Wednesday, January 13, 2010

நீங்களெல்லாம் சிரிக்கலாம்.. சிரியுங்கள்..!!

- சிநேகிதன் கஜன் -

அழகிகளே நீங்கள்
அழகாய்த்தான் இருக்கிறீர்கள்
உங்கள் குடும்பத்து புன்னகை
அழகாய்த்தான் இருக்கிறது...

அப்பா சொன்னாரா..?
அவர் ஆசீர்வாதத்தின் பலனாய்
உங்களைப்போல் பல ஆயிரம் அழகிகள்
புதையுண்டும், எரியுண்டும், குதறுண்டும்
போனார்கள் என்பதை....

உங்களுக்குத் தெரியுமா..?
நாங்கள் புன்னகைத்து
பல தசாப்தங்கள் ஆகிறது
எறும்புக்கும் தீனி போட்ட இனம் - இன்று
எலும்பும் சதையுமாய் உயிரோடு புதைகிறது...

நீங்கள் சிரியுங்கள்..
ஆனால் அப்பாவைப் பாருங்கள்
சிரிப்பில் செயற்கை இருக்கிறது
உயிர் போகும்வரை அவர்..,
செவிகளில் ஒலிக்கும் ஒப்பாரியையும்
சுவாசத்தில் மணக்கும் பிண வாடையையும்
நாக்குகளில் சுவைக்கும் குழந்தை இரத்தத்தையும்
விழிகளில் தெரியும் நிர்வாணங்களையும்
மறந்துவிட்டு.., இயற்கையாய் அவர் எப்படி சிரிப்பது..?

நீங்கள் சிரியுங்கள்...
எப்போதாவது ஒருவேளை
உணவுக்காய் தவமிருந்ததுண்டா..?
உங்கள் விருப்பின்றி யாரேனும்
துணி அவிழ்த்ததுண்டா..?
மரத்தின் கீழ், சேற்றின் மேல் ஒருநாளேனும்
உறங்கிய அனுபவம் உங்களுக்குண்டா..?
உங்கள் பரம்பரையில் வயிற்றுக்குள்ளிருந்த
குழந்தைமீது குண்டுபாய்ந்த வரலாறு உண்டா..?

நீங்கள் சிரியுங்கள்..
இன்றேல்லாம் உலகுக்கு
கொன்றவன் நல்லவன்
காத்தவன் கெட்டவன்
வழங்கிய கைகள் எல்லாம் - வாங்குவதற்கு
வரிசையில் நிற்கையில்
நீங்களெல்லாம் சிரிக்கலாம்
சிரியுங்கள்..

பொன்சேகா உங்களுக்கோர் விண்ணப்பம்..!
எய்தவன் எங்கோயிருக்க அம்பை
நோகும் பழக்கம் எமக்கில்லை - இனியாவது..,
எமக்கு எது செய்வாய் என்பதைவிட
எதுவுமே செய்யாமல் இரு..
அது போதும்..!!!