Thursday, December 31, 2009

மகிழ்ச்சி...!

என்னை மிகக்கவர்ந்த கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை.....

காதெல்லாம் இனிக்கும் உங்கள் கரவொலிக்கு மகிழ்ச்சி
தன்னை நோக்கி வீசப்படும் வெள்ளிக் காசுகளைவிட
கரவோசையைத்தான் ஒரு கவிஞன் நேசிப்பான்
கரசேவை செய்ய வந்தவர்களே......., மகிழ்ச்சி!
கல் இல்லாத கரசேவை கவியரங்கில் மட்டும்தான்

நீங்கள், இவர்கள், நான், நாம் எல்லாம் மகிழப்பிறந்தவர்கள்
நிலவின் ஒளியை குடிக்கப் பிறந்தவர்கள்
நீலவான் வெளியை இழுக்கப் பிறந்தவர்கள்
பூமியை வியந்து புகழப் பிறந்தவர்கள்
மரிக்கும் வரைக்கும் மகிழப் பிறந்தவர்கள் - காரணம்
ஓர் ஆணின், பெண்ணின் மகிழ்ச்சியில் பிறந்தவர்கள்

கனி உண்ண வந்த பறவைகள் நாம் - வெறும்
மரம்கொத்தி கொத்தியா மரித்துப்போவது
இந்தப் பூமியென்ன மண்ணின் திரடசியா
மகிழ்ச்சியின் திரட்சி
மகிழ்ச்சி இல்லையேல் அலைகள் கொண்டு
ஜலதரங்கம் பாடுமா கடல்
இடிகள் கொண்டு தம்பட்டம் தட்டுமா வானம்
வீட்டுக்குத் திரும்பிவருமா வெளியூர் போன காற்று

உதிர்ந்து உதிர்ந்து இலைகள் உதிர்ந்து
நலிந்து நலிந்து வெயிலில் நலிந்து
மெலிந்து மெலிந்து கிளைகள் மெலிந்து
அளந்து அளந்து கொழுந்து எழுந்து
வளர்ந்து வளர்ந்து அரும்பு வளர்ந்து
மலர்ந்து மலர்ந்து மடல்கள் மலர்ந்து
சித்திரை மாதம் தாவர வர்க்கம்
முத்திரை காட்டி முகிழ்ப்பது எல்லாம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஐந்தே புலன்கள் ஆயினும் என்ன
ஒவ்வொர் புலனின் வாசல் வழியே
ஆயிரம் லட்சம் கோடி மகிழ்ச்சி
பூமியைச் சுற்றும் கடலைப் போல
சுற்றிச் சுற்றிச் சுற்றி மகிழ்ச்சி
அதை அறிந்துகொண்டவன் ஞானியாகிறான்
அனுபவிப்பவன் கலைஞன் ஆகின்றான்

கண்ணுக்கு மகிழ்ச்சி எது?
விடிகாலைச் சோலை..? இல்லை
வெற்றிலை போட்ட வானம்..? இல்லை
தூங்கும் குழந்தையின் தூங்காத புன்னகை..? 'ஊகும்";
கண்ணுக்கு மகிழ்ச்சி.. .. ஆனந்தக் கண்ணீர்

காதுக்கு மகிழ்ச்சி எது?
மழைபாடும் சங்கீதம்..? இல்லை
மைத்துனியின் கொலுசோசை..? இல்லை
காதுக்கு மகிழ்ச்சி.. .. வேலைக்குச் சென்று
வீடுவந்து அமர்கையில் மடிமீதேறி
குழந்தைபேசும் மழலைத் தமிழ்

வாய்க்கு மகிழ்ச்சி எது?
புதுமனைவியின் முதல் சமையல்..? இல்லை
முதல் காப்பியின் இளம் கசப்பு..? இல்லை
முரட்டு இருட்டில் திருட்டு முத்தம்..? இல்லை
வாய்க்கு மகிழ்ச்சி.. ..தப்பின்றி உச்சரிக்கும் தாய்மொழி

உடலுக்கு மகிழ்ச்சி தகிக்கும் காய்ச்சலில் தாயின் ஸ்பரிசம்
நாசிக்கு மகிழ்ச்சி நேசிக்கும் பெண்ணின் குழல்கொண்ட பூக்கள்
மண்ணுக்கு மகிழ்ச்சி மழையூட்டும் வாசம்
பெண்ணுக்கு மகிழ்ச்சி மதிக்கின்ற நேசம்
வார்த்தைக்கு மகிழ்ச்சி காலத்தால் உதிராத கவிதைக்குள் நிற்பது
வாஜ்பாய்க்கு மகிழ்ச்சி.. ..?
சாதுக்கள் எப்போதும் சாதுவாய் இருப்பது..!

மகிழ்ச்சி என்பது வேறொன்றும் இல்லை.. மனசின் கொள்ளளவு..!
மழைகொண்டு வருகிறது சமதர்ம மேகம்
குவளையில் பிடித்தால் ஒருவேளை மகிழ்ச்சி
குடத்தில் பிடித்தால் ஒருநாள் மகிழ்ச்சி
குளத்தில் பிடித்தால்.. வருடமெல்லாம் மகிழ்ச்சி
எது உன் மனசு..?
குவளையா? குடமா? குளமா? இல்லை.. குழப்பமா..?

குழந்தைபோல் மனம் இருந்தால் குழப்பமே இல்லை
உன்னை சண்டையிட்டு, மண்டியிட்டு கேட்கிறேன் காலமே...
உன் எலும்புகளுக்கும், திசுக்களுக்கும் வயசாகட்டும்
மனசுமட்டும் எப்போதும் குழந்தையாய் இருக்கட்டும்..!

குழந்தையாய் இருப்பது எத்தனை வசதி
கூப்பிட்ட குரலுக்கு நிலா வரலாம்
பல் இல்லாத வாயில் நட்சத்திரம் மெல்லலாம்
தொட்டிலில் கிடந்தாலும் தொட்டியில் கிடந்தாலும்
அழுகை கேட்டதும் ஆள் ஓடி வரலாம்
தனக்கு வந்த காதல் கடிதங்களில் கூட
தப்புக்களை மன்னிக்காத தமிழாசிரியர்
மன்னித்து மகிழ்வது மழலையிடம் மட்டும்தான்..

ஒரு சந்தேகம் எனக்கு.. ..!
குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றார் - ஒன்றா..?
இன்று உள்ள சூழலில் ஒப்பிடுதல் நன்றா..?
குழந்தைகள் மணல் வீடு கட்டியதுண்டே தவிர
சர்ச்சைக்குரிய இடத்தில் மதவீடு கட்டியதுண்டா?
கருத்துச் சுளை போன்ற குழந்தையொன்றை நிறுத்திக் கேட்டேன்
உன் மதம் என்ன குழந்தாய்..? தெரியாது
உன் ஜாதி ஏதும் சொல்லாய் பிள்ளாய்? தெரியலையே..
தப்புத்தப்பாய் பேசும்போது சரியாய் பேசிய மனிதன்
சரியாய் பேச தெரிந்த பிறகு தப்புத்தப்பாய் பேசுகிறான்
பிறை நிலாவுக்கு கறையில்லை எல்லாம் வளர்ந்த பிறகுதான்
குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை எல்லாம் நிமிர்ந்த பிறகுதான்

அறிவூட்டும் ஆசான்களே.. ..
குழந்தைகளை குழந்தைகளாய் இருக்கவிடுங்கள்
வந்தவன் போனவன் வைக்கோல் திணிக்க
பிள்ளையின் மூளையென்ன.. முச்சந்தித் தொட்டியா..?
பட்டாம்பூச்சி பிடிக்கவிடாத பாடத்திட்டம் எதற்கு?
பணக்கார மணமகளாய் இருக்கலாம்
முத்தமிட இடமில்லாமல் மொத்த நகை எதற்கு?
கனவுகாணவிடாத கணிதம்
இரசனை குறைக்கம் இரசாயனம்
சிறகு விற்ற காசில் சிலுவைகள்.. ..ஐயகோ..
வண்டலூரில் இருந்தாலும் தப்பித்திருக்கலாம்
வண்டலூரைவிட வகுப்பறை கொடியது

அதோ..
பெற்றுப்போட்ட பெருமாக்களே..!
10 வயதுவரை குழந்தைகளுக்கு நீங்கள் வேலைக்காரர்கள்
15 வயதுவரை உங்களுக்கு வேலைக்காரர்கள்
16 வயதுமுதல் பாகம் பிரிக்கும்வரை தோழர்கள்
பிறகு தூரத்து உறவினர்கள்

இளைஞர்களே..! உங்களை நம்புங்கள்
உங்கள் கால்கள் சிறகுகள், கண்கள் சூரிய சந்திரர்கள்
அதிஸ்டத்தை நம்பாதீர்கள் அது சீட்டில் கட்டிய பணம்
வந்தாலும் வரலாம்.. வராமலும் போகலாம்..
இங்கேதான் வாழ்க்கை, தற்கொலை
இரண்டுமே கடினம்.. கொலை சுலபம்
போட்டி உலகம் இது போராடு
நீயென்ன அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயா?
நாளும் நாளும் ஏன் நம்பிக்கை குறைகிறாய்
நீ முலிகையாய் இரு....
எங்கிருந்தோ காதல் வரும் உள்ளிருந்து குயில் கூவும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் விளங்கும் இளமையில்...

ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம்
ஆண்! அரசனாய் வந்து அடிமையாகிறவன்
பெண்! அடிமையாய் வந்து அரசியாகிறவள்
ஆண் பெண்ணின் பூரணம்..
பெண் ஆணின் பூரணம் - காரணம்
குறையும் குறையும் சேரணும்

திருமணம் என்பது இந்தியா மாதிரி
வேற்றுமையில் ஒற்றுமை முரண்பாடுகளில் உடன்பாடு
இருளை ஒளியை சேர்க்க முடியாத இயற்கை
கிழக்கை மேற்கை சேர்க்க முடியாத இயற்கை
சொர்க்கம் நரகம் சேர்க்க முடியாத இயற்கை
ஆணையும் பெண்ணையும் சேர்த்தே விட்டது
ஆணும் பெண்ணும் சேருவது இயற்கை
அழுகை, கண்ணீர், வலிகள் செயற்கை

இளமையில் அன்புசெய் அது முதுமைக்கு மூலதனம்
இளமையில் உழைப்பு முதுமையில் அறுவடை
முதியோர் மீது பாசம் எனக்கு...
அந்த வாழ்வின் வஞ்சிகளைக்
கண்டால் வணங்கத்தோன்றும் எனக்கு
ஒவ்வொரு பழமும் ஞானப்பழம்
நரை! மனிதக் குதிரை மூச்சிரைக்க மூச்சிரைக்க ஓடிவந்த நுரை
சுருக்கங்கள்! காலக் கவிஞன் எழுதி முடித்த
ஞானக் கவிதையின் கிறுக்கல்கள்
தலையாட்டம்! வரமாட்டேன்.. வரமாட்டேன்..
காலனுக்கு எதிரான அகிம்சை ஆர்ப்பாட்டம்

இளைஞர்களே..!
முதியவர்களை மட்டும் அழவிடாதீர்கள்
முதியவர்கள் அழுகின்ற தேசத்தில் மேகங்கள் அழுவதில்லை
ஒரு முதியவர் சொல்லும் மொழி வைரத்தைவிட மேலானது
முதியவர் சிந்தும் கண்ணீர் சூரியனைவிட சூடானது
வாழ்க்கை ஒரு நெல்லிக்காய்.. மேல்தோல் கசப்பு
ஆழம் ஆழம் போனால் உள்ளே உறங்கும் இத்துணுண்டு இனிப்பு
இனிப்பு வேண்டுமா..? கசப்பை விழுங்கு..!

எங்கள் பிராத்தனை எல்லாம் இதுதான்..
மண்ணகம் எல்லாம் மகிழ்ச்சியில் நிற்க
ஓரறி உயிரோ, ஆறறி உயிரோ
எல்லா உயிர்களும் இன்பம் எய்துக
சமுத்திர மேகம் மேலே எழுந்து
சமத்துவ மழையை தரையில் எறிக
நிலமோ கடலோ சிந்திவிடாமல்
உலக உருண்டை ஒழுங்காய்ச் சுற்றுக
இரங்கல் தீர்மானம் ஏதுமின்றி
நாடாளுமன்றம் நன்கு கூடுக
பள்ளிவாசலின் சாளரத்திலும்
பழைய கோவிலின் கோபுரத்திலும்
புறாக்கள் கட்டிய கூடுகள் வாழ்க
எங்கள் கவிதை கேட்போர் யாவரும்
இரயிலோ, மெயிலோ எதில் சென்றாலும்
வீடுதிரும்பி வீடுபேறடைக....... மகிழ்ச்சி....!!!!

உன்னை எப்படி மறப்பது..?

ம்.. மெல்ல மெல்ல.. எம் உறவுகளின் இரத்தம் குடித்த செருக்கோடு இன்னும் சில மணிகளில் மடிந்துபோகப் போகிறது 2009.. மறந்துவிட நினைக்கிறோம் முடியவில்லை. கருவிலிருந்த குழந்தைகளின் உயிர் குடித்த உன்னை எப்படி மறப்பது..?
எமக்கான சாபக்கேடு ஆக்கியவனைவிட அழித்தவனை நினைப்பது. 2009 ஏப்ரலில் தமிழீழம் மலரும் என்றுசொன்ன சோதிடன் இன்றும் சொல்கிறான் 2012ல் உலகமே இல்லையாம். நினைப்பதெல்லாம் நடப்பதில்லை... நடப்பதெல்லாம் நிலைப்பதில்லை என்றானபோது நாம் ஒன்றைச் செய்யலாம்... இனி இருக்கும் காலத்திலாவது உருப்படியாய் வாழ்வது.

Tuesday, December 29, 2009

வேட்டைக்காரனுக்கு விகடனின் புள்ளி 38%

நன்றி விகடன் விமர்சனக் குழு

நான்காவது அட்டெம்ப்ட்டில் பிளஸ் டூ பாஸ் செய்யும் தூத்துக்குடி மாணவன் ரவியாக விஜய் (அடேங்கப்பா!). நேர்மையான என்கவுன்டர் போலீஸ் ஸ்ரீஹரியைப்போல போலீஸ் ஆக வேண்டும் என்பது அவரது கனவு. சென்னை கல்லூரிக்குப் படிக்க வந்த இடத்தில் ரவுடிகளின் அட்டகாசம் (விஜய் படக் கதை வந்துவிட்டதா?). ஊரையே உலையில் அடித்துப் போடு கிறார்கள் ஒரு அப்பா, மகன் கம் வில்லன் கோஷ்டி. விஜய் அவர்களோடு மோதுகிற சூழல் வருகிறது. ''கிரி மினலுக்கு போலீஸ் வரணும். மிருகத் துக்கு வேட்டைக்காரன்தான் வரணும்'' என்று தொடை தட்டுகிறார் விஜய் (டைட்டில் வந்துவிட்டதா?). சவால், சவடால், டாடா சுமோ, கத்தி, ரத்தம், இத்யாதி... இத்யாதிதான் மீதிக் கதை.

பேரரசு டைப் கதை. இம்மி மாறாமல் விஜய் புகழ் பாடி ஆக்ஷன் உறுமி வாசித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாபுசிவன். அறிந்த காட்சிகள், தெரிந்த திருப்பங்கள் எனப் படத்தில் எல்லாமே பழசு (டைட்டில் உட்பட!) படத்தில் செம ஃப்ரெஷ் விஜய். காதலில் குழைகிறார். நட்பில் நெகிழ்கிறார். ஆக்ஷ னில் உறுமுகிறார். ஆனால், அலுத்துச் சலித்த அதே ரவுடி வேட்டையை எத்தனை முறை பார்ப்பது? போதாக்குறைக்கு விஜய் நடித்த பல படங்களின் ஸீன்களே இதில் ரிப்பீட். ஆக்ஷன் போர்ஷன் முழுக்க விஜய் நடக்கிறார், பறக்கிறார், சட்டையை உதறுகிறார், பஞ்ச் அடிக்கிறார், சவால்விடுகிறார்... றார்... றார்!

