குளியல் அறைக்குள் இருந்தவாறே, தாம் செய்வதன் பாரதூரம் புரியாத இளம்வயதினர் தமது அந்தரங்க படங்களையும் கண் இமைக்கும் நேரத்தில் இணையத்தில் பதிவு செய்து விடுகிறார்கள். இந்த படங்களை வைத்துக்கொண்டு அந்த நிமிடத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை இந்த சிறுவர்கள் அறிந்திராதிருப்பது மட்டுமில்லாமல் சிந்திப்பது கூட இல்லை. இணையதளத்தில் ஒரு செய்தியோ, புகைப்படமோ பதியப்பட்டவுடன் வேறு ஆயிரக்கணக்கான பக்கங்களில் ‘உடனடியாக’ பிரதி செயப்பட்டுவிடும். பின்னர் நீங்கள் உங்கள் இணையப்பக்கத்தில் இருந்து அவற்றை அழித்தாலும், பிரதி செயப்பட்ட பக்கங்களில் இருந்து அழிக்கவே முடியாது. அண்மையில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இளம் பெண்ணின் தந்தை இந்த இணையவலையமைப்பில் சிக்கிக்கொண்ட தன் மகளுக்கு உதவமுடியாமல், தற்கொலை செய்து விடலாமா என்ற நிலைக்கு தலைப்பட்டார். அந்த இளம் பெண் தான் செய்த தவறை உணர்ந்தாலும், அது காலம் பிந்தியதாக இருந்தது. கதை இது தான், பாடசாலையில் ஏற்பட்ட நட்பு காரணமாக ஒரு நண்பனுடன் Facebook Accountஐ அந்தப்பெண் பகிர்ந்துகொண்டார். தங்கள் உறுதியான நட்பின் அடையாளமாக இருவரும் பல புகைப்படங்களை Facebookஇல் வெளியிட்டுக்கொண்டார்கள். ஒரு சிறிய காரணத்தினால் இவர்களுடைய நட்பில் பிளவேற்பட்டது. நண்பியைப் பழிவாங்க முடிவுசெய்த அந்த நண்பன், தன்னுடைய நண்பியின் Facebook Account இன் Passwordஐ மாற்றிவிட்டான். மேலும் அந்த பெண் தன்னைப்பற்றி தானே எழுதுவது போன்று பலவிடயங்களை கீழ்த்தரமாக எழுதியதுடன், வெளிவிடக் கூடாத பல அந்தரங்க படங்களயும் அந்த பெண்ணின் இணையப் பக்கத்தில் வெளியிட்டு தன் பழி உணர்வைத் தீர்க்கத் தொடங்கினான். அந்தப் பெண்ணோ, தன்னுடைய Facebook Accountஇன் புதிய Password இல்லாததால் ஒன்றுமே செயமுடியாமல் நிர்க்கதியானாள்.
பொதுவாக இந்த இணைய சேவைகள் இலவசமானவை என்பதால், உங்கள் தொலைந்த Passwordகளை மீளவும் எடுத்து தர உதவக்கூடிய நேரடி தொடர்பு இலக்கங்களோ வசதிகளோ இருப்பதில்லை. நீங்கள் ஒரு Accountஐ திறக்கும் போது அதனுடன் சம்பந்தமான Password Recovery போன்ற வசதிகளை பாதுகாப்பாக, முன்னேற்பாடாக செய்து கொள்ளவேண்டும். அவற்றையும் தொலைத்தால் “அரோகரா!” தான். பல்வேறு முறைகளால் தேடி, மீளவும் Passwordஐ கண்டுபிடிக்கும் போது காலம் கடந்துவிட்டிருக்கும்
திருமணம் செய்ய இருப்பவர்கள் ஒருவர் ஒருவரைப்பற்றி அறிந்துகொள்ளவும், நிறுவனங்கள் தாம் பணிக்கு அமர்த்தவிருப்பவர்கள் பற்றி அறிவதற்கும், காவல்துறையினரின் புலனாய்வுகளுக்கும் கூட இந்த Social Networkகளில் கிடைக்கும் தகவல்கள் மிக மிக உதவியாக இருக்கின்றன. இந்த வகையில் பல முக்கியமான முடிவுகளுக்கு இந்த இணையத் தளங்களில் கிடைக்கும் தகவல்களே ஆதாரமாக அமைந்து விடுகின்றன. இதிலிருந்து இந்தவகை இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் தகவல்களில் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
கனடாவில், 29 வயதுடைய நட்டாலி ப்லஞ்சார்ட் என்ற பெண்மணி தனது மன அழுத்தத்தை காரணம்கூறி, அவர் பணிபுரிந்த IBM நிறுவனத்தில் இருந்து 2008ஆம் ஆண்டுமுதல் நீண்டநாள் விடுப்பு எடுத்து, அதற்குரிய மாதாந்தக் கொடுப்பனவை வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொண்டிருந்தார். இந்த பணத்தை அனுப்பிக்கொண்டிருந்த Manulife காப்புறுதி நிறுவனம், பணம் அனுப்புவதனை திடீரென நிறுத்திக்கொண்டது. ‘இது அநியாயம்’ என்று காப்புறுதி நிறுவனத்தை நட்டாலி தொடர்புகொண்டார். காப்புறுதி நிறவனம், நட்டாலி தனது Facebook பக்கத்தில் பதிவுசெய்திருந்த, அவருடைய பிறந்தநாள், விடுமுறைப் புகைப்படங்களில் அவர் மகிழ்வாக வாழ்வதனைச் சுட்டிக்காட்டியது. நீங்கள் பணிக்குப்போகக் கூடிய மகிழ்வான மனநிலையில் இருப்பதால் உங்களுக்கு கொடுப்பனவு இல்லை என்று Manulife காப்புறுதி நிறுவனம் கூறிவிட்டது. Facebookஇல் தான் பதிவேற்றிய புகைப்படங்களால் நட்டாலி நொந்துபோயிருக்கிறார்.
