகவும், அதன்பின் தான் குடும்ப இணைவு விசாவில் வந்ததாகவும் தன் இருப்புக்கும் நாட்டுப் பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை என்றார். அவரிடம் ஒரு கேள்வி, 'அப்ப ஒருமுறை இலங்கைக்கு போய் வரலாமே?" என்றோம். 'போக முடியாது.. தமிழர் எண்டால் விமான நிலையத்திலேயே கடத்துகினமாம்" என்றார். இதிலிருந்து அவருக்கு தெளிவாக்கியது என்னவென்றால் தமிழன் இருப்பு எவ்வகையாயினும் அவனுக்கு பாதுகாப்பில்லை என்பதாகும். காரணம் உலகில் அவனுக்கு குரல் கொடுக்க வலுமைமிக்க தலைமையில்லை.
இதற்கு என்ன செய்யலாம்?
1. பேதங்கள் எவையுமின்றி நாம் தமிழர் என ஓர் குடைக்குள் அணிதிரளவேண்டும்.
2. எமது இன உரிமை, நலன்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவரையோ அல்லது ஒரு அமைப்பையோ நாம் தீர்மானிக்கவேண்டும்.
3. அதிக வீதமான எம் இனமக்கள் அணிசேரும் இலாப நோக்கமற்ற ஒருவருக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ நாம் ஆதரவு தருவதன் மூலம் எமது ஒற்றுமையை வலிமையாக்கலாம்.
4. எமது இனமக்களிடமிருந்து நலன்களை பெற்றுக்கொண்டு எமது ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபடும் ஒருவரையோ அல்லது அமைப்பையோ எமது இனத்தவர் ஆனாலும் சமூகத்தில் இருந்து புறக்கணிக்க வேண்டும் அல்லது அறிவுரை கூறி அவரை நல்வழிபடுத்தவேண்டும்.
5. எமது ஒற்றுமைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் அல்லது வெளியிடாமல் புறக்கணிக்கும் ஊடகத்தினரை இனம் கண்டு அவர்களை சமூகத்தில் இருந்து புறக்கணிக்க வேண்டும். எமது இன வியாபார நிறுவனங்களில் இருந்து அவர்களுக்கு கிடைக்கும் வருமானங்களை நிறுத்தவேண்டும்.
இவ்வாறு ஒரே குறிக்கோளோடு பேதங்கள் இன்றி நாம் செயல்படுவோமானால் வெகுவிரைவில் எமது இனத்தை அழிவில் இருந்து காக்கலாம். துளிகளாய் சிதறும் மழைத்துளிகளில் பலமில்லை துளிகளெல்லாம் ஒன்று சேர்ந்து உருவாகும் வெள்ளத்தில்தான் பலம்.
தமிழர்கள் பயங்கரவாதிகள் என்பது பலரது கணிப்பு. அந்தக் கணிப்பை உடைத்தெறிய எமக்கொரு சந்தர்ப்பமாய்; 'வட்டுக்கோடடை தீர்மானம்" எனும் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சனநாயக வழியிலான தீர்வுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்களின் ஆதரவுகளை; அறியும் வண்ணமும், உலக நாடுகளுக்கு அந்த தரவுகளை எடுத்துச் சொல்லும் நோக்கிலும் நோர்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கிடைத்த தமிழர்களின் ஆதரவுக்குப் பின் கனடாவில் கடந்த டிசெம்பர் 19 நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், தமிழ் வியாபார நிறுவனங்களிடம் இருந்து பலனைப் பெற்றுவரும்; கனடாவில் முதல்தர பத்திரிகை என தன்னைத்தானே சொல்லிக்கொண்டு சுயவிளம்பர படங்களை பிரசுரிக்கும் பத்திரிகையும் அதனோடு இணைந்து தாமரையும் தீபமும் எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் 'வட்டுக்கோட்டை தீர்மானம்" பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் இலவசப் பத்திரிகைகளை தவறாது படிக்கும் வாசகர்களுக்கு வரலாற்றுச் செய்தி கிடைக்கவில்லை. தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட 'வேட்டைக்காரன்" திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆசிரியர் தலையங்கம் வெளியிட்டிருந்தது. இதனால் விசனம் அடைந்த 'பிரம்டன்" வாழ் தமிழர்கள் அருகிலிருந்த தமிழர் வியாபார நிலையங்களிலிருந்து இலவச தமிழ் வார பத்திரிகைகள் அனைத்தையும் அகற்றியதன் தொடர்ச்சியாக 'ரொரன்டொ", 'மிசிசாகா" நகரங்களிலும் தமிழ் இன உணர்வு கொண்டவர்களால் இந்த பத்திரிகைகள் அகற்றப்பட்டது. இது இவ்விதம் இருக்க, தமிழ், கலை, பண்பாடு போல் நாங்களும் தனித்துவமானவர்கள் என தன்னை அடையாளப்படுத்தும் தனித்தமிழ் வானொலியோ இந்தத் தேர்தலை வேடிக்கைக் கூத்து என தனது நேயர்களுக்கு விபரித்தது.
இந்த வாக்கெடுப்பை, 'கனேடிய தமிழ் தேர்தல்" எனும் கனடாவில் பதிவுசெய்யப்பட்ட பொது அமைப்பு ஒன்று, நீதியான முறையில் வாக்குப்பதிவு இடம்பெறுவதை கண்காணிப்பதற்காக தேர்தல் பணிகளில் ஈடுபடும் கனேடிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாம் சனநாயக வழியில்; செல்ல வழியமைக்கும் வாக்கெடுப்பை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களையும், செயலையும் முன்னணித் தமிழ் ஊடகங்கள் புரிந்திருப்பதானது எமது இனத்தை மேலும் அவலத்துக்குள் தள்ளிவிட அவர்கள் ஆசைகொள்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அன்புத்தமிழ் உறவுகளே!
இனியும் பொறுத்தது போதும். எம் இனத்தை அழிவுக்கு அழைத்துச் செல்லும் கூட்டத்திலிருந்து எங்களையும், எங்கள் இனத்தையும் காப்போம்...!! ஒன்றுபடுங்கள்...!!!
தமிழின விடிவுக்கான தேர்தலை கொச்சைப்படுத்தி எமக்கு அவசியமில்லாத செய்திகளையும், கட்டுரைகளையும் பிரசுரித்த கூட்டத்தாரின் பத்திரிகைகள், வானொலிகளை உங்கள் வியாபார நிலையங்கள், வீடுகளிலிருந்து நீக்குங்கள்...!!
நன்றியுடன்,
தமிழின உணர்வாளர்கள் - ரொரன்டொ பெரும்பாகம்.
தமிழின உணர்வாளர்கள் - ரொரன்டொ பெரும்பாகம்.