சின்ன போர்ஷனில் பெரிய பொண்ணு... அனுஷ்கா! முதலில் காதலிக்கிறார். பிறகு, ஆரோக்கி யமான இடைவெளிவிட்டு மீண்டும் காதலிக்கிறார். அப்புறம் ஹீரோயினை வில்லன்கள் கடத்த வேண் டுமே? எல்லாம் இருக்கிறது. அழகான அனுஷ்கா இதில் ஆன்ட்டி மாதிரி தெரிகிறாரே... என்ன பிரச்னை?

சாயாஜி ஷிண்டேவுக்கு 32-வது தடவையாக வில்ல போலீஸ் வேடம். கடைசியில் வழக்கம்போலத் திருந்துகிறார். சாயாஜியை வில்லன் பழி வாங்க வேண்டுமே? அவரது சின்னவீட்டை அப்படியே அலேக் பண்ணுகிறார். பிரமாதம்... 'கீப்' இட் அப்!

படத்தின் மூன்று வில்லன்களில் சலீம் கோஸ் மட்டுமே அடக்கி வாசிக்கிறார். மற்றவர்கள் ஸ்பீக்கருக்குப் பக்கத்தில் நின்று பேசுவது மாதிரி கத்தித் தீர்க்கிறார்கள். படத்தில் வில்லன்களை இவ்வளவு சோப்ளாங்கி ஆக்கியிருக்க வேண்டாம். எக்கச்சக்க பில்டப்கள் கொடுத்து அறிமுகம் ஆகும் படா வில்லன்கள் 'அவனைத் தடுக்க முடியாது' என்று விஜய் முன் வாலன்ட்டரி கைப்புள்ள ஆகிறார்கள். கொசு மாதிரி பொசுக் என்று உயிரை விடுகிறார்கள். இருப்பதில் கொஞ்சமாவது ஆறுதல் தருவது சத்யன்தான். காதலித்த பெண்ணைக் கல்யாணம் பண்ணும் இடத்தில் ரசிக்கவைக்கிறார்.

வேட்டை படத்தில் லாஜிக்கைக் கோட்டைவிட்டு விட்டார்கள். தமிழ்நாட்டுக்கே பிரபலமான என் கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டின் குடும்பமே கொல்லப் படுவதும், அவருக்குப் பார்வை பறிபோவதும் யாருக்கும் தெரியாதாம்! லூசுத்தனமாக நண்பனின் கடையையே தீவைத்துக் கொளுத்துகிறார் சலீம் கோஸ். எம்.எல்.ஏ-கூட இல்லாத சலீம் கோஸ் நினைத்த அன்றே மந்திரியாகப் (?!) பொறுப்பேற்கிறார். விஜய் ஊரையே கலக்கிக்கொண்டு இருக்க அவரைப் பற்றித் தெரியாமல் தேடிக்கொண்டு இருக்கிறார் அனுஷ்கா.

கேமராமேன் கோபிநாத் கேமராவின் வேலை எல்லாம் விஜய்யைப் பல கோணங்களில் சுற்றிச் சுழல்வதுதான். விஜய் ஆண்டனியின் இசையில் அனைத்துப் பாடல்களும் தாளம் போடவைக் கின்றன. குறிப்பாக 'கரிகாலன் காலைப் போல' பாடல் மெலடியும் துள்ளல் இசையும் கலந்த அழகிய கலவை. வழக்கமாக விஜய் நடனங்களில் தெரியும் எனர்ஜியான துள்ளல் வேட்டைக்காரனில் இல்லையே... ஏங்ணா?

பார்த்துச் சலித்த பழைய புலி. அதனாலேயே உறுமவதெல்லாம் இருமுவது மாதிரி கேட்கிறது!

Sunday, December 27, 2009

மறந்துவிடுவாயா இந்நாளை..?


"மறந்துவிடுவாயா இந்நாளை..?" கேட்டாள் அவள்.
"என் ஞாபகமே நீயானபோது எப்படி மறப்பது..?" என்றேன்
என் கேசத்தை இறுகப் பற்றி எங்கள் அதரங்களை ஒன்றுசேர்த்தாள்........

Saturday, December 26, 2009

கிழக்கின் அலைமட்டுமா எம் இனம் தின்றது..?


வானுக்கு அழகு வெள்ளை மேகம்
மேகத்துக்கு அழகு சோலைக்குள் பெய்யும் மழை
மழைத்துளிக்கு அழகு முற்றத்து வெள்ளம்
வெள்ளத்திற்கு அழகு அமைதியாய் ஓடும் ஆற்றுநீர்
ஆற்றுநீருக்கு அழகு பேதமின்றிக் கலக்கும் கடல்
கடலுக்கு அழகு துள்ளித் துள்ளி இசைமீட்டும் அலை.

இப்படித்தான் இயற்கையை இரசித்தான்
இந்துசமுத்திரத் தமிழன் இரண்டாயிரத்து நான்குவரை...,
அதன்பின் அறிந்துகொண்டான் அழகாய் இருப்பவரும்
அருகில் இருப்பவரும் எம்மை ஓர்நாள் அசிங்கப்படுத்துவர் என்பதை..!
கிழக்கின் அலைமட்டுமா எம் இனம் தின்றது..?
மகிந்தவின் அமைச்சனே நீயும்தான்..!

- ஆக்கம்: சிநேகிதன் கஜன் Dec 26, 2009 -

Wednesday, December 23, 2009

தமிழனுக்கு குரல் கொடுக்க வலுமைமிக்க தலைமையில்லை....

ரொரன்டொ தமிழின உணர்வாளர்கள் அமைப்பினால் எமக்கு அனுப்பபட்டுள்ள பிரசுரம் .......
அன்புத்தமிழ் உறவுகளே வணக்கம்!
எமது இனத்துக்கு துயர் நிறைந்த 2009ம் ஆண்டை இன்னமும் சில நாட்களில் மறந்துவிட்டு, புதிய பல எதிர்பார்ப்புக்களை நெஞ்சில் தாங்கியபடி 2010ம் ஆண்டை வரவேற்கும் வாசலில் நின்றுகொண்டு சில செய்திகளைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.
தமிழர்கள் நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து உலக அரங்கில் எமது உரிமைகளை, நலன்களை, இருப்பினை ஆழமாக நிலைநிறுத்தி எங்கள் இனத்தின் தனித்துவமான மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை காத்து நிற்கவேண்டிய முக்கிய காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
முன்பெல்லாம் 'தமிழர்களின் தலைமை யார்? எங்குள்ளார்கள்?" எனக் கேட்டால் விரும்பியோ, விரும்பாமலோ அனைவரது சுட்டுவிரலும் ஒரு திசையை நோக்கியே காட்டும். உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டு அரசை சுட்டிக் காட்டுவது அரிது என்பது உலகறிந்த உண்மை. உலக அரங்கில் தமிழ், தமிழனுக்கென முகவரியை தேடித்தந்தவன் இலங்கைத் தமிழன் என்பது அறிஞர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என்பதும் நீங்கள் அறிந்ததே.
ஆனால் இன்று, தனக்கொரு வலிமைமிக்க தலைமை இல்லாமையினால் ஆண்ட இனம் அன்றாடம் மாண்டொழிகிறது. இதற்கு முக்கிய காரணம் எமது இனத்துக்கேயுரிய சாபக்கேடான ஒற்றுமையின்மை. உலகிலேயே தன் இனத்தையே காட்டிக்கொடுத்து அழிக்கும் தரவரிசையில் தமிழர்களுக்குதான் முதலிடம். எதிரிகளிடம் இருந்து கிடைக்கும் சொற்ப சலுகைகளுக்காக தன் இனம் எப்பாடுபட்டாலும் பரவாயில்லை என நினைக்கிறான் தமிழன். இந்நிலை மாறவேண்டும். யார் மடிந்தால் நமக்கென்ன எனது குடும்பம் சுகமாய், சொகுசாய் மேலைநாட்டில் வாழ்கிறது என நினைப்பது தவறு. செத்துமடிந்த ஆயிரம் ஆயிரம் உறவுகளைச்சாட்டித்தான் நாம் சொத்து சுகமாய் இருக்கிறோம் என்னும் உண்மையை மறக்கக்கூடாது.
இவ்வேளை ஒருவர் குறுக்கிடுகிறார்.., தன் மகன் மாணவர் விசாவில் வந்ததாகவும், அதன்பின் தான் குடும்ப இணைவு விசாவில் வந்ததாகவும் தன் இருப்புக்கும் நாட்டுப் பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை என்றார். அவரிடம் ஒரு கேள்வி, 'அப்ப ஒருமுறை இலங்கைக்கு போய் வரலாமே?" என்றோம். 'போக முடியாது.. தமிழர் எண்டால் விமான நிலையத்திலேயே கடத்துகினமாம்" என்றார். இதிலிருந்து அவருக்கு தெளிவாக்கியது என்னவென்றால் தமிழன் இருப்பு எவ்வகையாயினும் அவனுக்கு பாதுகாப்பில்லை என்பதாகும். காரணம் உலகில் அவனுக்கு குரல் கொடுக்க வலுமைமிக்க தலைமையில்லை.
இதற்கு என்ன செய்யலாம்?
1. பேதங்கள் எவையுமின்றி நாம் தமிழர் என ஓர் குடைக்குள் அணிதிரளவேண்டும்.
2. எமது இன உரிமை, நலன்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவரையோ அல்லது ஒரு அமைப்பையோ நாம் தீர்மானிக்கவேண்டும்.
3. அதிக வீதமான எம் இனமக்கள் அணிசேரும் இலாப நோக்கமற்ற ஒருவருக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ நாம் ஆதரவு தருவதன் மூலம் எமது ஒற்றுமையை வலிமையாக்கலாம்.
4. எமது இனமக்களிடமிருந்து நலன்களை பெற்றுக்கொண்டு எமது ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபடும் ஒருவரையோ அல்லது அமைப்பையோ எமது இனத்தவர் ஆனாலும் சமூகத்தில் இருந்து புறக்கணிக்க வேண்டும் அல்லது அறிவுரை கூறி அவரை நல்வழிபடுத்தவேண்டும்.
5. எமது ஒற்றுமைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் அல்லது வெளியிடாமல் புறக்கணிக்கும் ஊடகத்தினரை இனம் கண்டு அவர்களை சமூகத்தில் இருந்து புறக்கணிக்க வேண்டும். எமது இன வியாபார நிறுவனங்களில் இருந்து அவர்களுக்கு கிடைக்கும் வருமானங்களை நிறுத்தவேண்டும்.
இவ்வாறு ஒரே குறிக்கோளோடு பேதங்கள் இன்றி நாம் செயல்படுவோமானால் வெகுவிரைவில் எமது இனத்தை அழிவில் இருந்து காக்கலாம். துளிகளாய் சிதறும் மழைத்துளிகளில் பலமில்லை துளிகளெல்லாம் ஒன்று சேர்ந்து உருவாகும் வெள்ளத்தில்தான் பலம்.
தமிழர்கள் பயங்கரவாதிகள் என்பது பலரது கணிப்பு. அந்தக் கணிப்பை உடைத்தெறிய எமக்கொரு சந்தர்ப்பமாய்; 'வட்டுக்கோடடை தீர்மானம்" எனும் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சனநாயக வழியிலான தீர்வுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்களின் ஆதரவுகளை; அறியும் வண்ணமும், உலக நாடுகளுக்கு அந்த தரவுகளை எடுத்துச் சொல்லும் நோக்கிலும் நோர்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கிடைத்த தமிழர்களின் ஆதரவுக்குப் பின் கனடாவில் கடந்த டிசெம்பர் 19 நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், தமிழ் வியாபார நிறுவனங்களிடம் இருந்து பலனைப் பெற்றுவரும்; கனடாவில் முதல்தர பத்திரிகை என தன்னைத்தானே சொல்லிக்கொண்டு சுயவிளம்பர படங்களை பிரசுரிக்கும் பத்திரிகையும் அதனோடு இணைந்து தாமரையும் தீபமும் எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் 'வட்டுக்கோட்டை தீர்மானம்" பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் இலவசப் பத்திரிகைகளை தவறாது படிக்கும் வாசகர்களுக்கு வரலாற்றுச் செய்தி கிடைக்கவில்லை. தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட 'வேட்டைக்காரன்" திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆசிரியர் தலையங்கம் வெளியிட்டிருந்தது. இதனால் விசனம் அடைந்த 'பிரம்டன்" வாழ் தமிழர்கள் அருகிலிருந்த தமிழர் வியாபார நிலையங்களிலிருந்து இலவச தமிழ் வார பத்திரிகைகள் அனைத்தையும் அகற்றியதன் தொடர்ச்சியாக 'ரொரன்டொ", 'மிசிசாகா" நகரங்களிலும் தமிழ் இன உணர்வு கொண்டவர்களால் இந்த பத்திரிகைகள் அகற்றப்பட்டது. இது இவ்விதம் இருக்க, தமிழ், கலை, பண்பாடு போல் நாங்களும் தனித்துவமானவர்கள் என தன்னை அடையாளப்படுத்தும் தனித்தமிழ் வானொலியோ இந்தத் தேர்தலை வேடிக்கைக் கூத்து என தனது நேயர்களுக்கு விபரித்தது.
இந்த வாக்கெடுப்பை, 'கனேடிய தமிழ் தேர்தல்" எனும் கனடாவில் பதிவுசெய்யப்பட்ட பொது அமைப்பு ஒன்று, நீதியான முறையில் வாக்குப்பதிவு இடம்பெறுவதை கண்காணிப்பதற்காக தேர்தல் பணிகளில் ஈடுபடும் கனேடிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாம் சனநாயக வழியில்; செல்ல வழியமைக்கும் வாக்கெடுப்பை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களையும், செயலையும் முன்னணித் தமிழ் ஊடகங்கள் புரிந்திருப்பதானது எமது இனத்தை மேலும் அவலத்துக்குள் தள்ளிவிட அவர்கள் ஆசைகொள்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அன்புத்தமிழ் உறவுகளே!
இனியும் பொறுத்தது போதும். எம் இனத்தை அழிவுக்கு அழைத்துச் செல்லும் கூட்டத்திலிருந்து எங்களையும், எங்கள் இனத்தையும் காப்போம்...!! ஒன்றுபடுங்கள்...!!!
தமிழின விடிவுக்கான தேர்தலை கொச்சைப்படுத்தி எமக்கு அவசியமில்லாத செய்திகளையும், கட்டுரைகளையும் பிரசுரித்த கூட்டத்தாரின் பத்திரிகைகள், வானொலிகளை உங்கள் வியாபார நிலையங்கள், வீடுகளிலிருந்து நீக்குங்கள்...!!
நன்றியுடன்,
தமிழின உணர்வாளர்கள் - ரொரன்டொ பெரும்பாகம்.

Friday, December 18, 2009

"இயக்கத்தையும் இனத்தையும் கூறு போட்டு விற்றுவிடாதீர்கள்..!!" -பிரபாகரன்

நன்றி - ஆனந்தவிகடன் 16-12-2009

ஈழப் பிரச்னையைத் தீர்க்க இந்தியா சில முயற்சிகளைச் செய்ய ஆரம்பித்திருந்த ஆரம்ப காலகட்டம் அது! அதற்கான வேலைகளை சென்னையில் இருந்து சில புலிப் போராளிகள் பார்த்தார்கள். பிரபாகரன் ஈழக் காடுகளுக்குள் இருந்தார். 'இந்திய அதிகாரிகள் எங்களைச் சந்தித்து தீர்வுத் திட்டத்தைச் சொல்கிறார்கள். அதை நாம் ஏற்றுக்கொண்டால், வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி வரை தங்களுக்குக் கிடைக்கும். நம் இயக்கத்தின் செலவுகளுக்காகப் பணம் தரவும் தயாராக இருக்கிறார்கள். தலைவர் என்ன நினைக்கிறார்?' என்ற கேள்வியுடன் பிரபாகரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அப்போது அவர் அனுப்பிய பதில் கடிதத்தில் கீழ்க்கண்ட வாசகம் இருந்தது...