Facebook போன்ற சமூகவலையமைப்புகள் இளம் பருவத்தினரிடம் தான் பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றது என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். கணிணித் துறையில் இருப்பவர்கள் Facebook போதை ஃ பித்து பிடித்து அலைகிறார்கள். இதனால் அதிகமான கணினி மயப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் Facebook போன்ற தளங்களைப் பாவிப்பது தடைசெயப்பட்டுள்ளது. அடிக்கொரு தடவை தமது இணையப் பக்கத்தை பார்க்காவிட்டால் ‘மூச்சு விட முடியாத” அவஸ்த்தைப் படுபவர்களையும் சந்த்தித்துளேன்.
பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளிகளுக்கு இந்த Social Networkகள், அவர்களின் ஆபாச வெறிகளை அப்பாவி இளம் பருவத்தினர் மீது திணிப்பதற்கு ஒரு முகத்திரையாகவே உதவுகின்றன. பெரும்பாலும் இவர்கள் தமது இளவயதுப் படங்களையும், பொய்யான வயதினையும் தங்களின் Facebook இணைய அடையாளமாக காட்டிக்கொள்வார்கள். தமது சாமர்த்தியமான உரையாடல்கள் மூலம்இ வெள்ளை மனம் கொண்ட அப்பாவி இளம் பெண்களையும், ஆண்களையும் வீட்டை விட்டு வெளியேறி (ஓடி) தம்முடன் வரும்படி செய்துவிடுகிறார்கள். சிலவேளைகளில் முகமே தெரியாத இந்த தொடர்புகள் கொலை, பாலியல் வல்லுறவு, பழிவாங்கல், ஆட்கடத்தல் என்று எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன.
அண்மையில் ஒரு பெண்ணின் தாய் தன் மகளின் தோழி தன் மகளை விட நன்றாக படிக்கின்றார் என்ற ஆதங்கத்தில் தன்னை ஒரு ஆணாக Facebookஇல் அறிமுகப்படுத்தி, அந்த கெட்டிக்கார பெண்ணை தனக்கு காதலியாக வசியம் செய்தார். இதையறியாத அப்பாவிப்பெண்ணும் இந்த மாயக் காதல் வலையில் வீழ்ந்துவிட்டார். பின்னர் சரியான சந்தர்ப்பம் வந்ததும், அந்தப்பெண்ணின் மனம் மிகவும் புண் படும்படியாக வார்த்தைகளை கொட்டி, அவரிடம் இருந்து விலகுவதாகக் கூறி நாடகமாடியிருக்கிறார். அந்த மனங்குழம்பிய இளம் பெண், தன் பெற்றோரிடம் தன மனநிலையைப் பற்றிக்கூறிய போதும் அவர்கள் கண்டுகொள்ளாததால், ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டாள். இணையத் தொடர்பாடல்கள், குற்ற, வன்முறைகள் பற்றி சரியான, தெளிவான சட்ட முறை இன்னமும் இல்லாத நிலையில் அந்த குற்றமிழைத்த பெண் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விட்டார்.
