
ஐசாக் நியூட்டன் ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். இவரது வாழ்நாள் அக்காலத்தில் வழக்கிலிருந்த ஜீலியன் நாட்காட்டியின்படி டிசம்பர் 25, 1642 இலிருந்து மார்ச் 20, 1727 வரை எனவும் பின்னர் திருத்தப்பட்ட தற்போது வழக்கிலுள்ள ஜோர்ஜியன் நாட்காட்டியின்படி ஜனவரி 4, 1643 இலிருந்து மார்ச் 31, 1727 வரையும் இருந்ததாக அறிய முடிகிறது.
நியூட்டன் இங்கிலாந்து நாட்டில், லிங்கன்ஷயர் கவுண்டியில் கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார்.
நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். 1661 ல் கேம்பிறிஜ் திரித்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல் அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவேயிருந்தது. ஆனால் நியூட்டன்; டெஸ்கார்ட்டஸ், கலீலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களைக் கற்கவிரும்பினார். 1665 ல் பைனோமியல் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட புதிய கணிதத் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். 1665ல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்கள் வீட்டிலிருந்தபடியே நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார்.
புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார். இவர் அறிவியல் புரட்சியுடனும், சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார். கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு. வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும், அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து மேற்படி விதிகளை விரிவாக்கினார். வெண்ணிற ஒளிஇ பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரே. ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார்.
No comments:
Post a Comment
நிறையவே திட்டவேணும்போல இருக்கும்... இருப்பினும் அவையடக்கமாய் ஒரு சில வார்த்தைகள் கிறுக்குங்கள்.