'இயக்கத்தையும் இனத்தையும் பகுதி பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ கூறு போட்டு விற்றுவிடாதீர்கள்!' என்று வெப்ப வார்த்தைகளை உமிழ்ந்திருந்தாராம் பிரபாகரன். இன்று சில புலிப் போராளிகள் செய்து வரும் காரியங்களைப் பார்த்தால், அது உண்மையில் நடந்துவிடும்போலத்தான் தெரிகிறது.
புலிகள் அமைப்பை வெளிப்படையாக ஆதரித்துப் பேசும் வைகோ, நெடுமாறன் போன்ற தலைவர்கள்கூட, 'வீண் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்' என்று எச்சரிக்கை விடுக்கத் தவறுவது இல்லை. அந்த அளவுக்கு புலிகளை மையப்படுத்திய உச்சகட்டக் குழப்பங்கள் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் மத்தியில் உதித்திருக்கின்றன. 'எது நிஜப் புலி?' என்ற கேள்விக்கான விடை தேடும் படலத்தில் இறங்கி, பலரும் களைத்தும் சலித்தும் போயிருக்கிறார்கள்.

மே 18ம் தேதி புலிகள் அமைப்பை முழுமையாக முடித்துவிட்டதாக ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷே அறிவித்தார். தலையில் ஆழ்ந்த வெட்டுக்காயத்துடன் 'பிரபாகரனின் சடலம்' காட்டப்பட்டது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றார், கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாபன். இருக்கிறார் என்று புலிகளின் புலனாய்வுப் பிரிவு சார்பில் அறிவழகனும் அறிவித்தார். அடுத்த சில நாட்களில் பிரபாகரன் இல்லை என்று கே.பி. அறிவித்தார். ஒரு மாதம் கழித்து அதை அறிவழகனும் ஒப்புக்கொண்டார். புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் இது எதையும் நம்பவில்லை. பிரபாகரன் இருக்கிறார் என்றே நினைத்தார்கள். பலர் நினைக்கிறார்கள்!

பிரபாகரன் எப்போதும் மறைந்து வாழ்ந்த மனிதர். அவரை ஆண்டுதோறும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினத்தன்று மாலை 5.30 மணிக்குதான் அனைவரும் 'திரையில்' பார்க்க முடியும். எனவே, நவம்பர் 27ம் தேதிக்காக அனைவரும் காத்திருந்தார்கள். ஆனால், திரையில் அவர் வரவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. அதே நேரத்தில், இன்னோர் குரல் வேறு ஓர் இடத்தில் இருந்து பேசியது. இரண்டு பேரும் சொன்ன செய்திகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவை. அப்படியானால், எது உண்மையான 'புலிகளின் குரல்?' என்ற கேள்விக்கான விடை காண முயற்சித்தபோது குழப்பங்கள் அதிகரித்தனவே தவிர, குறையவில்லை.

விசுவநாதன் உருத்திரகுமாரன், காஸ்ட்ரோ அணியினர், கதிர்காமத் தம்பி அறிவழகன், ராம் ஆகிய நான்கு பேர் நாலா திசையிலும் பயணித்து, இந்த உள்குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

எல்லாம் முடிந்தது என்று அறிவிக்கப்பட்ட மே மாதத்தின் கடைசியில் தயா மோகன் என்பவர் யாழ்ப்பாணம் மாவட்டத் தாக்குதல் தளபதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்தினார். 'நான் காட்டுக்குள்தான் இருக்கிறேன். நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கான கட்டளைக்காகக் காத்திருக்கிறேன்' என்று தயா மோகன் அறிவித்து, பரபரப்புக் கிளப்பினார். கே.பி. மட்டும்தான் புலிகளுக்கான ஆளாக வெளிப்படையாக இயங்கி வந்த நேரம் அது. திடீரென்று மலேசியாவில் தயா மோகன் காட்சியளித்தார். காட்டுக்குள் இருந்தவர் எப்படி மலேசியாவுக்குப் போக முடிந்தது என்று சந்தேகம் கிளம்பியது. 'அரசாங்கத்தின் தயவு இல்லாமல் அவரால் வெளியேறி இருக்க முடியாது. இவர் ராணுவத்தின் வழிகாட்டுதலில் முஸ்லிம் பெயரில் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு மலேசியா வந்தடைந்தார். அவர் கே.பியை மலேசியாவில் சந்தித்தார். அவர் இவருக்கு வீடு எடுத்துக் கொடுத்தார். தயா மோகனைப் பலரும் சந்தித்தார்கள். புலிகளின் தலைமைக் கமிட்டிக் கூட்டம் இவர்களைவைத்து நடந்தது. ஆனால், இவை அனைத்தும் ரகசியமாக இல்லாமல் இந்திய, இலங்கை, மலேசிய உளவுத் துறைக்குத் தெரிவது மாதிரிதான் நடந்தது. கடைசியில், கே.பியைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு செல்வதில் முடிந்தது இது.

'காட்டில் இருந்து போர் செய்யப்போவதாக அறிவித்த தயா மோகன், மலேசியாவில் வந்ததில் தொடங்கி கே.பி. கைது வரை அனைத்தும் சிங்கள புலனாய்வுத் துறையின் ஏற்பாட்டில் செய்யப்பட்டவைதான்' என்ற சந்தேகம் பலமாகப் பரவி இருக்கிறது. இப்படிப்பட்ட தயா மோகன் தலைமையில் ஓர் அணி, ராணுவத்தின் பாதுகாப்புடன் கருணா வழிகாட்டுதலில் இயங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.

அடுத்ததாக ராம் என்பவர் காட்டப்படுகிறார். நவம்பர் 27ம் தேதி ராம் படத்தைப் போட்டு பின் குரலாக ஒரு பேச்சு ஒலி பரப்பானது. 'தந்தையை இழந்த குடும்பம் போன்று, எம்மை வழிநடத்தி வழிகாட்டிய தேசியத் தலைவரை இழந்து நிற்கிறோம். தலைவரின் கனவை நனவாக்குவதற்கு எமது தாய் மண்ணில் நானும் எஞ்சியுள்ள ஏனைய தளபதிகளும் கால் பதித்து நிற்கிறோம். கடந்த காலங்களில் பல்வேறு வழிகளில் நிதி உதவி வழங்கிய அன்பு உள்ளங்கள் தொடர்ந்து அந்த உதவியை வழங்க வேண்டும். 400 சதுர கி.மீ. முற்றுகைக்குள் இருந்து தேசியத் தலைவர் அவர்கள் 17.05.2009 அன்று பிற்பகல் இறுதியாக எனக்கு ஒரு செய்தியைக் கூறினார். 'இந்தச் சூழலில் இருந்து நாம் மீள முடியாத நிலையில் உள்ளதால் இறுதிக் கணம் வரை போராடி எம்மை அழித்துக்கொள்ள முடிவெடுத்து உள்ளேன். எனவே, இந்த 30 வருட காலப் போராட்டத்தின் தொடர்ச்சி யையும் எமது மாவீரர் விட்டுச் சென்ற பணியையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள்' என்று தேசியத் தலைவர் எனக்குப் பணித்தார். இத் தொடர்ச்சியை எவ்வாறு கொண்டுசெல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் என்னிடம் கூறியிருந்தார்' என்று பீடிகை போட்டிருந்தார் ராம். இந்த ராம்தான் உண்மையான அணி என்று நம்பி பலரும் பணம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், ராம் குறித்து தமிழீழ புலனாய்வுப் பிரிவு என்ற பெயரால் ஓர் அறிக்கை உலவுகிறது. அநேகமாக அது கதிர்காமத் தம்பி அறிவழகன் அணியின் அறிக்கையாக இருக்கலாம். மட்டக்களப்புத் தளபதியாக இருந்த பிரபா என்பவர் வவுனியாவில் பதுங்கியிருந்தார். தன்னை மட்டக்களப்புக்குக் கொண்டுபோய் விடச் சொல்லி, தவேந்திரன் என்ற போராளிக்குச் சொல்லியிருக்கிறார். பிரபாவை அழைத்துக்கொள்ள 'ரகசிய' வாகனம் வந்தது. ஓடிப் போய் அதில் பிரபா உட்கார்ந்தார். அதன்பிறகுதான் அதிர்ச்சி! உள்ளே இருந்தவர்கள் அனைவரும் இலங்கை ராணுவப் புலனாய்வு அதிகாரிகளாம். தவேந்திரன் ஏற்கெனவே ராணுவத்தில் சரணடைந்தவர். பிரபா, தவேந்திரனை வைத்துதான் இந்த ராமை ராணுவம் மடக்கியிருக்கிறது. தன்னை மட்டக்களப்புப் பகுதிக்குக் கொண்டுபோய்விட பிரபாவிடம் கேட்டிருக்கிறார் ராம். அதே மாதிரி வாகனம் வந்தது. உள்ளே இருந்தவர்கள் அனைவரும் சிங்கள ராணுவ அதிகாரிகள். சிக்கிக்கொண்டார் ராம். அவரைவைத்து ஒரு போலி புலி இயக்கத்தை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

தாங்கள் காட்டில் இருப்பதாகச் சொல்லியே இவர்கள் வெளிநாட்டுத் தமிழர்களுக்குப் பேசியிருக்கிறார்கள். நான்கு மாதங்கள் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரவில்லை. செப்டம்பர் மாதம் சிங்கள ராணுவத்தால் ராம் கைது செய்யப்பட்ட தகவல் பரவியது. நவம்பர் 5ம் தேதி அவர் தப்பிவிட்டதாகச் சொல்லப்பட்டது. 10ம் தேதி அவர் கைதானதாகவும் கூறப்பட்டது. தான் தப்பிய தகவலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு ராம் சொல்லியிருக்கிறார். சந்தேகக் குறியைப் போட்டு அவர்கள் நடத்திய தகவல் வேட்டையில் அத்தனையும் வெளியாகி உள்ளது. இதன் உச்சகட்டமாக 'நான்தான் அடுத்த தலைவர்' என்று ராம் அறிவித்துள்ளார். இவர் இப்படி செய்யப் போகிறார் என்பதை கதிர்காமத் தம்பி அறிவழகனும் முன்னமே அறிவித்தார். ஆனாலும், ராம் தலைமையில் கணிசமான புலிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிங்களப் பத்திரிகைகளின் கணக்குப்படி வடகிழக்கு காடுகளில் சுமார் இரண்டாயிரம் புலிகளுக்குள் இருக்கலாம் என்று எழுதப்படுகிறது. இவர்களை கடைசிக் கட்டத் தாக்குதலின்போது முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வர வேண்டாம் என்று பிரபாகரன் சொல்லியிருந்ததால், அந்தந்தப் பகுதியில் தங்கியவர்கள் இவர்கள். தடியெடுத்தவன் தண்டல் காரன் என்பது மாதிரி இவர்கள் தண்ணீர் தெளித்துவிடப்பட்டுள்ளார்கள். ராணுவத்திடம் சரண் அடைந்தவர்களுக்கும் ஆயுதங்களை மறுபடியும் கொடுத்து காட்டுக்குள் 'சும்மா' இருத்தி வைத்திருக்கிறார்களாம். வேறு புலிகள் வந்தால் இரு தரப்பையும் மோதவிடும் தந்திரம்தான் இதற்குக் காரணம். சரண் அடைந்தவர்களை வைத்து அமைப்புகளை ஆரம்பிக்கும் வேலையை கருணா செய்து வந்தார்.

ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்னால் கொழும்புவில் சென்றுகொண்டு இருந்த அவரது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கருணா தப்பினார். அதிலிருந்து வீட்டை விட்டு அவர் வெளியில் வராமல் முடங்கிவிட்டாராம். டக்ளஸ் தேவானந்தாவும் இரண்டு மாதங்களாக யாழ்ப்பாணத்திலேயே தங்கிவிட்டாராம். கொழும்புத் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. புலி ஆதரவாளர்களைப் பிளவுபடுத்தும் காரியங்களை இவரும் அதிகமாகக் கவனித்து வருகிறார்.

ஈழத்தில் இப்படிப்பட்ட குழப்பங்கள் இருந்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இன்னும் அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே கே.பி. அணி என்றும் காஸ்ட்ரோ அணி என்றும் பிரிந்திருந்தவர்கள் அவர்கள். கே.பி. வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்து பிரபாகரனால் நீக்கப்பட்ட பிறகு காஸ்ட்ரோ அணியின் கை ஓங்கியது. மே மாதத்துக்குப் பிறகு கே.பி. முக்கியமானவராகக் கருதப்பட்டார். அவரது கைதுக்குப் பிறகு உருத்திரகுமாரனைச் சொல்கிறார்கள். 'நாடு கடந்த தமிழீழம் அமைப்போம்' என்ற முழக்கத்துடன் இவர் குதித்திருக்கிறார். 'போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறிக்கோள் ஒன்றுதான் என்று சுதுமலைக் கூட்டத்தில் தலைவர் சொன்னார். அதன்படி நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளியே அரசியல் வெளி உருவாக்கப்பட வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கு புலம் பெயர்ந்த மக்களில் ஒரு பிரிவினர் உற்சாகம் இல்லாமல்தான் ஆதரவு காட்டுகிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் இவரை அங்கிருக்கும் ஈழத் தமிழர்கள் மட்டும் ஆதரிக்கிறார்கள். நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு அமைப்பாளர் என்று இவர் தன்னைத்தானே அறிவித்துக்கொள்கிறார்.

ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் செல்வாக்குஉள்ள பிரிவாக காஸ்ட்ரோ அணி இயங்குகிறது. நவம்பர் 27ம் தேதி, மாவீரர் தினத்தன்று வாசிக்கப் பட்ட தலைமைச் செயலக அறிக்கை காஸ்ட்ரோ அணியினரின் தயாரிப்பாகவே சொல்லப்படுகிறது. 'சிறீலங்கா ராணுவத்தை எதிர்த்து எமது இயக்கம் தற்காப்புச் சமர் மட்டும்தான் நடத்தியது. யுத்தத்தை நிறுத்தும்படியும் அமைதிப் பேச்சுக்களைத் தொடங் கும்படியும் நாம் சொல்லி வந்தோம். எமது சக்திக்கு மீறிய வகையில் வல்லாதிக்கங் களின் கரங்கள் சிங்கள அரசைப் பலப்படுத்தின. எமது மக்களை மிகப் பெரும் மனிதப் பேரழிவில் இருந்து பாதுகாக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளையே சிங்களத் தரப்பும் நடுவர்களாகச் செயல்பட்டவர்களும் முன்வைத்தார்கள். இது எமக்கு மிகவும் ஆழ்ந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இம் மனிதப் பேரழிவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஓரிரு நாட்களுக்குள் கொன்று அழிக்கப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து எமது அரசியல் ராஜதந்திர நகர்வுகளைச் சர்வதேசத்தில் விரிவாக்கிக்கொண்டு இருக்கிறோம். எமது அமைப்பின் அரசியல் கட்டமைப்பை வெளிநாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்' என்று இதில் சொல்லப்பட்டது. இறுதியாக 'தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் தொடர்ந்து போராடி, தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம்' என்று முடிகிறது.

'வழிகாட்டல்' என்ற வார்த்தை நிஜமாகவே அறிக்கையில் இருந்ததா என்ற குழப்பத்துக்கு இதில் விடை இல்லை.

மறைந்துபோன மாவீரர் பட்டியலில் இவர்கள் பிரபாகரனை இணைக்கவில்லை! இதைத்தான் 'உண்மையான' இயக்கமான ஐரோப்பியத் தமிழர்கள் நம்புகிறார்கள். இதன் பின்னணியில் கதிர்காமத் தம்பி அறிவழகன் இருக்கிறார் என்றால், 'பிரபாகரன் இறந்துவிட்டார்' என்று அவர் மாவீரர் உரையில் ஏன் குறிப்பிடவில்லை என்பது தெரியவில்லை. அனைத்துக்கும் மேலாக 'தமிழ்நாட்டு உடன்பிறப்புக்களே' என்ற வார்த்தை வருகிறது. பொதுவாக, 'தமிழக உறவுகளே' என்றுதான் மாவீரர் உரையில் இடம்பெறும். புதிதாக உடன்பிறப்புக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

இப்படிப் பலவாறாகப் புலிகள் இயக்கம் சிதறிக்கொண்டு இருப்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன. 'எத்தனை உயிர்கள் போயிருக்கும். எத்தனை குடும்பங்கள் நிர்கதி ஆகியிருக்கும். இத்தனை ஆண்டு காலத் தியாகமெல்லாம் இந்தச் சிதறலுக்காகத்தானா?' என்ற கவலை தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் ஓங்கியே ஒலிக்கிறது!