“ஐயோ, ஐயோ.. ஐயோ... இவ்வளவு கொடுமையான சம்பவங்களை ஏற்படுத்தும் இந்த சமூக இணையத்தளங்களை ஏன் இணையத்தில் வைத்திருக்கிறார்கள்?” என்று நீங்கள் தலையில் அடித்துக் கொள்ளலாம். இணையம் என்பது ஒரு பெரிய நூலகம் போன்றது. அங்கு நாம் எதைத் தேடுகின்றோம், எப்படி நமது நேரத்தை செலவு செய்கின்றோம் என்பது முக்கிமானது. அதுமட்டுமன்றி நாம் நம் குழந்தைகளை நூலகத்திற்கு கூட்டிச்சென்று, அவர்கள் பின்னாலேயே எந்தப் பகுதிக்குப் போகவேண்டும், எந்தப் புத்தகத்தை வசித்தால் நல்லது, அந்த நூலகத்தில் நடக்கும் வேறு நிகழ்ச்சிகளில் எது நல்லது, எது தேவையற்றது என்று அறிவுறுத்துகிறோமல்லவா? அதுபோலவே இணையத்தையும், இந்த வகையான சமூக இணையத்தளங்களையும் பாவிக்கும் போதும் வழிகாட்டி அழைத்துச்செல்ல வேண்டும்.
இப்படிப்பட்ட அனர்த்தங்களில் இருந்து உங்களை எப்படி பாதுகாத்து கொள்ளலாம்..?
இப்படிப்பட்ட இணையதளங்களில் நீங்கள் எழுதும் கருத்துக்களும், பதிவேற்றும் புகைப்படங்களும் காற்றில் விட்ட வார்த்தைகள் போன்றவை. அவற்றைப் பதிவுசெய்த பின் அவை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதை முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும்.
உங்கள் User name / password போன்றவை உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாகவும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத, ஏழு எழுத்துகளுக்கு குறையாததாகவும், இலக்கங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருப்பது நல்லது. Password Recovery Option பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.
பெற்றோர் தம் குழந்தைகளுடைய இணையத்தள பதிவுகளைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல் அவர்களுடைய நண்பர்களுடைய இணையப் பதிவுகளையும் கண்காணிப்பதன் மூலம் நண்பர்களைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள முடியும்.
பிள்ளைகளின் Username / Password போன்றவற்றை நீங்களும் வாங்கி வைத்திருந்து, சிலதடவைகள் அவை வேலை செய்கின்றதா என்பதனை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை, உங்கள் தனிப்பட்ட அடையாளத்துக்கும், பாதுகாப்புக்கானதுமே என்ற எண்ணத்தை வலுவாக மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
சரி, இந்த Social Network இணையத்தளங்களால் நன்மைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்? நிச்சயமாக உண்டு. சரியான முறையில் பாவிக்கும்போது இவை நமக்கு நன்மை பயக்கும் தொடர்பூடகமாவே மாறிவிடுகின்றன. இதை யாருடைய கையில் ஒரு கூரிய கத்தி இருக்கின்றது என்பதுடன் ஒப்பிடலாம். ஒரு வைத்தியரிடமா? அல்லது ஒரு கொலைகாரனிடமா? கத்தி ஒரு உயிரற்ற சடம். அது இருக்கும் கையைப்பொறுத்து ஒரு உயிரைக் காப்பாற்றும் அல்லது குடிக்கும்.
கடந்த முறை நடந்த அமரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் முக்கிய வேட்பாளராகக் கருதப்பட்டவர் ரூடி கூலியானி. முன்னாள் நியூயோர்க் மாகாண மேயர். செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர். இரட்டைக்கோபுர தாக்குதல் சம்பவத்தை கூலியானி கையாண்ட விதம் அவருக்கு மேலும் செல்வாக்கை அதிகரித்திருந்தது. பராக் ஓபாமாவை எதிர்கொள்ள சரியான தலைவராக அவர் கருதப்பட்டார்.