Wednesday, December 16, 2009

அன்பான உறவுகளே! உங்களோடு சில நிமிடம்.. ..

கனடா பல்கலைக்கழகத் தமிழ் பட்டதாரிகள் அமைப்பினால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கை.
*வியாபார நோக்கற்ற புறக்கணிப்பு போராட்டம் என உறுதி செய்யப்பட்ட பின் இங்கு பதிவேற்றியிருக்கிறோம்.
அன்பான உறவுகளே!
உங்களோடு சில நிமிடங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றோம்.
நாம் கடந்த காலங்களில் புறக்கணிப்பு போராட்டங்களை பெருமளவில் நடத்துவதற்குத் தயக்கம் காட்டி வந்திருக்கின்றோம். எம் தயக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட Sri Lanka அரசு; தட்டிக் கேட்பாரற்ற நிலையில் எம் மக்களைக் கொன்றொழித்தது. வதை முகாம்களில், சிறைகளில் அடைத்துச் சித்திரவைதை செய்கின்றது. நாம் எதையும் ஆழமாக சிந்தித்துச் செயற்படுவதில்லை. பொதுநோக்கில் ஆழமான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. உணர்ச்சி வேகத்தால் அவ்வப்போது கூடிக் கலைந்திருக்கின்றோம்.
நாம் புறக்கணிப்பு போராட்டங்கள் குறித்து நிறையப் பேசுவோம். களங்களையும் குறிப்போம். ஆனால் களமிறங்கும்போது பின்வாங்கிவிடுகின்றோம். ஈடுபாடின்மை பயம் இவை போன்றவையே நாம் ஒப்புக்கொள்ள மறுக்கின்ற காரணங்கள். புறக்கணிப்புப் போராட்டம் என்பது உலகில் எல்லா நாடுகளிலும்; அங்கீகரிக்கப்பட்ட சனநாயக உரிமை. அந்த சனநாயக உரிமையினைக் கையிலெடுத்து எம் உறவுகளைக் காப்பதற்காக போராடியிருக்க வேண்டிய நாம் காலங்கடந்தும் அதை உணராமல் இருப்பதுதான் வேதனைக்குரியது. ஆரம்ப நாட்கள் முதல் நாம் Sri Lanka பொருட்களையும், சன் ரீவி (Sun TV) போன்ற தொலைக்காட்சிகளையும் பெரும் முனைப்போடு புறக்கணித்திருந்தால்; சிலவேளை எம் உறவுகளை நாம் காப்பாற்றியிருக்கக் கூடும். இன்று உறவுகளை இழந்து, அழது புலம்புகின்றோம். முள்ளியவாய்க்கால் கொலைக் களத்தில் எஞ்சிய எமது மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்து விட்டன. இன்றும் தமிழர் வணிக நிறுவனங்களில் குவிந்து கிடக்கிக்கின்ற Sri Lanka உற்பத்திப் பொருட்கள் எதைப் புலப்படுத்துகின்றன?
அந்தச் சுவைகளைத் துறக்க நாதியற்று, அவற்றை நுகர்ந்துகொண்டிருக்கின்றோமே; நாம் இன்னும் புறக்கணிப்பின் உண்மையான போராட்டக்களத்துக்குள் இறங்கியிருக்கின்றோமா? இல்லை என்பதுதான் வெளிப்படையான விடை. இதன் ஊடாக, தொடர்ச்சியான புறக்கணிப்பு போராட்டத்தால் விளைந்திருக்கக்கூடிய நன்மைகளை நாம் அறிய முயற்சிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. சனநாயக வழிப்பட்டதும் பெரு வெற்றியைத் தரக்கூயடியதுமான புறக்கணிப்பு போராட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்வது, எதிர்காலத்தில் நாம் அதனைக் கையில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்.
Irish நாட்டில் ஏற்பட்ட நிலச் சண்டையில் (Land War) Captain Charles Boycott அவர்களினால் பறிக்கப்ட்ட நிலப்பிரதேசங்களும், அவருடைய தேவையற்ற பண அறவிடல்களுக்கும் எதிராக கிழந்தெழுந்த விவசாயிகளின் போராட்டமே பின்னால் Boycott என்ற போராட்ட வடிவம் உருவாகுதற்கு காரணமாக இருந்திருக்கின்றது. ஒரு மனிதன் சுவாசிப்பதற்கும், இதர மக்களுக்கு நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக்கேட்பதற்கும் புறக்கணிப்பு போராட்டம் ஒரு கருவியாக பல நாட்டு மக்களால் இற்றைவரைக்கும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. சனநாயகத்தின் அடிப்படை உரிமையின் ஒரு அங்கமாகவே இந்தப்போராட்டம் இருப்பதை உணர வேண்டியது தமிழர்களின் முக்கிய கடமையாகும். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சூழல், மற்றும் விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படுகின்ற போது, அந்த தீங்கைச் செய்கின்ற நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிராக தொடர் போராட்டமாக இருக்கக்கூடியது இந்தப் போராட்டமே! தீங்கு செய்பவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், அவர்களைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தவும், அவர்களின் மமதைப்போக்கை நிறுத்தவும் இந்தப் போராட்டம் மிகப்பெரும் கருவியாய் இருந்திக்கின்றது.

வெற்றியீட்டிய புறக்கணிப்புப் போராட்டங்கள் சில:

•1830 இல் நடந்தேறிய நிக்கரோ மாநாட்டில் (National Negro Convention) ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானம் அடிமைகளை வைத்து உருவாக்கப்படும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் அடிமைத்தனத்தை ஊக்கப்படுத்துவதையும் தடைசெய்யுமாறு அத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

•அமெரிக்காவில் நிற வேறுபாடு உச்சம் தொட்ட காலத்தில்; வெள்ளை இனத்தவர்களால் நடத்தப்படும் பேருந்துகளில் கறுத்த இனத்தவர்கள் பயணிப்பதை புறக்கணிக்கும்மாறு வேண்டிக்கொள்ளப்பட்டார்கள். பேருந்துகளில் கறுப்பர்களுக்கான தனியான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

•அமெரிக்காவின் விடுதலைக் காலத்தில்; பிரித்தானியா அரசாங்கத்துக்கெதிராக போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது பிரித்தானியாவில் இருந்து இறுக்குமதியாகும் அனைத்தையும் புறக்கணிக்குமாறு அமெரிக்க விடுதலைப் போராளிகள் அமெரிக்க மக்களுக்கு மிகவும் கடுமையான கட்டளையொன்றை பிறப்பித்திருந்தார்கள்.

•இந்திய சுதந்திரக்காலத்தில் பிரித்தானியாவுக்கு எதிராக காந்தியடிகள் தலைமையில் பல புறக்கணிப்புப் போராட்டங்கள் நடந்தேறியது.

•யூதர்களின் வன்முறை அழிவுக்கு அவர்களே காரணம் என கருத்துப்பட தெரிவித்த Henry Ford அவர்களுக்கெதிராக, அவருடைய நிறுவனம் தயாரித்த கார்களை வாங்கவேண்டாம் என யூதர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.

•1980 இல் ரஸ்ஸியாவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினை புறக்கணிக்க வேண்டி அமெரிக்க அரசாங்கமே முன் நின்று புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியது.
இத்தகைய போராட்டங்களுடாகவே போராடிய இனங்கள் விடுதலை பெற்றிருக்கின்றன; அல்லது விடுதலைக்கு வலுவேற்றியிருக்கின்றன. புறக்கணிப்பின் தாக்கமே எம் மக்களின் சுதந்திரத்தை வெற்றியாக்கித் தரும். புறக்கணிப்புப் போராட்டத்திலே நாம் தேடும் பல விடைகள் மறைந்திருக்கின்றன. இந்தவகைப் போராட்டமே தமிழர்களில் விடிவை எடுத்துவரும் என்பதற்கு மேலே சொல்லப்பட்ட உதாரணங்கள் போதுமானவை..
இலங்கையின் பொருளாதாரத்தையும், இன்னும் புதியதாக உருவாகிக்கொண்டிருக்கும் தமிழ் விரோத சக்திகளையும் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வருவதற்கு தமிழர்கள் நாம் முன்வந்தால் மட்டுமே முடியும். அப்போதுதான் தேடிக்கொண்டிருக்கின்ற விடிவை நம் மக்கள் அடையலாம். நாளை நாங்கள் இலங்கையில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கும் போது, செத்து மடிந்த எங்கள்; மொழி பேசுகின்ற மக்களையும், கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டு காடுகளில் வீசப்பட்ட எங்கள் உறவுகளையும், கொடுரமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட எங்கள் பெண்மணிகளையும், பிஞ்சுகளிலே உயிரைக் கொடுத்த எம் பச்சிளம் பாலகர்களையும், காணாமல் போய்க்கொண்டிருப்போரையும் மனதில் கொண்டு வாருங்கள். உங்களால் முடியும்! நீங்களும் மனிதர்கள் தான். நீங்கள் வாங்கப்போகின்ற ஒவ்வொரு பொருளிலும் எம் உறவுகளின் சோகமும் இரத்தக் கறையும் கலந்திருப்பதை உணருங்கள். புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எந்தவொரு பங்களிப்பையும் விட மிக இலகுவானதாக செய்யக்கூடியது. இதைக் கூட நாம் செய்யத் தவறினால், தமிழர்களாக அல்ல, மனிதர்களாக பிறந்ததில் பயன் உண்டா என்பதை உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.
வேட்டைக்காரன் படப் புறக்கணிப்பு!!!
கொடுமைகளை செய்கின்ற இலங்கை இராணுவத்துக்கு இசை அமைத்தவர்; இப்போது வரப்போகின்ற வேட்டைக்காரன் படத்துக்கும் இசை உதவி செய்திருக்கிறார். கொலை செய்கின்ற அரசாங்கத்தை ஊக்கப்படுத்தி, பல கொலைகளை செய்ய உதவிய இந்திய காங்கிரசு கட்சியில் உறுப்பினராகிய திரு.விஐய் அவர்கள் நடித்த படமாகிய வேட்டைக்காரனையும் நாம் புறக்கணிப்பதிலும் ஓரு ஆணித்திரமான செய்தியினை இந்தியாவில் இருப்போருக்கு நாம் அனுப்பலாம். நீங்கள் பணம் கொடுத்துப் பார்க்கப்போகின்ற படத்துக்குப் பின்னால் ஒரு இரத்தக் கதையொழிந்திருப்பதை உணருங்கள். பொழுதுபோக்குக்காக மற்றைய படங்களை பாருங்கள். ஆங்கிலப்படங்களை ஊக்கப்படுத்துங்கள். குற்றம் செய்தவர்களை இன்னும் பணம் கொடுத்து ஊக்கப்படுத்தாதீர்கள். மக்களுக்காக கண்ணீர் சிந்தும் மற்றய தமிழர்கள் நடித்த படங்களை பாருங்கள். எமக்கான ஆதரவுக் குரல்களைத் தரும் கலைஞர்களை ஆதரியுங்கள்.
பாசத்துக்குரிய தமிழர்களே!!!
எல்லாவகையான புறக்கணிப்பு போராட்டங்களையும் வெற்றியடைய வைப்பீர்களா? அல்லது மீண்டும் தலையைச் சுற்றி வந்து மூக்கைத் தொட முயற்சிப்பீர்களா? எம் விடிவுக்கான வாசலின் திறவுகோல் உங்கள் ஒவ்வொருவரிடமும்; தான் உள்ளது!!!
நன்றி
பல்கலைக்கழகத் தமிழ் பட்டதாரிகள் அமைப்பு – கனடா

தேசத்தின் குரல்... நான் நேசித்த குரல்..!


அன்ரன் பாலசிங்கம் (மார்ச் 4, 1938 - டிசம்பர் 14, 2006) விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமை கொண்ட இலங்கைத் தமிழராவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் பெப்ரவரி 22-23 இல் ஜெனிவாவில் நடைபெற்ற, ஜெனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை அளித்துள்ளன.
ஆரம்பக்காலத்தில் இலங்கையின் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். இங்கு பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியாதனால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார். அவுஸ்திரேலியரான அடேல் ஆன்னை இலண்டனில் இவரது முதல் மனைவி இறந்த பின் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.
1970களில் பாலசிங்கம் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கெரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த புலிகள் இயக்கத் தலைவர் பிரபகரன் பாலசிங்கத்துடன் தொடர்புக் கொண்டதன் மூலம் பாலசிங்கத்துக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புகள் ஏற்பட்டது. பின்னர் பாலசிங்கம் இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தும் போது பிரபாகரனுடனான தொடர்பு மேலும் வளர்ந்தது. 1983 கறுப்பு யூலைக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய பாலசிங்கம் தம்பதியினர் இந்தியாவுக்கு குடிப் பெயர்ந்தனர். 1985 திம்பு பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றிய பாலசிங்கத்தின் நிலை காலப்போக்கில் புலிகள் இயக்கத்தில் பாலசிங்கத்தின் நிலை உயர்ந்து புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் உயர்ந்த அதேவேளை பிரபாகரனின் நெருங்கிய நண்பராகவும் மாறினார். ஏப்ரல் 2002 இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு சில தடவையே நடைபெறும் பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு மொழி பெயர்ப்பு உதவிகளையும் செய்தார்.
2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துப் போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் வைத்தியர்கள் உறுதி செய்தனர். தொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 அன்று தனது 68வது வயதில் லண்டனில் காலமானார்.
அன்ரன் பாலசிங்கம் முதலில் மார்க்சிய வாதியாக இருந்தவர். பின்னர் அதில் இருந்து தன்னை விலக்கி, ஈழத் தமிழ்த் தேசியத்தை வரையறை செய்பவர்களில் ஒருவரானார். தமிழீழ விடுதலைப் புலிகளில் கற்றறிவு, அனுபவ அறிவு, ஆங்கில மொழி அறிவு, மிதவாதத் தன்மை வெளிஉலக பார்வைத் தொடர்பு நகைச்சுவை உணர்வு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மிக முக்கியத் தலைவராக விளங்கினார். முற்போக்கான, மேற்குலகைப் புரிந்த ஆளுமையாக பிபிசி ஆய்வாளர்கள் இவரின் முக்கியத்துவத்தை பற்றிய ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளனர். இறுதி வரைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தாத தமிழீழப் போராளியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் இருந்து செயலாற்றியதும் இவரின் மிதவாத போக்குக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு ஆகும். இலங்கையின் நாளேடு ஒன்றின் கருத்துப்படி, விடுதலைப் புலிகளை பேச்சுக்கு கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றி வந்ததோடு 2002 இல் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த்ததுக்கு பாலசிங்கம் உழைப்பு முக்கியமானதாகும். புலிகள் இயக்கத்தில் உள்ள தீவிரவாத கருத்துள்ள தலைவர்களிடமிருந்து புலிகளை மீட்டு அரசியல் தீர்வுகளுக்கு இட்டுச் செல்ல முனைந்த முக்கியத் தலைவராவார்.
  • 4 வருடத்துக்கு முன் லண்டனில் ஆற்றிய உரை
  • Tuesday, December 15, 2009

    "வேட்டைக்காரன்" அரட்டை

    வேட்டைக்காரனுக்கான அரட்டை முகநூல் பதிவினருக்கிடையில் இன்று இடம்பெற்றது. அதில் சில பதிவுகளை இங்கே தருகின்றோம்.
    "தமிழ்த் தேசியம் வாழுகிறதென்றால்; மானமுள்ள தமிழ்ச்சாதி வாழ்கிறதென்றால் இனி எவருமே எமது தலையில் மிளைகாயை அரைக்க முடியாது என்பதை வேட்டைக்காரனை வேட்டையாடி நிரூபித்துக் காட்டுங்கள். -சுவிஸ் இளையோர் பேரவை" என்ற பதிவு முகநூல் பதிவாளர் இளவரசனின் பக்கத்தில் இன்று காலை இணைக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து கஜனுக்கும் இளவரனுக்கும் இடையில் இடம்பெற்ற வாதங்களை நீங்கள் கீழே படியுங்கள்.......... உங்கள் கருத்துக்களை பதியுங்கள்...........
    கஜன்: Sun Pictures விநியோகிப்பில் தெனாவட்டு, திண்டுக்கல் சாரதி, படிக்காதவன், காதலில் விழுந்தேன், கண்டேன் காதலை திரையிடும்போது வராத மண் பாசம் வேட்டைக்காரனுக்கு மட்டும் வந்ததன் காரணம்..? கேட்டால்..., சிங்களவர் இசையுதவி செய்து இருக்கிறாராம்.. அப்படியெண்டால் இலங்கைத் தமிழன் தினேஸ் பாடியிருக்கிறாரே...?? .. உண்மை இதுதான்..., ஐரோப்பாவின் விநியோக உரிமை ஐங்கரன் கருணாவுக்கும், கனடாவின் உரிமை Elane Cinema அசோகனுக்கும் கிடைத்திருந்தால் மண் பாசம் மரித்துப் போயிருக்கும்.
    இளவரசன்: Kajan, fictions r about Aingeran and other individual story. we have no evidence to prove. so we can't act based on that but we can act on the facts on that hand.. rationalists relay on facts, I am a rationalist and i act on facts.. .. fictions r created by many against many reasons. that is not issue, we must be smarter to make sense out of stories on the hand..
    கஜன்: அண்ணா..! உங்களுடைய கருத்துக்களையும் காரணங்களையும் ஏற்கிறேன். ஆனால் இதை நாம் செய்வதன் முலம் எதுவுமே சாதிக்கமாட்டோம்.. முட்கம்பி சிறைக்குள் வாடும் மக்களுக்கு இதனால் எந்த பலனும் இல்லை. இராஜ் விரரட்ண எனக்கு தெரிந்த பல தமிழர்களுக்கு நல்ல நண்பன். Royal College மாணவன் இலங்கையில் பிரபலமான இசையமைப்பாளர்.. இவரை எதிர்ப்பதன் முலம் இன்னமும் எதிரிகளை சம்பாதிக்கிறோம்..
    இளவரசன்: நட்பு காரணம் இப்போது புரிகின்றது..நன்று.. நட்பு உங்களுக்கு இறந்து போன என் மக்களில் உயிர்கள் எனக்கு.. அவ்வளவுதான்.........
    கஜன்: 1983ல் தேயிலை வியாபாரியாக இருந்த தமிழன் காட்டிக் கொடுத்து எங்கள் உறவினரின் வீடுடைக்க.. அடைக்கலம் தந்து காத்தவர்கள் பக்கத்து வீட்டு சிங்களவர். எல்லா தமிழர்களும் நல்லவர்கள் இல்லை (என்னைப்போல்..?) அதேபோல் எல்லா சிங்கள மக்களும் கெட்டவர்கள் இல்லை.
    இளவரசன்: கெட்டவர்கள் என்று ஒருபோதும் நான் சொல்லவில்லை. ஆனால், சிங்கள இராணுவம் இரத்தக்கரைகள் படிந்தது அதற்கு பாட்டு இசைத்து என் அப்பன் என்றாலும் எதிர்ப்பேன்.. அது தமிழனாக இருந்தாலும்....... இந்த புறக்கணிப்பு மட்டுமல்ல இதர புறக்கணிப்பு போரில் தமிழர் கடினமாக ஈடுபடுவதில்லை. அதுவே நாம் தாழ்ந்து போய்கொன்றிருக்கின்றோம். உணர்வுகளால் நாம் இணைகின்ற நாம் உண்மையான நடவடிக்கைகளில் இறங்குவதில்லை. இன்று நாம் புறக்கணித்துக்காட்டினால் நாளை தமிழ்நாட்டுத் நடிகர்கள் எமக்கெதிராக இயங்கமாட்டார்கள். அவர்களுக்கு பாட்டு புகுத்தல் அவசியமாகின்றது. புறக்கணிப்பு என்பது பல சமுதாயங்களில் பாவனையில் இருந்து வருகின்றது. நாம் தானே..எமக்கு உணர்ச்சியால் கதைச்சி கிழிப்பம் ஆனா கொஞ்சம் யோசித்து சிலவற்றை செய்ய சொன்னால்.. ..... ஓடியொழிவோம்...
    கஜன்: 30 வருட காலத்துக்கு மேலாக எம்மை வீழ்த்த முடியாத சிங்கள இராணுவத்துக்கு .. இப்போது முடிந்ததென்றால் யார் காரணம்? நம்பிக்கைத் துரோகத் தமிழர்களும்தான். அண்ணா..! நாங்கள் இருவருமே கதையே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிற "வேட்டைக்காரன்" திரைப்படத்துக்கு நல்ல விளம்பரம் தேடித்தருகிறோம்......... போதும் இனியும் வேண்டாம்.

    இதே சிங்கள இசையமைப்பாளன் எம் தமிழருக்காக ஒருநாள் குரல் கொடுக்க மாட்டானா என்கிற நப்பாசை, தொட்டதுக்கெல்லாம் புறக்கணித்து உலகமேடையில் தமிழன் மலிந்து போகக் கூடாது என்ற வேட்கை உங்களிடம் வாதிடச் சொன்னது.
    இளவரசன் வேலைப் பளுவில் முகநூலை முட வாதம் இத்துடன் முற்றுப்பெற்றது

    Friday, December 11, 2009

    வேட்டைக்காரன் படத்திற்கான பகிஸ்கரிப்பு ஏன்? நோக்கம் என்ன..??

    தாய்மண்ணை தனியே தவிக்கவிட்டு ஓடிவந்து ஒளித்த நாட்டிலிருந்து பரதேசி எழுதுவது..... ...,
    Sun Pictures விநியோகிப்பில் தெனாவட்டு, திண்டுக்கல் சாரதி, படிக்காதவன், காதலில் விழுந்தேன், கண்டேன் காதலை திரையிடும்போது வராத மண் பாசம் வேட்டைக்காரனுக்கு மட்டும் வந்ததன் காரணம்..? கேட்டால்..., சிங்களவர் இசையுதவி செய்து இருக்கிறாராம்.. அப்படியெண்டால் இலங்கைத் தமிழன் தினேஸ் பாடியிருக்கிறாரே...?? ..
    உண்மை இதுதான்..., ஐரோப்பாவின் விநியோக உரிமை ஐங்கரன் கருணாவுக்கும், கனடாவின் உரிமை Elane Cinema அசோகனுக்கும் கிடைத்திருந்தால் மண் பாசம் மரித்துப் போயிருக்கும்.

    Wednesday, December 9, 2009

    ரொரன்டொ இன்று பனிமழையில் குளித்தது

    ரொரன்டொ மத்தியில் இருந்து விசேட நிருபர் கஜன் கணேசலிங்கம்


    2009ம் ஆண்டுக்கான முதலாவது பனிப்பொழிவை இன்று ரொரன்டொ நகர்வாழ் மக்கள் மகிழ்வோடு வரவேற்றார்கள். "அட நீ உருப்படுவியா..?" என்று இன்று காலையில் வீதியில் வாகனத்தோடு இறங்கியவர்களும், பேருந்துக்காக காத்து நிற்றவர்களும், ரொரன்டொ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் (Toronto Pearson International Airport) பயண தாமதத்தால் பரிதவித்தவர்களும் திட்டித் தீர்ப்பது எனக்கு கேட்கிறது. இருந்தாலும், "இந்தமுறை வெள்ளைக் கிறிஸ்த்துமஸ் (White Christmas) இல்லாமல் போய்விடுமோ..?" என ஏங்கித் தவித்த உள்ளங்களுக்கு நல்ல மகிழ்ச்சி கிடைத்துள்ளது. ஒன்ராறியோ மாநிலத்தை மையம் கொண்டிருந்த இந்த பனிப் புயல் ரொரன்டொவிலும் கண் வைத்திருந்தது. சுமார் 5cm முதல் 15cm வரையுலுமான பனிப்பொழிவு சிறு நகரங்களுக்கு நகரம் மாறுபட்டு இருந்தது.

    இந்த பதிவு இணையத்தில் ஏற்றும்போது ரொரன்டொ எதிர்கொண்ட பனிப்புயல் எச்சரிக்கை முடிவுக்கு வந்திருப்பதாகவும் தொடரும் நாட்களில் சுமார் 1cm வரையிலான பனிப் பொழிவை எதிர் பார்க்கலாம் என் செய்திச் சேவைகள் அறியத் தந்தாலும்..., இன்றைய பனிப்பொழிவால் இன்று காலையில் வழமைக்கு மாறாக பல மடங்கு நீண்ட பயண நேரத்தை செலவிட வேண்டி இருந்ததாக முகநூல் (facebook) பதிவாளர் இளவரசன் குமார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 200க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் இதுவரை தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாநிலப் பொலிசார் (O.P.P) அறிவித்துள்ள நிலையில் 90 வீதமான பாடசாலை பேருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது. ஆனாலும் பாடசாலைக்கான மாணவர் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டதாக செய்திகள் இல்லை. ரொரன்டொ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் (Toronto Pearson International Airport) சுமார் 160க்கும் மேலான விமான சேவைகளில் நேர தாமதம் ஏற்பட்டதாக அங்கு பேசவல்ல அதிகாரி எமக்கு தெரிவித்துள்ளார். விமான சேவைகளில் ஏற்பட்ட நேர தாமதத்தால் அங்கு பணிபுரிபவர்களின் வேலை நேரம் நீடிக்கப்பட்டிருந்ததாகவும் நிறைந்த வேலைப் பளு ஏற்பட்டதாகவும் அங்குள்ள நிறுவனமொன்றில் முகாமையாளராக பணியாற்றும் ஒருவர் எமது நிருபருக்கு பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.

    Tuesday, December 8, 2009

    பக்தர்களே.... பதில் சொல்லுங்கள்...!!!

    காமக் கொடூரன் காஞ்சிபுரம் பார்ப்பன அர்ச்சகரும் - காப்பாற்றாத கடவுளும்
    ( நன்றி - தமிழ் ஓவியா )
    ஆற்றில் தண்ணீர் குடிக்கச் சென்றது ஒரு யானை, அது தண்ணீர் பருகிக் கொண்டிருக்கும்போது தண்ணீருக்கடியிலிருந்த முதலை ஒன்று யானையின் காலைப் பற்றித் தண்ணீருக்குள் இழுத்தது. யானை வலி தாளாமல் கதறியது. முதலை வாயிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கடவுள் பெயரைச் சொல்லிச் சொல்லி கதறியழுதது. அந்த யானையின் கூக்குரல் கேட்டு கடவுள் அந்த இடத்தில் பிரசன்னமானார். யானையை முதலை வாயிலிருந்து மீட்டுக் காப்பாற்றினார்.
    என்பது ஒரு கதை!

    மிருகண்டு முனிவருக்கு பல வருடங்களாகப் புத்திரபாக்கியம் இல்லை. தனக்கு ஒரு மகன் பிறக்கவேண்டும் என்று வேண்டி அவர் போகாத ஊர் இல்லை; பிரார்த்திக்காத கடவுள் இல்லை. ஒருநாள் கடவுள் மிருகண்டு முனிவர் கனவில் தோன்றினார். உனக்கு நீண்டகாலம் வாழக்கூடிய மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரையில் மட்டுமே வாழக்கூடிய நற்குணங்கள் படைத்த மகன் வேண்டுமா? - என்று கேட்டார். மிருகண்டு முனிவர் 16 வயது வரையில் வாழும் நல்ல குழந்தை கொடுத்தால்போதும் என்று வரம் கேட்கிறார். மிருகண்டு முனிவருக்கு ஓர் அழகான குழந்தை பிறக்கிறான்; அவனைப் பாலூட்டிச் சீராட்டி பாசத்தோடு வளர்க்கிறார். மார்க்கண்டேயன் என்பது அவனது பெயர். அவனுக்கு 16 வயது நிறையப் போகிறது. 16 வயது நிறைவு நாளன்று மரணத்துக்குக் கடவுளான எமதர்மனின் தூதர்களான யமகிங்கரர்கள் அவனது உயிரை எடுக்க வருகிறார்கள். அவன் கோவிலுக்குள் ஓடிப்போய் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு பகவானே காப்பாற்று என்று கதறுகிறான். யமகிங்கரர்களோ பாசக் கயிற்றை வீசுகிறார்கள். சிவலிங்கத்தையும் சேர்த்துப் பாசக் கயிற்றால் இழுக்கிறார்கள். அப்போது அங்கே சிவபெருமான் தோன்றி யமனுக்கு சாபம் கொடுத்துவிட்டு மார்க்கண்டேயனைக் காப்பாற்றுகிறார். அது மட்டுமல்ல, அவனுக்கு எப்போதும் 16 வயதுதான் என்று வரமும் தருகிறார்.
    இதுவும் ஒரு கதைதான்!
    மயிலாப்பூரில் ஒரு சிவபக்தர். அவருக்கு ஒரு மகள். பூம்பாவை என்று பெயர். அவளைத் திருஞான சம்பந்தருக்குத்தான் திருமணம் முடிப்பது என்று சபதமிட்டுக் கொள்கிறார் அந்த சிவபக்தர். ஒருநாள் அந்தப் பெண் இறந்து போய்விடுகிறாள். மனமுடைந்த சிவபக்தர் அந்தப் பெண்ணின் உடலை எரித்து சாம்பலை சேகரித்து ஒரு செம்பில் வைத்து பத்திரமாக மூடிவைக்கிறார். சில காலம் கழித்து மயிலாப்பூருக்கு திருஞான சம்பந்தரே வருகிறார். அவரைத் தனது இல்லத்திற்கு அழைத்து வந்து அவர் முன் சாம்பலடங்கிய செம்பை முன் வைத்து கண்ணீர் மல்க உங்களுக்குத் திருமணம் செய்து தரவேண்டும் என்ற ஆசையோடு வளர்த்து வந்தேன் என்று கம்மிய குரலில் கூறுகிறார். திருஞான சம்பந்தர் கவலைப்பட வேண்டாம்; உங்கள் பெண்ணை நான் உயிர்ப்பித்துத் தருகிறேன் என்று கூறிவிட்டு "மட்டிட்ட புன்னைக் கான... மடமயிலைகட்டிட்டம் கொண்டான்... கபாலீச்சுரம் அமர்ந்தான்..." என்ற பதிகத்தைப் பாடினார். என்ன ஆச்சரியம் அந்தப் பெண் உயிரோடு எழுந்துவிட்டாள்!
    இதுவும் ஒரு கதைதான்!
    திருநாவுக்கரசர் என்னும் அப்பரடிகளுக்கு ஒரு வெறி பிடித்த பக்தர் பெயர் அப்பூதியடிகள். தனது பிள்ளைகளுக்கெல்லாம் அப்பர் சுவாமிகளின் பெயரையே சூட்டியிருந்தார்! ஒருநாள் அப்பர் அவரது வீட்டிற்கு எழுந்தருளினார். அவருக்கு விருந்து படைக்க அப்பூதியடிகள் அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவரது மகன் தலைவாழை இலை பறித்து வரக் கொல்லைப்புறம் சென்றான். அவன் இலை அறுத்துக் கொண்டிருந்தபோது ஒரு பாம்பு அவனைத் தீண்ட அங்கேயே விழுந்து இறந்துவிட்டான். தகவலறிந்த அப்பூதியடிகள் பதறிப் போனார். எனினும் மகன் இறந்த செய்தியை வெளியிட்டால் அப்பர் தன் இல்லத்தில் விருந்துண்ணும் பாக்கியம் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமே என்று நினைத்து மகன் இறந்த செய்தியையே மறைத்துவிட்டு விருந்து படைக்க முன்வந்தார். அப்பர் கேட்டார் உன்னுடைய இன்னொரு மகன் எங்கே? என்று! அவரது காலடியில் வீழ்ந்து கதறி நடந்தவற்றைச் சொல்லி மன்னிப்புக் கோரினார் அப்பூதியடிகள்.
    அப்பர் சுவாமிகள் அவரது பக்தியை மெச்சினார். ஒரு பாடலைப் பாடினார்; பாம்பு கடித்து இறந்த மகன் உயிர் பிழைத்து எழுந்து வந்தான்!
    இதுவும் ஒரு கதைதான்!
    திருச்செங்காட்டாங்குடி என்று ஒரு ஊர். அந்த ஊரிலே ஒரு சிவனடியார். சிறுத்தொண்டர் என்று பெயர். அவர் சிவபக்தர்தான். அவரை அணுகி என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கேட்டதைக் கொடுக்கக்கூடியவர். அவரது இல்லத்துக்கு ஒரு சிவனடியார் வந்தார். வழக்கம் போல் சிறுத்தொண்டர் என்ன வேண்டுமென்று கேட்டார். ‘‘உன் மகனை வெட்டிக் கறி சமைத்து எனக்கு விருந்து வை’’ என்று கேட்டார் சிவனடியார். சிறிதும் தயக்கமின்றி சிறுத்தொண்டர் தனது மகனை வெட்டி பிள்ளைக்கறி சமைத்து சிவனடியாருக்கு விருந்து படைக்க முன் வந்தார். பிள்ளைக் கறி கேட்ட அந்த சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான், சிறுத்தொண்டர் முன் தோன்றி பக்தா உன் பக்திக்கு மெச்சினேன் என்று பாராட்டி கறி சமைக்கப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தார்.
    இதுவும் ஒருகதைதான்!