அவருடைய 17 வயது மகள் கரோலின் தான் ஒரு ஒபாமாவின் ஆதரவாளர் என்றும் 'One million strong for Barack' என்ற குழுவில் அங்கத்துவம் வைத்திருப்பதாகவும் தனது Facebook பக்கத்தில் எழுதிவைத்தார். ஸ்லேற் (www.slate.com) எனும் இணைய சஞ்சிகை இதை வெளிவிட்டதும் பூதம் கிளம்பியது. உடனடியாக கரோலின் அந்தப் பதிவை அழித்தபோதும் அவரது பக்கத்தை அச்சு அசலாக பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. தனது மகளின் ஆதரவையே பெற முடியாதவர் அனைத்து மக்களின் ஆதரவை எவ்வாறு பெறப்போகிறார் என்று விமர்சனம் எழுந்தது. செல்வாக்கு சரிந்தது. வேறுபல காரணிகளும் தொற்றிக்கொள்ளஇ இறுதியாக கூலியானி குடியரசுக்கட்சியின் அதிபருக்கான வேட்பாளர் தேர்தலிலிருந்து விலகிக்கொண்டார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வெற்றிக்கு இந்த Social Networkகுகள் பெரும் உதவியாக இருந்தன. ஒபாமா இளைஞர்களை ஒன்றுகூட்டவும், உடனுக்குடன் செய்திகளை வெளிவிடவும், போட்டியாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மிகவேகமாகப் பதிலளிக்கவும் இவ்வகையான சமூகவலையமைப்புகளை மிகலாவகமாகப் பாவித்தார். ஹிலரி கிளின்டனைவிடவும் ஒபாமா சமூகவலையமைப்புகளைப் பாவித்தமை அதிகமாக இருந்தது. ஒபாமா தனது அறிமுக உரையைக் கூட இணையத்தினூடகவே நிகழ்த்தி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். இன்றைய நவீன உலகில் இருக்கும் எல்லா முக்கியஸ்தர்களும் தங்களுக்கு என்று ஒரு இனையத்தளம் வைத்திருப்பது மட்டுன்றி Facebook போன்ற சமூகவலையமைப்புகளிலும் அங்கத்தவராக இருந்து தம்முடைய அறிக்கைகளையும், திட்டங்களையும், செயற்பாடுகளையும் மிக எளிதாகவும், விரைவாகவும் வெளிக்கொண்டுவருகிறார்கள். நம்முடைய சூர்யா, கமல்ஹாசன் முதல் ஜிம்கரி, மடோனா என்று எல்லோரும் இதில் அடங்குவார்கள்.
பல சமுதாய புரட்சிகளுக்கும் இந்த சமூகவலையமைப்புகள் காரணமாக இருக்கின்றன. வீதியோர, அரசியல் எதிர்ப்பு, இயற்கை நலம்காக்கும் போராட்டங்கள், உடல் நலம் காக்கும் சங்கங்கள், இயற்கை வைத்திய முறை, கணினி வல்லுனர்கள் கருத்து மையம், சிறுவர் பராமரிப்பு முறை குழுமம், வைத்தியர்கள் மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் என்று ஏராளமான, வலுவான குழுமங்கள் சமுதாயப் புரட்சியை ஏற்படுத்துகின்றன. இதன் மூலமாக சிறந்த வேலை வாய்ப்புக்களையும், புதிய உத்திகளையும், நல்ல தொழில் நிறுவனங்களையும் பலர் ஆரம்பிக்கிறார்கள்.
ரூம் போட்டு சிந்திப்போர் சங்கம், வேலைக்கே போகாத கணவன்மார்கள் சங்கம், பழைய சோற்றை பிசைந்த படியே யோசிப்போர் சங்கம் என்று ரொம்ப அசத்தலான குழுமங்களும் உண்டு. இணையத் தளத்தினூடாக விளம்பரம் செய்ய விரும்பும் அல்லது வியாபாரம் செய்யும் அத்தனை நிறுவனங்களும் இந்த சமூகவலையமைப்புகளை (பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகளை விட) மிக அதிகமாக விரும்புகின்றன.
என்னுடைய 99வீதமான பாடசாலை மற்றும் பால்ய நண்பர்கள் பல்வேறு துறைகளிலும், பல ஊர்களிலும் இருக்கிறார்கள். அவர்களுடன் எங்கள் பாடசாலையில் நடக்கும் விழாக்கள், ஊர்ச்சங்கக் கூட்டங்கள், அரசியல் கூத்துக்கள், மொட்டைக் கடித விபரங்கள், குடும்ப விடயங்கள் என்று உறவுப்பாலங்களைப் பலமாக வைத்திருக்க இந்த Facebook சமூகவலையமைப்பு புகைப்படங்கள், வீடியோக்கள், கருத்துக்கள் என்று பல தளங்களிலும் பெரிய அளவில் உதவுகின்றது. இந்த சமூகவலையமைப்பு வசதிகள் சாதாரணமாக கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், கல்விமான்கள், அரசியவாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று எல்லோரும் பாவிக்க கூடிய வகையில் மிக எளிதாக அம்மைக்கப்படிருப்பதனால் இதன் பாவனையும் இது ஏற்படுத்திவரும் சமுதாயத் தாக்கமும் இளையவர்கள் சிந்திக்கும் மனோபாவத்தையே மாற்றி வருகிறது.
No comments:
Post a Comment
நிறையவே திட்டவேணும்போல இருக்கும்... இருப்பினும் அவையடக்கமாய் ஒரு சில வார்த்தைகள் கிறுக்குங்கள்.