    திருவாரூரில் மனுநீதிச் சோழன் தனது அரண்மனை வாயிலில் ஓர் ஆராய்ச்சி மணியைக் கட்டித் தொங்கவிட்டிருந்தான். பொதுமக்களுக்கு ஏதாவது குறை என்றால் அந்த மணியை அடித்தால் மன்னனே நேரில் வந்து குறை கேட்டு கோரிக்கையை நிறை வேற்றி வைப்பான்! ஒருநாள் ஆராய்ச்சி மணி ஒலித்தது. மன்னன் வெளியே வந்து பார்த்தபோது மணியின் கயிற்றை தன் வாயால் கவ்வி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது ஒரு பசு மாடு. அதன் கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று சுரந்து கொண்டே இருந்தது. மந்திரியை அழைத்த மன்னன், ‘‘இந்தப் பசுவுக்கு என்ன குறை?’’ என்று கேட்டான். ‘‘மன்னா, இந்தப் பசுவின் கன்று மீது நமது இளவரசர் தேரேற்றிக் கொன்றுவிட்டார்’’ என்று காரணம் சொன்னார் அமைச்சர். அப்படியா? கன்றை இழந்து தவிக்கிறது இந்தப் பசு; இது போலவே கன்றின் மேல் தேரை ஏற்றிக் கொன்ற எனது மகனை இளவரசனை நடுவீதியில் கிடத்தி தேரை ஏற்றிக் கொன்று விடு என்று கட்டளையிட்டான் மனுநீதிச் சோழன். இளவரசனைத் தெருவில் கிடத்தி தேர் ஏற்றி நீதி வழங்கப்பட்டபோது தியாகேசப் பெருமான் தோன்றி கன்றுக் குட்டிக்கும் இளவரசனுக்கும் உயிர் கொடுத்து அருள் பாலித்தார்!
    இதுவும் ஒரு கதைதான்!
    இதோ..! இன்னொரு கதை அல்ல ...நடந்த உண்மை நிகழ்வு.
    காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருந்த தேவனாதக் குருக்கள், கோவிலுக்குள் சாமி சிலையின் பின்புறம் பல பெண்களை அழைத்துச் சென்றுஅந்த மறைவிடத்தில் மன்மத லீலைகள் நடத்தி வந்தார். இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
    தேவநாதக் குருக்களின் காமவலையில் சிக்கி வாழ்வை இழந்த எத்தனையோ பெண்களில் ஒரு பெண்போலீசாரிடம் தந்த வாக்குமூலம்:- "நான் காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள மச்சேஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றேன். அப்போது அர்ச்சகர் தேவநாதன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். சாமிக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டிய பிறகு திடீரென அவர் நாக்கை நீட்டு என்றார். உடனே அவர் நாக்கில் ஏதோ மருந்தை லேசாக தடவினார். அதை தடவிய சிறிது நேரத்தில் நான் அரை மயக்கத்திற்கு தள்ளப்பட்டேன். அப்போது கருவறையில் என்னுடன் உறவு கொள்ள விரும்புவதாக கூறினார். நான் மறுத்தேன். அதையும் மீறி எனது சம்மதம் இல்லாமல் என்னுடன் உறவு கொண்டார். மேலும் அந்த காட்சியை அவருடையசெல்போனில் படம் பிடித்தார். பிறகு அடிக்கடி எனக்கு போன் செய்து, செல்போனில் உனது படம் உள்ளதென மிரட்டி பலமுறை கோவில் கருவறையிலும், வீட்டிலும் என்னுடன் உறவு கொண்டார். இப்போது நான் உண்மையை சொல்ல வேண்டிய மனநிலையில் வந்துள்ளேன்." இவ்வாறு அந்த பெண் வாக்கு மூலத்தில் கூறி இருக்கிறார்.
    யானையைக் காப்பாற்றிய கடவுள்; கறி சமைக்கப்பட்ட பாலகனை உயிர்ப்பித்துத் தந்த கடவுள்; தேர் ஏறிக் கொலையுண்ட கன்றையும், இளவரசனையும் காப்பாற்றிய கடவுள்; தான் குடிகொண்டுள்ள கோவிலில் தன் பின்பக்கமே வாழ்விழந்த பெண்களை காமக் கொடூரனின் மிருக இச்சையிலிருந்து காப்பாற்றாமல் சும்மா இருந்து விட்டாரே... ஏன்..????

    Monday, December 7, 2009

    முகநூல் - FACEBOOK

    Facebook எவ்வாறு தோன்றியது?
    Mark Zuckerberg என்ற ஹவார்ட் (Haward) பல்கலைக் கழக மாணவரால் பொழுதுபோக்காக 2004ம் ஆண்டு ஆரம்பத்தில் thefacebook.com என்ற பெயரில், இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. தனது பல்கலைக்கழக நண்பர்களுடன் இணையத்தளம் வாயிலாக தொடர்பை வைத்துக்கொள்ளவே இந்த இணையத்தளத்தை மார்க் ஆரம்பித்தார். பின்னர் இந்த இணையத்தளத்தில் ஹவார்ட் பல்கலைக்கழகம் மட்டுமின்றி வேறுபல பல்கலைக்கழக மாணவர்களும் பங்குபற்றும் வசதி செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. அதுவரை thefacebook.com என்றிருந்த இணையத்தளம் ஓகஸ்ட் 2005இல், facebook.com என்ற இணையப் பெயரை(Domain) $200,000 கொடுத்து வாங்கியதன் பின் பொதுவாக Facebook என்று அழைக்கப்படத் தொடங்கியது. 2006ம் ஆண்டு செப்ரெம்பர் முதல் 13வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்குபற்றும் ஒரு இணையத் தளமாக மாறியது.
    2007 ஆண்டில் Facebook Inc. நிறுவனத்தின் 1.6% பங்குகளை மைக்ரோசொப்ட் நிறுவனம் க$246 மில்லியன் கொடுத்து வாங்கிக்கொண்டது. தொடர்ந்து Facebook Incஐ முழுவதுமாக வாங்கிக் கொள்ள பல பெரும் நிறுவனங்கள் போட்டி போட்டன. Google, Yahoo போன்ற நிறுவனங்கள் பெரும் தொகையை தருவதாக கூறினாலும் Mark Zuckerberg; facebook.com விற்பனைக்கில்லை என்று கூறிவிட்டார்.
    எவ்வாறு Facebook பணம் சம்பாதிக்கிறது?
    முக்கியமாக Facebookஇல் வரும் விளம்பரங்கள் மூலமாகவே வருமானம் பெறப்படுகிறது.
    என்ன வசதிகள் இருக்கின்றன?
    செய்திகள், புகைப் படங்கள், வீடியோக்கள், மற்றைய நண்பர்கள் அளித்த தகவல்களுக்கான உங்கள் கருத்துக்கள், Instant Chat என்று வசதிகள் வளர்ந்துகொண்டே போகின்றன. இவற்றை உங்கள் கைத்தொலை பேசியில் இருந்தே இணயத்தில் பதிவு செய்தும் கொள்ளலாம்.
    எத்தனை அங்கத்தவர்கள்?
    இன்றைய கணக்குப்படி Facebook இணையத்தளத்தில் 321 மில்லியன் அங்கத்தவர் கள் இருக்கிறார்களாம். (கனடாவின் சனத்தொகை 33 மில்லியன், இலங்கையின் சனத்தொகை 20 மில்லியன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்) குறைந்தது 10 மில்லியன் பேர் ஒரு நாளைக்கு Log In செய்து கொள்கிறார்கள்.
    தமிழிலும் Facebook
    Facebook இணையத்தின் சேவையை முழுவதுமாக தமிழிலேயே நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். பாவனை மொழி என்ற பகுதியல் தமிழைத் தேர்வுசெய்வதன் மூலம் தமிழில் இந்த சேவையைப் பெறலாம்.
    Facebook சில தகவல்கள்
    Facebookஇன் அரைவாசி பாவனையாளர்கள் 18க்கும் 34க்கும் இடைப்பட்ட வயதினர்.
    Facebook பாவனையில் வேகமாக வளர்ந்துவரும் நாடுகள்: தாய்வான், கானா, இந்தோனேஷியா.
    அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் அடுத்தபடியாக துருக்கி அதிக Facebook பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.
    வெனிசூலாவின் மக்கள் தொகையில் 63.27வீதமானோர் Facebook பாவனையாளர்கள்.
    சிரியா Facebook பாவனையைத் தடைசெய்திருக்கும் நாடு.

    கவனம்! நலம்தரும் FACEBOOK, உங்கள் வாழ்வையும் நாசமாக்கலாம்.

    நன்றி ஜிப்றி -கனடா

    முன்னைய காலத்தில் ஒரு தனிப்பட்ட நபரைப் பற்றி அறிய விரும்பினால் அவர் வாழும் கிராமத்தில் அல்லது அவருடைய வீதியில் வாழும் ஒருவரிடமோ அல்லது அவரது அயலவரிடமோ அல்லது அந்த நபரின் நெருகிய உறவினரிடமோ தொடர்புகொண்டால் தவிர அவரை பற்றிய தகவல்களை அறிவது மிகவும் கடினம். தபால் தொலைத்தொடர்பு முறை அறிமுகமானபோது காகிதப் போக்குவரத்தை பாவித்து ஒரு நபர் பற்றிய தகவல்களை பெற்ற பின்பு அந்த நபர் தொடர்பான தகவல்களை உறுதி செய்து கொண்டார்கள். பின்னர் தொலைபேசி மற்றும் தொலைநகல் தொழில்நுட்பம் அறிமுகமானபோது, விரைவாக தவல்களை சேகரித்தவரிடம் இருந்து அறிந்துகொள்ளமுடிந்தது.
    ஆனால் இன்று Social Network என்ற கூறப்படும் சமூக வலையமைப்புக்கள் மூலம் ஒருவரைப்பற்றி அறிவதும், தொடர்பாடலும் புதியதொரு பரிணாமத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு facebook.com, linkedin.com, twitter.com, tegged.com என்று பல இணையப் பகுதிகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த சமூகவலையமைப்புமுறை தொடர்பாடலை இலகுவாக்கியிருந்தாலும், பல கோணங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியதும் அவசியமாகிறது.
    உங்கள் பிள்ளைக்கு இணையத்தளத்தில் ஆர்வம் இருந்து விட்டாலே போதும்; அவரே அவரைப்பற்றி விலாவாரியாகதான் வாழும் இடம், தொலைபேசி இலக்கம், தன்னுடைய புகைப்படம் என்று எல்லாவற்றையுமே இணையத்தில் யாரையும் கேட்காமலேயே பதிவு செய்திருப்பார். இவையெல்லாம் அவர் அவரை அறியாமலேயே அவரிடமிருந்து வெளிவரும் வகையிலேயே இந்தத்தளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின் படி சமூக இணையவலையத்தில் (Social Network) இணைந்து கொள்பவர்களில் சிறுவர்களின் Under 13 Years பங்குகொள்ளுதல் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. Facebook, Myspace போன்ற இணைய அமைப்புக்களில் இணைவதற்கு ஆகக்குறைந்தது 13 வயது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இணையத்தில் இணைந்து கொள்பவர்களின் உண்மையான வயதை உறுதிப் படுத்திக்கொள்வது கடினமாக உள்ளது. இவ்வாறு குழந்தைகள் இந்த வகையான சமூக இணையத்தளங்களில் இணைவதால் அவர்களின் குடும்பத்துடனான உறவுமுறை, மூளைவளர்ச்சி ஆகியன பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இன்று கைத்தொலைபேசிகளில் இருந்து நேரடியாகவே Facebook போன்ற இணையதளங்களுக்கு புகைப்படங்களை பதிவேற்றம் செய்யக்கூடிய வசதிகள் வந்துவிட்டன.

    குளியல் அறைக்குள் இருந்தவாறே, தாம் செய்வதன் பாரதூரம் புரியாத இளம்வயதினர் தமது அந்தரங்க படங்களையும் கண் இமைக்கும் நேரத்தில் இணையத்தில் பதிவு செய்து விடுகிறார்கள். இந்த படங்களை வைத்துக்கொண்டு அந்த நிமிடத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை இந்த சிறுவர்கள் அறிந்திராதிருப்பது மட்டுமில்லாமல் சிந்திப்பது கூட இல்லை. இணையதளத்தில் ஒரு செய்தியோ, புகைப்படமோ பதியப்பட்டவுடன் வேறு ஆயிரக்கணக்கான பக்கங்களில் ‘உடனடியாக’ பிரதி செயப்பட்டுவிடும். பின்னர் நீங்கள் உங்கள் இணையப்பக்கத்தில் இருந்து அவற்றை அழித்தாலும், பிரதி செயப்பட்ட பக்கங்களில் இருந்து அழிக்கவே முடியாது. அண்மையில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இளம் பெண்ணின் தந்தை இந்த இணையவலையமைப்பில் சிக்கிக்கொண்ட தன் மகளுக்கு உதவமுடியாமல், தற்கொலை செய்து விடலாமா என்ற நிலைக்கு தலைப்பட்டார். அந்த இளம் பெண் தான் செய்த தவறை உணர்ந்தாலும், அது காலம் பிந்தியதாக இருந்தது. கதை இது தான், பாடசாலையில் ஏற்பட்ட நட்பு காரணமாக ஒரு நண்பனுடன் Facebook Accountஐ அந்தப்பெண் பகிர்ந்துகொண்டார். தங்கள் உறுதியான நட்பின் அடையாளமாக இருவரும் பல புகைப்படங்களை Facebookஇல் வெளியிட்டுக்கொண்டார்கள். ஒரு சிறிய காரணத்தினால் இவர்களுடைய நட்பில் பிளவேற்பட்டது. நண்பியைப் பழிவாங்க முடிவுசெய்த அந்த நண்பன், தன்னுடைய நண்பியின் Facebook Account இன் Passwordஐ மாற்றிவிட்டான். மேலும் அந்த பெண் தன்னைப்பற்றி தானே எழுதுவது போன்று பலவிடயங்களை கீழ்த்தரமாக எழுதியதுடன், வெளிவிடக் கூடாத பல அந்தரங்க படங்களயும் அந்த பெண்ணின் இணையப் பக்கத்தில் வெளியிட்டு தன் பழி உணர்வைத் தீர்க்கத் தொடங்கினான். அந்தப் பெண்ணோ, தன்னுடைய Facebook Accountஇன் புதிய Password இல்லாததால் ஒன்றுமே செயமுடியாமல் நிர்க்கதியானாள்.

    பொதுவாக இந்த இணைய சேவைகள் இலவசமானவை என்பதால், உங்கள் தொலைந்த Passwordகளை மீளவும் எடுத்து தர உதவக்கூடிய நேரடி தொடர்பு இலக்கங்களோ வசதிகளோ இருப்பதில்லை. நீங்கள் ஒரு Accountஐ திறக்கும் போது அதனுடன் சம்பந்தமான Password Recovery போன்ற வசதிகளை பாதுகாப்பாக, முன்னேற்பாடாக செய்து கொள்ளவேண்டும். அவற்றையும் தொலைத்தால் “அரோகரா!” தான். பல்வேறு முறைகளால் தேடி, மீளவும் Passwordஐ கண்டுபிடிக்கும் போது காலம் கடந்துவிட்டிருக்கும்

    திருமணம் செய்ய இருப்பவர்கள் ஒருவர் ஒருவரைப்பற்றி அறிந்துகொள்ளவும், நிறுவனங்கள் தாம் பணிக்கு அமர்த்தவிருப்பவர்கள் பற்றி அறிவதற்கும், காவல்துறையினரின் புலனாய்வுகளுக்கும் கூட இந்த Social Networkகளில் கிடைக்கும் தகவல்கள் மிக மிக உதவியாக இருக்கின்றன. இந்த வகையில் பல முக்கியமான முடிவுகளுக்கு இந்த இணையத் தளங்களில் கிடைக்கும் தகவல்களே ஆதாரமாக அமைந்து விடுகின்றன. இதிலிருந்து இந்தவகை இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் தகவல்களில் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.

    கனடாவில், 29 வயதுடைய நட்டாலி ப்லஞ்சார்ட் என்ற பெண்மணி தனது மன அழுத்தத்தை காரணம்கூறி, அவர் பணிபுரிந்த IBM நிறுவனத்தில் இருந்து 2008ஆம் ஆண்டுமுதல் நீண்டநாள் விடுப்பு எடுத்து, அதற்குரிய மாதாந்தக் கொடுப்பனவை வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொண்டிருந்தார். இந்த பணத்தை அனுப்பிக்கொண்டிருந்த Manulife காப்புறுதி நிறுவனம், பணம் அனுப்புவதனை திடீரென நிறுத்திக்கொண்டது. ‘இது அநியாயம்’ என்று காப்புறுதி நிறுவனத்தை நட்டாலி தொடர்புகொண்டார். காப்புறுதி நிறவனம், நட்டாலி தனது Facebook பக்கத்தில் பதிவுசெய்திருந்த, அவருடைய பிறந்தநாள், விடுமுறைப் புகைப்படங்களில் அவர் மகிழ்வாக வாழ்வதனைச் சுட்டிக்காட்டியது. நீங்கள் பணிக்குப்போகக் கூடிய மகிழ்வான மனநிலையில் இருப்பதால் உங்களுக்கு கொடுப்பனவு இல்லை என்று Manulife காப்புறுதி நிறுவனம் கூறிவிட்டது. Facebookஇல் தான் பதிவேற்றிய புகைப்படங்களால் நட்டாலி நொந்துபோயிருக்கிறார்.


    Facebook போன்ற சமூகவலையமைப்புகள் இளம் பருவத்தினரிடம் தான் பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றது என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். கணிணித் துறையில் இருப்பவர்கள் Facebook போதை ஃ பித்து பிடித்து அலைகிறார்கள். இதனால் அதிகமான கணினி மயப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் Facebook போன்ற தளங்களைப் பாவிப்பது தடைசெயப்பட்டுள்ளது. அடிக்கொரு தடவை தமது இணையப் பக்கத்தை பார்க்காவிட்டால் ‘மூச்சு விட முடியாத” அவஸ்த்தைப் படுபவர்களையும் சந்த்தித்துளேன்.

    பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளிகளுக்கு இந்த Social Networkகள், அவர்களின் ஆபாச வெறிகளை அப்பாவி இளம் பருவத்தினர் மீது திணிப்பதற்கு ஒரு முகத்திரையாகவே உதவுகின்றன. பெரும்பாலும் இவர்கள் தமது இளவயதுப் படங்களையும், பொய்யான வயதினையும் தங்களின் Facebook இணைய அடையாளமாக காட்டிக்கொள்வார்கள். தமது சாமர்த்தியமான உரையாடல்கள் மூலம்இ வெள்ளை மனம் கொண்ட அப்பாவி இளம் பெண்களையும், ஆண்களையும் வீட்டை விட்டு வெளியேறி (ஓடி) தம்முடன் வரும்படி செய்துவிடுகிறார்கள். சிலவேளைகளில் முகமே தெரியாத இந்த தொடர்புகள் கொலை, பாலியல் வல்லுறவு, பழிவாங்கல், ஆட்கடத்தல் என்று எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன.

    அண்மையில் ஒரு பெண்ணின் தாய் தன் மகளின் தோழி தன் மகளை விட நன்றாக படிக்கின்றார் என்ற ஆதங்கத்தில் தன்னை ஒரு ஆணாக Facebookஇல் அறிமுகப்படுத்தி, அந்த கெட்டிக்கார பெண்ணை தனக்கு காதலியாக வசியம் செய்தார். இதையறியாத அப்பாவிப்பெண்ணும் இந்த மாயக் காதல் வலையில் வீழ்ந்துவிட்டார். பின்னர் சரியான சந்தர்ப்பம் வந்ததும், அந்தப்பெண்ணின் மனம் மிகவும் புண் படும்படியாக வார்த்தைகளை கொட்டி, அவரிடம் இருந்து விலகுவதாகக் கூறி நாடகமாடியிருக்கிறார். அந்த மனங்குழம்பிய இளம் பெண், தன் பெற்றோரிடம் தன மனநிலையைப் பற்றிக்கூறிய போதும் அவர்கள் கண்டுகொள்ளாததால், ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டாள். இணையத் தொடர்பாடல்கள், குற்ற, வன்முறைகள் பற்றி சரியான, தெளிவான சட்ட முறை இன்னமும் இல்லாத நிலையில் அந்த குற்றமிழைத்த பெண் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விட்டார்.

    “ஐயோ, ஐயோ.. ஐயோ... இவ்வளவு கொடுமையான சம்பவங்களை ஏற்படுத்தும் இந்த சமூக இணையத்தளங்களை ஏன் இணையத்தில் வைத்திருக்கிறார்கள்?” என்று நீங்கள் தலையில் அடித்துக் கொள்ளலாம். இணையம் என்பது ஒரு பெரிய நூலகம் போன்றது. அங்கு நாம் எதைத் தேடுகின்றோம், எப்படி நமது நேரத்தை செலவு செய்கின்றோம் என்பது முக்கிமானது. அதுமட்டுமன்றி நாம் நம் குழந்தைகளை நூலகத்திற்கு கூட்டிச்சென்று, அவர்கள் பின்னாலேயே எந்தப் பகுதிக்குப் போகவேண்டும், எந்தப் புத்தகத்தை வசித்தால் நல்லது, அந்த நூலகத்தில் நடக்கும் வேறு நிகழ்ச்சிகளில் எது நல்லது, எது தேவையற்றது என்று அறிவுறுத்துகிறோமல்லவா? அதுபோலவே இணையத்தையும், இந்த வகையான சமூக இணையத்தளங்களையும் பாவிக்கும் போதும் வழிகாட்டி அழைத்துச்செல்ல வேண்டும்.

    இப்படிப்பட்ட அனர்த்தங்களில் இருந்து உங்களை எப்படி பாதுகாத்து கொள்ளலாம்..?

    இப்படிப்பட்ட இணையதளங்களில் நீங்கள் எழுதும் கருத்துக்களும், பதிவேற்றும் புகைப்படங்களும் காற்றில் விட்ட வார்த்தைகள் போன்றவை. அவற்றைப் பதிவுசெய்த பின் அவை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதை முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

    உங்கள் User name / password போன்றவை உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாகவும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத, ஏழு எழுத்துகளுக்கு குறையாததாகவும், இலக்கங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருப்பது நல்லது. Password Recovery Option பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.

    பெற்றோர் தம் குழந்தைகளுடைய இணையத்தள பதிவுகளைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல் அவர்களுடைய நண்பர்களுடைய இணையப் பதிவுகளையும் கண்காணிப்பதன் மூலம் நண்பர்களைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள முடியும்.

    பிள்ளைகளின் Username / Password போன்றவற்றை நீங்களும் வாங்கி வைத்திருந்து, சிலதடவைகள் அவை வேலை செய்கின்றதா என்பதனை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

    உங்களைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை, உங்கள் தனிப்பட்ட அடையாளத்துக்கும், பாதுகாப்புக்கானதுமே என்ற எண்ணத்தை வலுவாக மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

    சரி, இந்த Social Network இணையத்தளங்களால் நன்மைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்? நிச்சயமாக உண்டு. சரியான முறையில் பாவிக்கும்போது இவை நமக்கு நன்மை பயக்கும் தொடர்பூடகமாவே மாறிவிடுகின்றன. இதை யாருடைய கையில் ஒரு கூரிய கத்தி இருக்கின்றது என்பதுடன் ஒப்பிடலாம். ஒரு வைத்தியரிடமா? அல்லது ஒரு கொலைகாரனிடமா? கத்தி ஒரு உயிரற்ற சடம். அது இருக்கும் கையைப்பொறுத்து ஒரு உயிரைக் காப்பாற்றும் அல்லது குடிக்கும்.

    கடந்த முறை நடந்த அமரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் முக்கிய வேட்பாளராகக் கருதப்பட்டவர் ரூடி கூலியானி. முன்னாள் நியூயோர்க் மாகாண மேயர். செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர். இரட்டைக்கோபுர தாக்குதல் சம்பவத்தை கூலியானி கையாண்ட விதம் அவருக்கு மேலும் செல்வாக்கை அதிகரித்திருந்தது. பராக் ஓபாமாவை எதிர்கொள்ள சரியான தலைவராக அவர் கருதப்பட்டார்.

    அவருடைய 17 வயது மகள் கரோலின் தான் ஒரு ஒபாமாவின் ஆதரவாளர் என்றும் 'One million strong for Barack' என்ற குழுவில் அங்கத்துவம் வைத்திருப்பதாகவும் தனது Facebook பக்கத்தில் எழுதிவைத்தார். ஸ்லேற் (www.slate.com) எனும் இணைய சஞ்சிகை இதை வெளிவிட்டதும் பூதம் கிளம்பியது. உடனடியாக கரோலின் அந்தப் பதிவை அழித்தபோதும் அவரது பக்கத்தை அச்சு அசலாக பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. தனது மகளின் ஆதரவையே பெற முடியாதவர் அனைத்து மக்களின் ஆதரவை எவ்வாறு பெறப்போகிறார் என்று விமர்சனம் எழுந்தது. செல்வாக்கு சரிந்தது. வேறுபல காரணிகளும் தொற்றிக்கொள்ளஇ இறுதியாக கூலியானி குடியரசுக்கட்சியின் அதிபருக்கான வேட்பாளர் தேர்தலிலிருந்து விலகிக்கொண்டார்.


    அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வெற்றிக்கு இந்த Social Networkகுகள் பெரும் உதவியாக இருந்தன. ஒபாமா இளைஞர்களை ஒன்றுகூட்டவும், உடனுக்குடன் செய்திகளை வெளிவிடவும், போட்டியாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மிகவேகமாகப் பதிலளிக்கவும் இவ்வகையான சமூகவலையமைப்புகளை மிகலாவகமாகப் பாவித்தார். ஹிலரி கிளின்டனைவிடவும் ஒபாமா சமூகவலையமைப்புகளைப் பாவித்தமை அதிகமாக இருந்தது. ஒபாமா தனது அறிமுக உரையைக் கூட இணையத்தினூடகவே நிகழ்த்தி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். இன்றைய நவீன உலகில் இருக்கும் எல்லா முக்கியஸ்தர்களும் தங்களுக்கு என்று ஒரு இனையத்தளம் வைத்திருப்பது மட்டுன்றி Facebook போன்ற சமூகவலையமைப்புகளிலும் அங்கத்தவராக இருந்து தம்முடைய அறிக்கைகளையும், திட்டங்களையும், செயற்பாடுகளையும் மிக எளிதாகவும், விரைவாகவும் வெளிக்கொண்டுவருகிறார்கள். நம்முடைய சூர்யா, கமல்ஹாசன் முதல் ஜிம்கரி, மடோனா என்று எல்லோரும் இதில் அடங்குவார்கள்.

    பல சமுதாய புரட்சிகளுக்கும் இந்த சமூகவலையமைப்புகள் காரணமாக இருக்கின்றன. வீதியோர, அரசியல் எதிர்ப்பு, இயற்கை நலம்காக்கும் போராட்டங்கள், உடல் நலம் காக்கும் சங்கங்கள், இயற்கை வைத்திய முறை, கணினி வல்லுனர்கள் கருத்து மையம், சிறுவர் பராமரிப்பு முறை குழுமம், வைத்தியர்கள் மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் என்று ஏராளமான, வலுவான குழுமங்கள் சமுதாயப் புரட்சியை ஏற்படுத்துகின்றன. இதன் மூலமாக சிறந்த வேலை வாய்ப்புக்களையும், புதிய உத்திகளையும், நல்ல தொழில் நிறுவனங்களையும் பலர் ஆரம்பிக்கிறார்கள்.

    ரூம் போட்டு சிந்திப்போர் சங்கம், வேலைக்கே போகாத கணவன்மார்கள் சங்கம், பழைய சோற்றை பிசைந்த படியே யோசிப்போர் சங்கம் என்று ரொம்ப அசத்தலான குழுமங்களும் உண்டு. இணையத் தளத்தினூடாக விளம்பரம் செய்ய விரும்பும் அல்லது வியாபாரம் செய்யும் அத்தனை நிறுவனங்களும் இந்த சமூகவலையமைப்புகளை (பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகளை விட) மிக அதிகமாக விரும்புகின்றன.

    என்னுடைய 99வீதமான பாடசாலை மற்றும் பால்ய நண்பர்கள் பல்வேறு துறைகளிலும், பல ஊர்களிலும் இருக்கிறார்கள். அவர்களுடன் எங்கள் பாடசாலையில் நடக்கும் விழாக்கள், ஊர்ச்சங்கக் கூட்டங்கள், அரசியல் கூத்துக்கள், மொட்டைக் கடித விபரங்கள், குடும்ப விடயங்கள் என்று உறவுப்பாலங்களைப் பலமாக வைத்திருக்க இந்த Facebook சமூகவலையமைப்பு புகைப்படங்கள், வீடியோக்கள், கருத்துக்கள் என்று பல தளங்களிலும் பெரிய அளவில் உதவுகின்றது. இந்த சமூகவலையமைப்பு வசதிகள் சாதாரணமாக கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், கல்விமான்கள், அரசியவாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று எல்லோரும் பாவிக்க கூடிய வகையில் மிக எளிதாக அம்மைக்கப்படிருப்பதனால் இதன் பாவனையும் இது ஏற்படுத்திவரும் சமுதாயத் தாக்கமும் இளையவர்கள் சிந்திக்கும் மனோபாவத்தையே மாற்றி வருகிறது.

    Sunday, December 6, 2009

    மாமா வெளியில்... மருமகன் ஜெயிலில்... !!

    மாமா (இராணுவத்திலிருந்து) வெளியில்...., மருமகன் (அமெரிக்க) ஜெயிலில்....
    நன்றி - ஜீனியர் விகடன்

    ''சிங்கள ராணுவத்தின் ஹீரோ நானே!'' என்ற அறைகூவலோடு சேர்த்து, ''ராஜபக்ஷே கொடுக்கிற வாக்குறுதிகளைவிட அதிகப்படியான நன்மைகளை தமிழ் மக்களுக்கு செய்து காட்டுவேன்!'' என்று சொல்லி, தேர்தல் பிரசாரத்தை அட்வான்ஸாகவே தொடங்கிவிட்ட சரத் ஃபொன்சேகாவுக்கு... கெட்ட காலமும் கூடவே தொடங்கி விட்டது!

    அவருடைய மருமகன் தனுனா திலகரத்னே இப்போது அமெரிக்க போலீஸின் பிடியில். கப்பென்று அவரைக் கைது செய்திருக்கும் அமெரிக்க அதிகாரிகள், பகீர் ஆயுத வியாபாரக் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தியிருக்கிறார்கள்!

    தனுனா திலகரத்னே அமெரிக்காவில் இருந்தபடியே இலங்கை ராணுவத்துக்கு ஆயுத சப்ளை செய்கிறார் என்பது கடந்த சில மாதங்களாக இலங்கைப் பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்த கசப்பான குற்றச்சாட்டு. ''மாமனார் ராணுவத் தளபதி. மருமகன் ஆயுத சப்ளையர். இலங்கை ராணுவத் தரப்பிலிருந்து பறக்கிற ஒவ்வொரு தோட்டா விலிருந்தும், ஷெல்லில் இருந்தும் தளபதியின் மருமகன் லாபமாக அள்ளிக் குவிக்கிறார். தனுனா திலகரத்னே வாட கைக்கு




    எடுத்திருந்த கொழும்பு ஃபிளாட்டில் தற்போது தங்கி யிருப்பது அவருடைய ஆயுத ஏஜென்ட்டான அகமது நிசார்!'' என்று கூறி வந்தனர் சில பத்திரிகையாளர்கள். ''உயிரை அர்ப்பணித்து நாட்டுக்காக நாம் ஆயுதம் ஏந்திக் கொண்டிருக்க, தளபதியின் மருமகன் நோகாமல் அதைக் காசாக்குகிறாரா?'' என்ற குமுறல் சிங்கள ராணுவத்தினர் மத்தியில் பரவலாக இருந்து வந்ததாம்.

    ''அகமது நிசார் போல ராணுவ பேரத்துக்கான ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு ஏஜென்ட்களை தனுனா திலகரத்னே வைத்திருக்கிறார்.. சிங்கள ராணுவததின் விங் கமாண்டர் ஒருவருடன் கூட்டு சேர்ந்து உக்ரைனிலிருந்து விமானம் வாங்கியது, ராணுவ உடுப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை சீனாவிலிருந்து வாங்கியது என்று கமிஷன் பேரம் விளையாடியிருக்கிறது!'' என்றும் ராணுவத்தின் மத்தியில் ஒரு பேச்சு இருந்ததாம். அதெல்லாம், தனுனா கைதான நிலையில் இப்போது வெளிப்படையான விவாதமாக அங்கே அரங்கேற ஆரம்பித்திருக்கிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் புள்ளியின் தொடர்புகளும் வெளி வரலாம் என்று கூறப்படுகிறது.

    ''சிங்கள ராணுவ வீரர்களுக்கான உணவு சப்ளை கான்ட்ராக்டிலும் பலே ஊழல்கள் நடந்திருக்கின்றன. மோசமான பாக்கெட் உணவை மலேஷியத் தமிழர் ஒருவர் மூலமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய் ததில் பல கோடிகள் விளையாடியிருக்கிறது. அந்த உணவை சாப்பிட்டு செரிமானம் இல்லாமல் நம் வீரர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, அதை சப்ளை செய்த ஏஜென்ட்கள் ஐரோப்பிய உயர்தட்டு ஹோட்டல்களில் ஷாம்பெயின் குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர்!'' என்று ராணுவ வீரர்கள் மத்தியில் கொதிப்பான ஒரு கடிதமும் சில காலத்துக்கு முன் சுற்றில் விடப்பட்டிருந்ததாம்.

    ''வாங்கிய ஷெல்களில் கால்வாசி வெடிக்காமலே போனது. இதனால், விடுதலைப் புலிகள் தாக்கியபோது பதிலடி கொடுக்கத் தவறி அநியாயமாக நமது வீரர்கள் பலர் உயிரைவிட்டிருக்கிறார்கள்!'' என்று இப்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள் ராணுவத்துக்குள்.

    சரத் ஃபொன்சேகாவின் மகள் அப்ஸராவின் கணவர்தான் இந்த தனுனா திலகரத்னே. ஒக்லஹாமா மாநிலத்தில் எட்மன்டு என்ற நகரில் 'ஐ-கார்ப் இன்டர் நேஷனல்' என்ற கம்பெனி நடத்தும் இவர், 'கம்ப்யூட்டர் தொடர்பான பாகங்களை விற்கும் கம்பெனி' என்று போலியாக அரசு அனுமதி பெற்று, கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துவந்தார் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு!

    இதுபற்றி விஷயம் அறிந்தவர்கள், விளக்கமாக சில தகவல்களைக் கூறினர் -

    ''அமெரிக்காவில் 'ஹெச்-1 பி' எனும் வேலை விசாவில்தான் இருக்கிறார் தனுனா திலகரத்னே. தன் பார்ட்னர் குவிண்டா குணரத்னேவின் கையெழுத்தை ஃபோர்ஜரி செய்து, அவரையே தன் புது கம்பெனியின் தலைவராக 'நியமித்து' மோசடி செய்துள்ளார். மேலும், தனுனா வேலை விசாவைப் பெறுவதற்காக, போலியாக ஒரு கம்பெனியை உருவாக்கி அதைக் காட்டியே விசா பெற்றார் என்பதும் தெரியவந்துள்ளது.

    டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஃபிளவர் மவுன்ட் நகரில் 'பிரிட்டிஷ் போர்னியோ டிஃபன்ஸ்' என்ற நிறுவனத்தையும் துவக்கி, மெக்ஸிகோ வழியாக இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து ஆயுத சப்ளை செய்ய பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதை முழுக் குடியுரிமை பெற்ற அமெரிக்கர்கள்தான் செய்ய முடியும். இவரோ வேலைக்கான விசாவில் வந்துவிட்டு, ஆயுத விற்பனை நடத்தியிருக்கிறார்!'' என்கிறார்கள். ''தனுனா திலகரத்னேவின் ஏஜென்ட்டான அகமத் நிசார் மூலம் பெற்ற வெடிகுண்டுகளில் 40 சதவிகிதம் வெத்துவேட்டு!'' என்று இலங்கையின் 58-வது பிரிவு பிரிகேடியர் சூரஜ் பன்சாஜியா மற்றும் பிரிகேடியர் சிவேந்திரா சில்லா ஆகியோர் அதிபர் ராஜபக்ஷேயிடம் புகார் கூறியுள்ளதும் இப்போது கவனிக்கத் தக்கது!

    தனுனாவின் பாகிஸ்தான் தொடர்புகளைத் துருவும் அமெரிக்க அரசு, இவருக்கு அல்கொய்தா மற்றும் தாலிபன்கள் தொடர்புண்டா என்றும் ஆராய்வதாக ஒரு தகவல் கிளம்பி ஃபொன்சேகா வட்டாரத்துக்குப் புளியைக் கரைத்திருக்கிறது.

    மருமகன் கதை இப்படி டாப் கியரில் போகிறது... மாமனார் ஃபொன்சேகாவோ அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' உள்ள, நிரந்தர தங்கும் உரிமை பெற்றவர்!

    ''ஃபொன்சேகாவின் மருமகன் என்ன செய்து வந்தார் என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு இப்போதுதான் தெரிய வந்ததா என்ன? ராஜபக்ஷேவுக்கு எதிரான போர்க் குற்ற வாக்குமூலத்தை ஃபொன்சேகாவிடமிருந்து அழுத்தம் திருத்தமாகப் பெறுவதற்கும், இலங்கை தேர்தல் களத்தில் ராஜபக்ஷேவுக்கு எதிராக அவரை வெறியோடு சுழல வைப்பதற்காகவும்தான் மருமகன் விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறது அமெரிக்கா! மருமகன் சேர்த்த பணத்தை ஃபொன்சேகா உதவியோடு சுவிஸ் வங்கிக்கு மாற்றினார்களா என்ற கோணத்திலும் அடுத்த கட்ட விசாரணையைக் கொண்டு போகக்கூடும். அப்புறமென்ன... ஃபொன்சேகா முழுக்க முழுக்க அமெரிக்கா கீ கொடுக்கும் பொம்மையாக மாற வேண்டியதுதான்!'' என்கிறார்கள் அமெரிக்காவில் உள்ள விவரமான இலங்கைத் தமிழ்ப் புள்ளிகள்.

    ஆர்பாட்டம் இல்லாத மனிதர் இயக்குனர் ஷங்கர்

    நன்றி - ஆனந்த விகடன்


    மிழ் சினிமா வர்த்தகத்தைக் கோடிகளில் ஹிட்டடிக்கவைத்த காஸ்ட்லி மாஸ்டர். கனவுக்கு கலரும் கோபத்துக்கு கிராஃபிக்சுமாக வெரைட்டி காட்டும் இயக்குநர் ஷங்கரின் பெர்சனல் பக்கங்கள்...

    குங்குமம்' படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் பெயர் ஷங்கர். அப் படத்தைப் பார்த்த ஷங்கரின் அம்மா, 'தனக்கு ஒரு மகன் பிறந்தால் ஷங்கர் என்று பெயர் வைப்பேன்!' என்று சொல்லிக்கொண்டு இருந்தாராம். சொல்லிவைத்தது போல அவருக்குப் பிறந்த மகன் 'ஷங்கர்' ஆனார்.

    நடிகராகும் ஆசையில் தமிழ் சினிமாவுக்கு வந்தவர், சின்னச் சின்ன வேடங்களில் காமெடி பண்ணியதோடு சரி. ஷங்கர் கடைசியாகத் தலை காட்டிய படம் 'சிவாஜி'. 'எந்திர'னிலும் எட்டிப் பார்ப்பாராம்!

    ஷங்கர் டி.எம்.எஸ். குரலில் பாடுவதை வீட்டிலும் அலுவலகத்திலும் கேட்கலாம். ரஹ்மானுக்குப் பாடிக் காட்டினாரா எனத் தகவல் இல்லை!

    வீட்டில் டிரெட்மில் வைத்திருக்கும் ஷங்கர், 'எனக்குத் தொப்பை விழுந்திருக்கா?' என அடிக்கடி இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் கேட்பார். தன்னைத்தான் கிண்டலடிக்கிறாரோ எனக் கலவரமாவது பாலாஜி பழக்கம்!

    சினிமாவின் எந்தச் சாயலும் இல்லாமல் வளரும் ஷங்கரின் குழந்தைகள் ஐஸ்வர்யா, அதிதி, அர்ஜித் படிப்பது லேடி ஆண்டாள் பள்ளியில்!

    தினமும் ஒரு மணி நேரமாவது ஷட்டில்காக் விளையாடுவார் ஷங்கர். விளையாட்டில் அவரது உதவி இயக்குநர்கள்தான் பார்ட்னர்கள்.

    மீன் உணவுகள் ஷங்கரின் ஃபேவரைட். மதுரை கோனார் மெஸ், அம்மா மெஸ்களின் சிறப்பு அசைவ உணவுகள் ரொம்பவும் பிடிக்கும்!

    நகைகள் மீது ஈர்ப்பு இல்லாதவர். ஆனால், இப்போது மனைவி கொடுத்த ஒரு வைரக் கல் பதித்த பிளாட்டினம் மோதிரம் விரலில் மின்னுகிறது!

    சினிமாவில் கால் பதிக்குமுன் சென்னை 'ஹால்டா' கம்பெனியில் பணிபுரிந்தவர். அப்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு மூன்று நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார் ஷங்கர்!

    இந்தியாவிலேயே ஷங்கரைவிட நிதானமாக கார் ஓட்டுபவர் வேறு எவரும் கிடையாது. க்ரீன் சிக்னல் விழாமல் கியர் தொடவே மாட்டார். ஒரு ரிவர்ஸ் எடுக்க 15 நிமிடங்களாவது ஆகும் இவருக்கு!

    தொடர்ந்து சிகரெட் புகைத்து வந்தவர் 'பாய்ஸ்' படத்தோடு அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டார். 'எப்படி சார் சிகரெட்டை விட்டீங்க?' என்று இன்றும் ரஜினிகாந்த் ஷங்கரிடம் பொறாமையாக விசாரிப்பாராம்!

    எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குப் போனாலும் தரையிறங்கியவுடன் தன் மனைவி ஈஸ்வரிக்குத் தன் இருப்பிடம் குறித்த தகவல் சொல்லிவிடுவார் ஷங்கர்!

    ஷங்கரின் காஸ்ட்யூமர் அவரது மனைவிதான். ஷங்கர் எப்போதும் கடைகளுக்குச் சென்று உடைகள் வாங்கியது கிடையாது. விழாக்களுக்கு பிளாக் பேன்ட், பிளாக் சூட் அணிந்துகொள்ள விரும்புவார்!

    ஷங்கர் மிகவும் ஆசைப்பட்டு ஸ்க்ரிப்ட் செய்த படம் 'அழகிய குயிலே'. ஆனால், அதைப் படமாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் இன்னொரு பிரமாண்ட வாய்ப்பு வாசல் கதவைத் தட்டும்!

    குடும்பத்தினருக்காக மட்டுமே அவர்களுடன் கோயிலுக்குப் போவார். மற்றபடி நல்ல நாள், கெட்ட நேரம் போன்றவை குறித்து அலட்டிக்கொள்வது இல்லை!

    பக்கத்து வீட்டிலேயே சூர்யா வசித்தாலும், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருடன் 14 படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருந்தாலும் இன்னும் அந்த இரு ஹீரோக்களை வைத்துப் படம் இயக்கவில்லை ஷங்கர்!

    ஷங்கர் பக்கா பங்ச்சுவல். 'டைரக்டர் லேட்டாத்தானே வருவார்' என்று யாரும் அசட்டையாகச் சென்றால், செட்டில் பரபரபப்பாக இயங்கிக்கொண்டு இருப்பார் இயக்குநர் ஷங்கர்!

    1993-ல் ஜென்டில்மேன் துவங்கி காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், நாயக், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என ஒன்பது படங்கள் இயக்கியிருக்கும் ஷங்கரின் பத்தாவது படம் 'எந்திரன்'.

    முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்கிறார் ஷங்கர். 'அந்நியன்' பட வேலைகளின் போது கிளைவிட்ட ஆர்வம் இது.

    ஷூட்டிங் ஸ்பாட்டில் அரட்டை, சிரிப்பெல்லாம் கிடையாது. ஸ்பாட்டில் ஏதேனும் கோபமூட்டுவது போல நடந்தால், கொஞ்ச நேரம் அங்கிருந்து மறைந்துவிடுவார்!

    உதவி இயக்குநர்களுக்கு நிலையில்லாத மினிமம் சம்பளம், குறைந்தபட்ச வசதி என்று இருந்ததை, மாதச் சம்பளம், டூ வீலர் வசதி என நிலைநிறுத்தியவர் ஷங்கர்!

    ஷங்கரை மிகவும் பாதித்த படம், 'சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன்'. பல முறை பார்த்திருந்தாலும் இன்னும் இன்னும் என்று நேரம் கிடைக்கும்போது எல்லாம் அந்தப் படத்தைப் பார்ப்பார் ஷங்கர்!

    கைக்கடிகாரங்களின் காதலன் ஷங்கர். விதவிதமான கடிகாரங்களைச் சேகரித்திருக்கும் ஷங்கர், கையில் கட்டிஇருக்கும் கடிகாரத்தைக் கழற்றி மேஜையில் வைக்கும்போது, அதற்கு வலிக்குமே என்பது போல பதமாக இருத்துவார்!

    ஆகஸ்ட் 17-ம் தேதி பிறந்த நாளுக்கு வீடுதான் ஸ்பாட். குழந்தைகள்தான் அவரது உடனிருக்கும் தோழர்கள்!

    நீங்களே தனியாக ஒரு பாடல் பாடுங்களேன்!' என்று ஏ.ஆர்.ரஹ்மான் கேட்டதற்கு, வெட்கப்பட்டு மறுத்த ஷங்கர் 'காதலன்' படத்தின் பேட்டை ராப் பாடலில் 'பேட்டை ராப்' என்று மட்டும் குரல் கொடுத்திருக்கிறார்!